இக்கரைக்கு அக்கரை பச்சை — நங்கநல்லூர் J.K. SIVAN
நம் எல்லோருக்குமே ஒரு குணம். மற்றவரோடு நம்மை ஒப்பிடும் வழக்கம். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ஏக்கப் பெருமூச்சு எப்போது விடுவோம்? நம்மை விட அழகாக இருந்தால், அவருக்கு புகழும் பெருமையும் சேரும்போது? கொஞ்சம் ஐவேஜ் அவரிடம் அதிகம் இருந்தால், அதிசயமாக லாட்டரியில் அவருடைய டிக்கெட் மட்டும் பணம் பெற்றால், இது போல் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். இது மனித ஸ்வபாவம். இதை விட ஆச்சர்யமாக சில நிகழ்வுகள் நடக்கும்போதும் மூக்கின் மேல் விரல் வைக்கிறோம். அது எப்போது?
ஊரறிந்த பிரபல கேடி, திருடன், கொள்ளைக்காரன், நான் உங்கள் தலைவனாகி உங்களுக்கு சேவை செயகிறேனே, என்னை ஆதரியுங்கள், என்னைப் போல் நல்லவனை நீங்களோ இந்த நாடோ பார்த்திருக்க முடியாது, என்னைப் பற்றி வேண்டாதவர்கள் தானே தப்பும் தவறுமாக சொல்கிறார்கள், நான் அப்பாவி, என்று சூரிய வெளிச்சத்தில் வந்து நம்மெதிரே நின்று அறை கூவும்போது. நாமும் நிறையபேர் அவர்களை ஏற்றுக் கொண்டு நாமாக தேடிக்கொண்ட நன்றாக வாழ்க்கையில் பரிதாப நிலையில் தள்ளப்படுகிறோமே அப்போது. அப்போது விடும் பெருமூச்சு நாம் ஏமாந்தபிறகு. கையாலாகாமல் போனபோது. நாம் எடுத்த முடிவுக்கு, காசு வாங்கிக்கொண்டு செய்த காரியத்துக்கு, நம் வினைக்கு கூலி பெற்றபோது.
பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும், மானம், மரியாதை, மதிப்பு பதவி, தலைமை எல்லாமே கூட என்று நம்புபவர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
ஆமாம்…. மனச்சாட்சி என்று ஏதோ இருக்கிறதாமே அது……
”சே சே அதெல்லாம் ஏதோ புராணங்களில் பழைய பேப்பர் கடை புத்தகங்களில் அல்லவோ பார்க்கலாம்..!”
கொஞ்சம் யோசிப்போம். விலங்குகள் பறவைகளுக்கும் இது போல் ஒருவரை ஒருவர் கம்பேர் (compare) பண்ணும் குணம் மனிதரிடமிருந்து தொத்து நோயாக பரவி இருந்தால்? ஒரு சிறு கதை சொல்கிறேன்.
காட்டில் மாமரத்தின் கிளையில் ஒரு காகம். தனது குடும்பத்தோடு கா கா என்று பாடிக்கொண்டு ( சி.எஸ். ஜெயராமன் போல் அல்ல) சந்தோஷமாக வசித்தது. ஒருநாள் ஒரு வெள்ளை நிற வாத்தை பார்த்தது.
அதன் பாட்டு நின்றது. சந்தோஷம் மறைந்தது. சே!. எனக்கு மட்டும் ஏன் இந்த கருப்பு கலர்? அதனால் தான் வாத்து சந்தோஷ அன்ன நடை நடக்கிறதோ?
”வாத்தியாரே நீங்கள் வெள்ளை வெளேர் என்று இருப்பதில் உங்களுக்கு பெருமையோ, சந்தோஷமோ?
”எப்படியப்பா கண்டுபிடித்தாய். கொஞ்சம் கர்வம் இருந்தது. ஆனால் அது அந்த ரெட்டை கலர் கிளியை பார்க்கும் வரை. நிச்சயம் என்னை விட அவன் அழகானவன். சந்தோஷமானவன் தான்.. ஹும்ம் ! அதற்கு நான் என்ன செய்வது?” என்றது வாத்து.
