பட்டர் திருடனிடமே திருடிய பக்காத் திருடன்- நங்கநல்லூர் J K SIVAN
பத்து வருஷத்துக்கு முன்பு 2014ம் வருஷம் மே மாதம் ஒரு திருடு பிருந்தாவனத்தில் நடந்ததாம். கோபிநாத் பூர் என்னும் ஊரில் ஊருக்கு வெளியே இருந்த கிருஷ்ணன் கோவிலில் இருந்த கிருஷ்ணனின் ஆபரணங்களை ஒரு திருடன் கொள்ளை அடித்து கொண்டு போய்விட்டான். ஒன்பது வருஷங்கள் கழித்து மே 2023ல் அவன் அந்த நகைகளை ஜாக்கிரதையாக கொண்டுவந்து கோவிலில் திரும்ப வைத்து விட்டான். ரெண்டு மன்னிப்பு கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தானாம். என்ன காரணம்? இந்த ஒன்பது வருஷமும் ஒரு கணம் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லையாம். ஏதாவது கனவுகள் அவனை துன்புறுத்திக் கொண்டே இருந்ததாம். ஏதோ ஒரு அவன் மனதில் ”நீ செய்தது பெரிய தப்பு. ஓடு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வை” என்று உறுத்திக்கொண்டே இருந்ததாம். வெண்ணெய் திருடனிடமே கை வரிசையை காட்டினால் அவன் சும்மா விடுவானா? நகைகளை திரும்ப கொண்டு வைத்ததோடல்லாமல், நூறு ரூபாய் அபராதம், 201 ரூபாய் தக்ஷிணையும் வேறு சேர்த்து திருப்பி வைத்தானாம்.
ஒரு கடிதத்தில் ”இந்த நகைகளை எல்லாம் அந்த கோவிலில் ஒரு பெரிய யஞம் நடக்கும்போது திருடினேன். அப்புறம் இந்த ஒம்பது வருஷங்களாக நாம் படாத பாடு பட்டுவிட்டேன். ஆகவே இந்த கிருஷ்ணனிடம் சரண்டடைவது ஒன்று தான் நிம்மதி அளிக்கும். அவன் நகைகளை ஜாக்கிரதையாக அவனிடமே திருப்பி கொடுத்துவிட்டால் தான் இந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று தீர்மானித்தேன். என் பேரோ ஊரோ சொல்ல விருப்பமில்லை” என்று ஒரு கடிதத்தில் எழுதி இருந்தான் அந்த திருடன்.
ஒம்பது வருஷம் கழித்து விடிகாலை ஒருநாள் கோபிநாத் கோவில் எதிரே ஒருவீட்டில் ஒரு பை நிறைய கிருஷ்ணனின் ஆபரணங்களை, மன்னிப்பு கடிதங்களை வைத்துவிட்டு சென்றுவிட்டான். பை நிறைய கிருஷ்ணன், ராதை கிரீடங்கள், தோடுகள், வளையல்கள், புல்லாங்குழல் எல்லாம் இருந்தது. மதிப்பு நாலு லக்ஷம் என்று மதிப்பிட்டார்கள். ஒன்று கூட குறையாமல் அத்தனை திருட்டுப் போன நகைகளும் பையில் இருந்தன.
திருடன் பையை வைத்த வீட்டுக்காரர் தேபேஷ் குமார் மொஹந்தி, அவர் தான் அந்த யஞத்தை 9 வருஷங்களுக்கு முன் நடத்தியவர். கோபிநாத் பூரில் பெரியமனிதர்.
சுகந்தா மெஹந்தி என்ற ஊர்க்கார பெண் ஒருவள் ”ஆமாம் ஒன்பது வருஷம் முன் 2014 மே மாதம் திருடு போனதை லிங்கராஜ் போலீஸ் ஸ்டேஷனில் பிராது கொடுத்திருந்தது.போலிஸ் அதிகாரிகள் வந்து அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சிப்பந்திகள், அண்டை அசல் என்று அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் திருடனை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.” என்றாள் .
கோபிநாத் பூர் ஆலய அர்ச்சகர் கைலாச பண்டாவுக்கு ஆபரணங்கள் திரும்ப கிடைத்ததில் ரொம்ப ஆச்சர்யம், நம்பவே முடியவில்லை. போலீசால் 9 வருஷம் கண்டுபிடிக்க முடியாத திருட்டை கிருஷ்ணன் தானே அடுத்த கணம் முதலே கண்டுபிடித்து திரும்ப பெற்றுக்கொண்டான். நாங்கள் மாற்று ஜோடி ஆபரணங்களை ரொம்ப கஷ்டப்பட்டு செய்தோம். இப்போ கிருஷ்ணனுக்கும் ராதைக்கும் ரெண்டு ஜோடி ஆபரணங்கள்” என்றார்
ஒரு திருடனையே நல்லவனாக்கி இருக்கிறானே கிருஷ்ணன்? அதற்கு மேல் என்ன வேண்டும்? கிருஷ்ணன் இல்லை என்று யார் சொன்னது?இன்னொரு திருடன் கதை ரொம்பவே உங்களுக்கு படிக்க ஜோராக இருக்கும்.அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.