தெய்வ நம்பிக்கை – நங்கநல்லூர் J K SIVAN
கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? இருக்கிறான் என்ற நம்பிக்கை எண்ணற்றோருக்கு இருக்கிறதே.அதற்கு காரணம் என்ன? நம்பிக்கை. அதற்கு சர்வ வல்லமை இருக்கிறது. உண்மை அறிந்தவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுளை நான் பார்க்கவில்லை, ஏன் எவருமே பார்க்கவில்லை என்பதால் அவர் இல்லையா? பாலுக்குள் வெண்ணெய் இருப்பதை
எப்போது பார்த்தாய்? கருவில் குழந்தையை பார்க்க முடிகிறதா? மரத்தில் நெருப்பு இருப்பதை உணரவில்லையா? கம்பியில் மின்சாரம் ஓடுவதை கண்ணாலே பார்த்தாயா? அதுபோல் தான் கடவுள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறான்.அறியாமையால் அவனை உணரமுடிவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவன் ஒவ்வொருவருக்கும் உதவுகிறான். அவன் அரூபி , பேர் இல்லாதவன். சர்வ வியாபி. ஒவ்வொருவரையும் தாய் தந்தைபோல் கண்காணித்து கொண்டிருக்கிறான். நமக்கு தந்தை யார் என்று தெரியாது. தாய் சொல்லி தான் தந்தையை அறிகிறோம். மஹான்கள் ஞானிகள் சொல்லி தான் இறைவனை உணர்கிறோம். எந்த நேரத்திலும் நமக்கு உதவி தேவையென்றால் யாரோ ஒருவர் மூலம் எப்படியோ அந்த உதவி நமக்கு கிடைக்கச் செய்கிறான்.
என் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை இது.பல விஷயங்களில் என்னை காப்பாற்றியவன். என் அறியாமை, மூடச்செயல்களின் விளைவில் இருந்து என்னை எப்படியோ கரை சேர்த்தவன். வயதாகி இப்போது திரும்பிப் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. சூரியனை மேகங்கள் மறைப்பதால் இருள் சூழ்ந்தாலும் சூரியன் இல்லாமல் போய்விடுவானா?.
நாம் கடவுளைக் காணலாம். எப்படி என்றால் பரிபூர்ண பக்தி, நம்பிக்கை அவன் மேல் இருந்தால் போதும். மனதில் ஒரு ஆனந்தம் அமைதி தோன்றும். அது தான் அந்த இறைவன். விபத்துகளிலிருந்து சில அதிசயமான விதத்தில் நம்பமுடியாத படி தப்புகிறார்களே யார் காரணம்? நம்பிக்கை இருந்தால் அது இறைவன் செயல் என உணரமுடியும். ரெண்டு நாள் முன்பு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சில சென்டிமீட்டர்களில் துப்பாக்கிக் கூண்டிலிருந்து உயிர் தப்பினார். அவருக்கு இருக்கிறதோ இல்லையோ இதை தெய்வாதீனம் என்று தான் சொல்வேன். அவர் உயிர் இன்னும் இருக்கவேண்டும் அவரால் சில காரியங்கள் நல்லவை நடக்கவேண்டும் என்று இறைவன் தீர்மானித்தால் அப்படிப்பட்டவனை மரணம் நெருங்கவே நெருங்காது. நம்பிக்கை ஊட்டுவதற்கு தான் மஹா பெரியவா போன்றவை மனித தெய்வங்கள் நம்மிடையே அவ்வப்போது தோன்றச் செய்கிறான் இறைவன். பக்தனை பரமன் எப்படி காக்கிறான் என்று எல்லோருக்குமே தெரிந்த ஒரு சின்ன கதை சொல்லி முடிக்கிறேன்.
ஒரு பக்தன் தன் வாழ்நாள் பூரா பகவத் சிந்தனையிலும் நாமஸ்மரணையிலும் இருந்துகொண்டே தன் உலகவாழ்க்கையில் உழன்றுகொண்டு இருந்தபோது அவனுக்கும் கடவுளுக்கும் ஒரு உடன்பாடு.
“எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும் நீ பிரியாது இருந்தாயானால் அதைக்காட்டிலும் மேலான பரிசு எனக்கெதுவுமில்லை’
“அவ்வளவுதானே, கவலைபடாதே, நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் ! திருப்தியா?” என கடவுளும் வாக்களித்தார்.
பக்தனின் பூலோக வாழ்க்கை ஒருநாள் முடிந்தது. நேரே பகவானையே அடைந்தான். சந்தோஷமாக இறைவனை நிழலாக தொடர்ந்தான். அளவளாவினான். ஒருநாள் அவர்கள் பேச்சு அவன் பூலோக வாழ்க்கை பற்றியதாக இருந்தபோது திடீரென்று பக்தனுக்கு ஒரு சந்தேகம். யோசித்தான்.
“என்ன திடீரென்று மௌனம்? என்ன சிந்திக்கிறாய் “– இறைவன் கேட்டான்.
“நீ வாக்களித்தபடி,எனது பூலோக வாழ்க்கையில் நீ எப்போதுமே என்னோடு இருந்தாயா?”
“ஏன் சந்தேகம்? இதோ பார் உன் வாழ்க்கை பாதையை.” இறைவன் அவனது உலக வாழ்க்கை பாதையை காட்டினபோது, ஆரம்பமுதல் இறுதிவரை இரு ஜோடி கால் தடங்கள் தென்பட்டன.
நன்றாக உற்று பார்த்த பக்தன் “ நாராயணா, என் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. என் கால்சுவடுகளுக்கு பின்னால் பல இடங்களில் ஒரு ஜோடி கால் சுவடுகள் காணோமே.” இதிலிருந்தே புரியவில்லையா நீ எப்போதும் என் பின்னால் உறு துணையாக இல்லை என்று. பொய் சொல்லுகிறாயே ?” என பக்தன் கேட்டான். இறைவன் வாய் கொள்ளாமல் சிரித்தான். “சிரித்து மழுப்பாதே உண்மையை ஒப்புக்கொள்” நாராயணன் அமைதியாகபதிலளித்தான். “அடே அசடே, முன்னால் இருப்பது பின்னால் இருப்பது இரு ஜோடிகளும் உனதும் எனதும் தான். எங்கெங்கெல்லாம் ஒரே ஜோடி மட்டும் காண்கிறதோ, அதெல்லாம் வாழ்க்கையில் நீ துன்பமுற்ற காலத்தில் உன்னை சுமந்து நான் சென்ற பொழுது பதிந்த என்னுடைய காலடி சுவடு. புரிகிறதா?” என்றான் இறைவன்.