திருமலேசன் ரஹஸ்யங்கள்: நங்கநல்லூர் J K SIVAN
இன்று சனிக்கிழமை. திருப்பதி வேங்கடேசனைப் பற்றி சில அற்புதமான இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் சொன்னால் எப்படி சந்தோஷமாக இருக்கும் உங்களுக்கு? சமீபத்தில் எங்கோ படித்தது.
சொல்லப்போவது நான் இல்லை. ரமண தீக்ஷிதலு: திருப்பதி திருமலை வெங்கடேசனின் பிரதான பட்டாச்சாரியார். பெருமாளை தினமும் தொடுகிறவர்.:
”பாலாஜி வேங்கடேசன் போட்டோ வீடியோ என்று வெளியே பார்ப்பதெல்லாம் டுபாக்கூர். இந்த நாள் வரை எவரையும் பெருமாளை வீடியோ எடுக்கவோ, போட்டோ எடுக்கவோ அனுமதிக்கவே இல்லை. முகநூல், வாட்ஸாப்ப், BLOG ,மற்றும் போட்டோ எல்லாமே சினிமா செட்டிங் மாதிரி போட்டு எடுத்தவை. உண்மையல்ல.
திருமலை வேங்கடேசனுக்கு தலைமுடி இருக்கிறது. மனிதர்கள் பெருமாளுக்கு போல் வியர்க்கிறது. மிருதுவான பாதங்கள். ஹ்ருதய பாகத்தில் ஓ வென்று கடல் அலை சப்தம் கேட்கிறது. அவருக்கு சாற்றப்படும் புஷ்பங்கள் உள்ளூரில் ஒரு பிரத்யேக நந்தவனத்தில் இருந்து வருபவை.
எனக்கு 19 வயசில் பெருமாளை முதலில் தொட்டேன். தொடுவதற்கு முன் பல ஆகம விதி முறைகள், ஆலய சடங்குகள் எல்லாம் செய்தபின் தான் தொட அனுமதி. எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. கீழே அவரது பாதத்தை தொட்டேன். அண்ணாந்து அவர் முகத்தை பார்த்தேன். ஆஹா, என்னென்று சொல்வேன். வேங்கடேச பெருமாள் முகம் பார்வதி தேவி போல் அல்லவோ எனக்கு கண்ணுக்கு தெரிந்தது.! உயரமான ஒன்பதரை அடி விக்ரஹம் முகத்தில் ஒரு ப்ரசன்ன மான புன்னகை. பெரிய கண்களை. என்னைத் தவிர இன்னும் சில பட்டாச்சார்யர்களுக்கு மட்டும் தான் பெருமாளுக்கு பின்னாலே போக அனுமதியே. முன்னாலே பார்ப்பதை விட பெருமாளை பின்னால் பார்ப்பது ஆச்சர்யமானது. அவர் தலையில் சிகை கழுத்து தோள்கள் வரை அழகழகாக குண்டலமாக நெளிந்து நெளிந்து தொங்கும். எல்லாம் கல்லில் செதுக்கிய தத்ரூப வடிவம். இடுப்பளவு 26 அங்குலம். அகன்ற விரிந்த மார்பு. மார்பில் மஹாலக்ஷ்மி அலங்கரிக்கிறாள். பெருமாள் கையில் விரல்களில் நகங்கள் இருக்கிறது. உள்ளங்கையில் ரேகைகள் காணப்படுகிறது. எல்லாம் மனிதர்கள் மாதிரியே. இந்த பெருமாள் கல் சிலை அல்லவே அல்ல. அவரே பல யுகத்துக்கு முன்பு இங்கே நின்று அப்படியே சிலை யாக உறைந்து போயிருக்கிறார். அதனால் தான் எல்லாம் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. இதெல்லாம் சிற்பியால் செதுக்க முடியவே முடியாது. ஆகம சாஸ்திரத்தின் படி இந்த சிலை சாளிக்ராம சிலை. வெளியே எந்த அளவு உஷ்ணம் இருந்தாலும் வேங்கடேசன் தேகத்தில் 40-45 டிக்ரீ C உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் மேல் அணியப் பட்டுள்ள ஆடைகள், ஆபரணங்கள் எல்லாம் அகற்றியபின் அவர் தேகத்தின் உஷ்ணம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷமாக சில கைங்கர்யங்கள் அன்றாட பூஜா விசேஷங்களோடு சேர்ந்து நடக்கும்.அதில் ஒன்று பசும்பால் அளிப்பது. திருமஞ்சனம் செய்வது. வாசனாதி திரவியங்கள் சாற்றுவோம். நெற்றி திலகம் தயாரித்து சாற்றுவோம். சுத்தமான கற்பூரம் 16 தோலா அரைத்து திலகம் தயாரிப்போம். கண்ணுக்கு நாமம் அப்புவோம், நடுவே சிவப்பு வண்ணம். அப்புறம் வெங்கடேசனுக்கு ஆடை ஆபரணங்கள் அணிவிப்போம். இன்னொரு அதிசய சமாச்சாரம் என்ன தெரியுமா?
