பேசும் தெய்வம்- நங்கநல்லூர் J K SIVAN
நிறைவேறாத/நிறைவேறிய ஆசை. நங்கநல்லூர் J K SIVAN
அதிசயங்கள், அற்புதங்கள் உலகத்தில் எங்கெங்கோ நிறைய நடக்கலாம். நமக்குத் தெரியாது. கண்கூடாக நாம் பார்த்து அறிந்தது காஞ்சி மஹா பெரியவா வாழ்க்கையில் தான். சந்தேகமே இல்லை.
காஞ்சி காமகோடி மட பீடாதிபதியாக 66வது ஜகதகுருவாக இருந்தவர் 6வது சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி பூர்வாஸ்ரம பெயர் ஸ்வாமிநாதன். செங்கல்பட்டு உதயம்பாக்கத்தில் பிறந்தவர். சீதாராம ஸாஸ்திரிகள் புத்திரர். 40 வருஷங்கள் மடாதிபதியாக இருந்தவர்.
அவருக்கு அடுத்து 67வது பீடாதிபதியாக இருந்தவர் 7 நாட்கள் மட்டுமே பீடாதிபதியாக இருந்தவர். மஹாதேவேந்த்ர சரஸ்வதி.1889ல் நரசிம்ம சாஸ்திரிக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் பிறந்து லட்சுமிநரசிம்மன் என்ற பூர்வாஸ்ரம பெயர் கொண்டவர். மஹா பெரியவாளின் பெரியம்மா பிள்ளை. இருவருமே 66வது பீடாதிபதியால் தேர்வு செய்யப்பட்டவர்கள். கலவை எனும் அமைதியான சிறிய கிராமம் காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ. காஞ்சி-செய்யாறு சாலையில் உள்ளது. இங்கு தான் 1907ல் மஹா பெரியவா 68வது பீடாதிபதியாக 13 வயதில் சன்யாசியாகி பொறுப்பேற்றுக்கொண்டது. இங்கே 66வது 67வது பீடா திபதிகளின் அதிஷ்டானம், பிருந்தாவனம் உள்ளது. மஹாபெரியவாளின் பரமேஷ்டி குரு 66வது பீடாதிபதிகள்.
66வது, 67வது பீடாதிபதிகள் இருவருமே கலவையில் முக்தி அடைந்தவர்கள், என்பதால் அடுத்த 68வது பீடாதிபதி மஹா பெரியவாளுக்கு தனக்கும் கலவையில் முக்தி கிடைக்கவேண்டும் என்று ஒரு விருப்பம். ஆனால் அவரது அதிஷ்டானம் காஞ்சி காமகோடி மடத்திலேயே அமைந்து விட்டது. ஆனால் அவரது விருப்பம் எப்படி நிறைவேறியது என்பது தான் அதிசயம், அற்புதம்.
66வது 67வது பீடாதிபதிகள் அதிஷ்டானத்துக்கு நடுவே கலவையில் ஒரு சின்ன துளசி செடி உருவானது. அதிஷ்டானங்களை சுற்றிவரும் பக்தர்களுக்கு இந்தச்செடி வளர்ந்தால் இடையூறாக இருக்குமே என்று கலவையில் அதிஷ்டானத்தில் தொண்டாற்றிவரும் சுப்ரமணிய கனபாடிகளுக்குத் தோன்றியிருக்கிறது. அதைப் பிடுங்கிவிட முயற்சித்தார். பலமுறை அகற்றியும் ஏனோ அங்கே துளசி மீண்டும் மீண்டும் தலை தூக்கியது. அதை எப்படி நிரந்தரமாக அகற்றுவது என்ற யோசனையில் இருந்தார். அப்போது தான் சுப்ரமணிய கன பாடிகளின் கனவில் மஹா பெரியவா தோன்றினார்.
”சுப்ரமணியா, எனது குருநாதர் , பரம குருநாதர் ரெண்டு பேருடைய அதிஷ்டானத்துக்கும் அருகே நானும் நித்யவாஸம் பண்ண ஆசைப்படறேண்டா, துளசியா இருக்கேன். அதை பிடுங்கணும் , அகற்றணும் என்கிற எண்ணத்தை, முயற்சி யை இனிமே விட்டுடு”
இன்றும் கலவையில் அதிஷ்டானங்கள் இடையே துளசி மலர்ந்துகொண்டு தானிருக்கிறது. அவசியம் அடுத்தமுறை கலவை சென்றால் மூன்று பீடாதிபதிகளையும் ஒருமிக்க தரிசிக்கவும்.