காகம் விடவில்லை, ரெட்டை நிற கிளியை சென்று பார்த்து விசாரித்தது.
” நீ நினைப்பது தப்பு. எனக்கு என்ன பெரிய சந்தோஷம் இந்த ரெட்டை நிறத்தில், ஆஹா, நான் பார்த்த அந்த மயில் முன்னால் என்னுடையது ஒரு கலரா?. அதன் மதிப்பும் பெருமையும் எனக்கு என்றைக்கு கிடைக்குமோ? என புலம்பியது கிளி.
மயிலை எங்கு தேடுவது?
யோசித்த காகம் வண்டலூரில் மிருக காட்சி சாலைக்குள் டிக்கெட் வாங்காமல் பறந்து நுழைந்தது. கூண்டில் ஒரு மயில். அந்த கூண்டை சுற்றிலும் பெரிய கும்பல். அவர்கள் போகும் வரை ஒரு மரக்கிளையில் அமர்ந்து பிறகு மெதுவாக மயிலிடம் சென்றது காகம்.
”ஏ அழகு மயிலே, எவ்வளவு அழகு நீ. ஆயிரக் கணக்கானோர் வந்து உன்னை பார்க்கிறார்கள். நான் அவர்கள் கண் முன்னால் போய் நின்றால் எனக்கு கிடைக்கும் வரவேற்பு ” சூ”என்று என்னை விரட்டுவது தான். நீ கொடுத்துவைத்தவன் சந்தோஷமாக இருக்கிறாய்””வாஸ்தவம். என்னிடம் சர்க்கரை இருந்தால் உன் வாயில் போடுவேன். நானும் முதலில் அப்படி தான் நினைத்தேன். என் அழகு தான் இந்த கூண்டில் கொண்டுவந்து என்னை நிறுத்தியிருக்கிறது. என் குடும்பம் எங்கேயோ நான் எங்கேயோ. இந்த சிறை வாழ்க்கை யாருக்காவது சந்தோஷம் தருமா.சொல்?”
”ஓ அப்படியா சேதி?” திடுக்கிட்டது காக்கை.
”இதோ பார் காக்கையாரே. நான் நிறைய யோசித்தாகி விட்டது. ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக் கிறேன். பிறந்தால் உன் போல் காகமாகப் பிறக்க வேண்டும். மற்ற எல்லாப் பறவைகளையும் பிடித்து கூண்டில் போட்டு விடுகிறார்கள் இந்த மனிதர்கள். நீ ஒருவன் தான் சுதந்திரமாக பறக்கிறாய். வாழ்கிறாய்.’
நீ புண்ணியம் செய்தவன். கிருஷ்ணன் கலர் நீ. உன்னை மாதிரி இருந்தால் நானும் எங்கெல்லாம் சந்தோஷமாக உலவுவேன். சுற்றுவேன்!!.
காக்கை நிறைவோடும் ”சந்தோஷத்தோடும்” திரும்பியது.
இந்த நந்தலாலா காக்கையிடமிருந்து நாம் தெரிந்து கொள்வோம். எவரையும் ஒப்பிட வேண்டாம். துக்கம் தவிர்ப்போம். கிருஷ்ணன் தெரிந்து தான் அவரவருக்கு இன்ன இன்ன தேவை என்று அளந்து அறிந்து தந்திருக்கிறான். சந்தோஷம் மனதில் தான் இருக்கிறது. இனத்திலோ நிறத்திலோ இல்லை. இன்னொரு வார்த்தையும் சேர்த்துக் கொள்வோம் பணத்தால் வருவது அழகோ, மதிப்போ, மரியாதையோ, உயர்வோ, தலைமையோ இல்லை.
பண்பு வேறு பணம் வேறு. பண்பு தானே உருவாகி மற்றவரை ஈர்ப்பது. பணம் அது ஜீரணம் ஆகி வெளியே வந்தபின் மீண்டும் தேடுவது..