ஒரு தடவை பெருமாளை கண்குளிர திவ்யாலங்காரத் தோடு பார்த்தால் அது மனதில் நினைவிலிருந்து அடுத்த சில வினாடிகளில் தானாகவே மறைந்து விடும். இதை விஷ்ணு மாயா என்பார்கள். எவ்வளவு மணி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆசை குறையவே குறை யாது. மனதை சந்தோஷத்தோடு நிரப்ப வேறு எதுவும் இல்லை.
பக்தர்கள் ஆனந்த நிலையத்திலிருந்து தான் தரிசிக்க வேண்டும். எவ்வளவு மணி நேரம் பார்த்தாலும் மனதில் வெங்கடேசன் உருவம் நிற்காது. மஹான்கள், ரிஷிகள் மட்டுமே அவன் உருவத்தை ஹ்ருதயத்தில் நிலையாக நிறுத்திக் கொள்பவர்கள். நம்மைப் போன்ற சாதார ணர் களுக்கு அது சாத்தியமில்லை. ஒரு வினாடி அவரைப் பார்த்தால் கூட போதுமானது. அதுவே பேரதிர்ஷ்டம். கடவுளை நம்பாத நாஸ்திகர்கள் கூட ஒரு கணம் அவனைப் பார்த்தால் அப்படியே ஸ்தம்பித்து போவார்கள். விழாக்காலங்களில், பெரிய வி.வி. ஐ. பி VVIP வந்தாலும் ஜனாதிபதி, பிரதம மாதிரி யார் வந்தாலும் ரெண்டாவது வழியில் வந்து 2-3 நிமிஷங் கள் தான் தரிசிக்க அனுமதி. வீடியோ, போட்டோ எல்லாம் நடக்காத விஷயங்கள். அன்றாடம் லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் விடிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை காத்திருந்து வரிசையாக தரிசனம் பெறுகி றார்கள். நடு நடுவே 5-10 நிமிஷங்கள் நைவேத்தியம் மற்றும் இதர சில முக்கிய பூஜைகள் கைங்கர்யங்கள் போது திரை மறைக்கும். களைப்பில்லாமல் வேங்கடேசன் அனைவருக்கும் நாள் முழுதும் தரிசனம் தருகிறான்.
சில பக்தர்கள் 2-3 தினங்கள் தங்கி தரிசனம் பெறுகி றார்கள். கர்ப்ப க்ரஹம் ரஹஸ்ய அறை அல்ல. விடாமல் விசேஷங்கள் நடைபெறும் அறை. முக்கிய விக்ரஹங்களான வேங்கடேஸ்வரன் , ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் உள்ளன. வருஷ முழுதும் 365 நாளில் 450 விசேஷகைங்கர்யங்கள். பண்டிகைகள், விழாக்கள், பகவானுக்கு நடை பெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா நாள் புனித நாள். ஒவ்வொருநாளும் கல்யாண நாள். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். வேங்கடேசன் . ஓம் நமோ வேங்கடேசாய :