நம்பினோர் கைவிடப்படார். – நங்கநல்லூர் J K SIVAN
நாகராஜன் பெரிய குடும்பஸ்தன். சுப்ரமணிய வாத்தியாரின் ஒரே மகன். SSLC பாஸ் பண்ணுவதற்கு பிரம்ம பிரயத்தனம் பண்ணி நான்காவது முயற்சியில் குறைந்த மார்க்குக்கு மேல் ஒரு மார்க் வாங்கி எப்படியோ பாஸ் செய்துவிட்டவன். ராகவ பவன் ஹோட்டல் தண்டாங்கோரையில் ரொம்ப பெரிய ஹோட்டல் என்று பெயர். அங்கு கும்பல் வருவதற்கு காரணமே அங்கே இட்டலி,தோசை, சாப்பாடு எல்லாமே மற்ற ஹோட்டல்களை விட ஒரு ரூபாய் கம்மி விலை என்ற உண்மை அவனுக்கு தெரியாது. அங்கே கணக்கெழுதும் வேலை,கல்லாவில் சிலநேரம் முதலாளி துரைசாமி அய்யர் இல்லாத போது உட்காரவேண்டும். ரெண்டு மசாலா,ஒரு பூரி, ஒரு அடை , என்று கத்தவேண்டும். நாகராஜனின் குணம் என்ன தெரியுமா?
”ஏன் எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கும்போது எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்? ஏன் எனது அருமை பெருமையை உலகம் அறியவில்லை” என்று வருத்தம்.ஏக்கம். கடவுள் தன்னை தண்டித்து விட்டான் என்று வருத்தம். தான் ஏதாவது ஒரு காலேஜில் ப்ரொபஸராக இருக்க வேண்டியவன் விதி விளையாடிவிட்டது என்று ஒரு உறுதியான அசையாத நம்பிக்கை. தன்னை எல்லோரும் சூழ்ந்து கொண்டு புகழவேண்டும் என்று ஆசை. இதன் விளைவாக அவன் தனது நீளமான முகத்தை இன்னும் நீட்டிவிட்டுக் கொண்டு நொந்தவாறு தனியே தலைகுனிந்து கொண்டு உட்காருபவன்.
பகவான் எல்லோரையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவரவருக்கு என்ன நடக்கவேண்டுமோ, எப்படி நேரவேண்டுமோ அது பகவான் அறிந்தது. அவனுக்கு பாரபக்ஷம் கிடையாது. அவரவர் கர்ம வினைக்கு, செயலுக்கு ஏற்ப விளைவு.
என் மீது நம்பிக்கை வைத்து வேண்டினால், விதியின் பளு கொஞ்சமாவது குறையும்,அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியும் நமக்கு ஏனோ காதில் ஏறவில்லையே. நமது தவறுகளுக்கு, துன்பத்துக்கு, மற்றவர் மேல் பழி சுமத்தும் குணம் எப்போதுமே இருந்து வருகிறதே.
துன்பம் வந்தால் நகுக.. ரொம்ப அற்புதமான அறிவுரை. அனுபவித்தோருக்கு தான் தெரியும் அதன் உண்மை. சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள கற்க வேண்டும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. நமக்கு மட்டுமா எல்லோருக்குமே ஒவ்வொருவிதமான கஷ்டம். துன்பம்.
சூரியன் தவறாமல் கிழக்கே உதிக்கிறான், மாலை அஸ்தமனமாகிறான். கிரஹங்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் வளர்கிறது, வெட்டப்படுகிறது. மீண்டும் வளர்கிறது. பிறப்பும் இறப்பும், தோற்றமும் மறைவும் இயற்கை. அது தான் வாழ்க்கை . அப்படி எது வந்தாலும் அலக்ஷியமாக ஏற்றுக்கொள்ள மனம் திடப்படவேண்டும். விடியலுக்கு முன் இருள் இருந்து வருவது மாறுவதற்கு தானே. தன்னம்பிக்கையோடு பகவான் மேல் நம்பிக்கையும் வளரவேண்டும். எல்லோருடனும் அன்புடனும் பண்புடனும் நடந்து கொள்வது தான் புதையல். இது தான் ஊரோடு ஒட்டி வாழ்வது. உலகம் என்றால் இப்படித்தான், இது தான் நியதி, என்று புரிந்து கொண்டவனுக்கு உடல் ஆரோக்யமாக இருக்கும்.
நாம் இருக்கும் காலமோ கொஞ்சம் தான். அதை நாமே ஏன் புண் படுத்திக்கொண்டு அவஸ்தை படவேண்டும். திறந்த மனதுடன் வரவேற்போம். கர்வமோ,அகம்பாவமோ சீர் குலைத்து விடும். எதற்கும் உணர்ச்சி வசப்படவேண்டாம். வானமே இடிந்து தலையில் விழுந்துவிட்டது போல் ஒரு கவலை வந்து இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு உட்காரவேண்டாம். பெருமூச்சு விடவேண்டாம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நாமும் பாடுவோமே.
ஒரு விஷயம் தெரியுமா. கஷ்டம், துன்பம் அனுபவிக்கும்போது நாம் கடவுளை நினைக்கிறோம். எப்போதுமே கஷ்டத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டால் கடவுளை அடிக்கடி நினைக்க தோன்றாதா? சுகத்தில், சுபிக்ஷத்தில் இருந்தால் நன்றிடா கிருஷ்ணா என்று அவனை நினைக்கலாமே .