காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். நங்கநல்லூர் J.K. SIVAN
இந்த பரந்த அழகான உலகில் நாம் கொஞ்ச கால விருந்தாளிகள். இந்த உபசாரம் எத்தனை நாளைக்கு, எப்போது முடியும் என தெரியாது. முன்னறிவிப்பு கிடையாது. ஒருநாள் திடீர் என்று கல்தா.பணம் சந்தோஷத்தை தரவே தராது. அதால் பயம் தான் வரும்.நிம்மதி போகும். ஆபத்து தான் அதிலும் முதியவர்களுக்கு என்பதை எங்கும் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளை அன்றாடம் அறிகிறோம்.பண்டமாற்றுதல் ரொம்ப தொந்தரவாக இருந்ததால், தொல்லை தந்ததால் வாங்குவதற்கு விற்பதற்கு பணத்தை மனிதன் கண்டுபிடித்தது ரொம்ப நல்லது. ஆனால் அதுவே ஆபத்தாய் முடியும் போது அது மருந்தே விஷமாவது போல் ஆகிவிடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அம்ருதம் கூட விஷம் தானே.எல்லோருக்கும் பணக்காரர்கள் ஆக ஆசை. நிறைய பணம் கிடைத்தால் ஆனந்த சுகமான வாழ்வு என்பது பகல் கனவு. தேவைக்கு மேல் பணம் இருந்தால் அதனால் துன்பம் தான் விளையும் என்பது அநேகர் அனுபவம். பணம் உறவை துண்டிக்கும். சந்தேகம் பொறாமை, விரோதம் இவற்றை குடும்பத்தில் வளர்க்கும்.எல்லோருடனும் நேசம்,பாசம், அன்பு ஆனந்தம் தரும். கூட்டுக்குடும்பத்தில் ஆனந்தம் எனக்கு சின்னவயதிலேயே அறிய முடிந்தது. ஒரு குடும்பத்தில் யாருமே இப்போது ஒருவரோடு ஒருவர் பேசுவது கூட குறைந்து போய் விட்டது. ஒற்றுமை இருந்த இடத்தில் வேற்றுமை வந்துவிட்டது.சுயநலம் தலை தூக்கிவிட்டது.எதிர்மறை எண்ணங்கள் மனதிலிருந்து அகல வேண்டும். ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை பலத்தை தரவேண்டும். ஆக்க பூர்வ எண்ணங்களும் செயல்களும் மனதுக்கும் உடம்புக்கும் தெம்பை சந்தோ ஷத்தை தருமே.
அவரவருக்கு பிடித்த வேலையில் அதிக கவனமும் நேரமும் செலுத்தலாம். அதனால் தனக்கும் பிறருக்கும் உபயோகம் ஏதாவது இருந்தால் ஆனந்தம் அடைய அதைவிட சிறந்த உபாயம் எதுவும் இல்லை. நான் ஒருநாளைக்கு 18 மணி நேரத்திற்கு மேல் படிக்கவோ, எழுதவோ செய்யும்போது இது தற்பெருமைக்காக நிச்சயம் இல்லை. 85ல் கூட என்னால் சந்தோஷமாக புத்துணர்ச்சியோடு இருக்க முடிகிறதே என்று கிருஷ்ணனை வாயார வாழ்த்துகிறேன்.பாடுங்கள், படியுங்கள், பேசுங்கள், எழுதுங்கள், சிந்தியுங்கள். கோவில் குளம் செல்லுங்கள், பிறருக்கு ஏதாவது தினமும் ஒரு சின்ன உதவி செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனமும் உடம்பும் எவ்வளவு இளமை பெறுகிறது என்று. இருக்கும் நேரம் ரொம்ப கொஞ்சம், நிரந்தரம் இல்லாதது. ஜாக்ரதை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமா?