PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

ஆஹா திவ்யமான அர்த்தம்

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।।
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||

இது காளிதாசனுடைய வாக்கியம். என்ன அர்த்தம்?

நாம் சொல்கிற வார்த்தை, அதன் அர்த்தம் போல ஸர்வேஸ்வரனும் பார்வதி தேவியும் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இருக்கிறார்கள். இந்த உலகத்துக்கே தாய் தந்தை, அம்மா அப்பா அவர்கள். அவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் நான் வணங்குவதற்கு?

இணை பிரியாத, பிரிக்க முடியாத ‘பார்வதீ-பரமேச்வரௌ’ என்கிற வார்த்தையை கொஞ்சம் சுக்குமி ளகுதி பிலி என்று பிரிப்பதைப் போல் மாற்றி படித்தால் என்ன பொருள் கிடைக்கிறது? ‘பார்வதீப ரமேச்வரௌ’ ‘பார்வதீ-பரமேச்வரர்களை வணங்குகிறேன்’ என்பதற்குப் பதில் ‘பார்வதீபதியான பரமேச்வரனையும் ரமாபதியான மஹா விஷ்ணுவையும் வணங்குகிறேன்’ என்று ஒரு அழகான அர்த்தமும் கிடைக்கிறது. பார்வதி பரமேச்வரர்களையும் சொல்லி அதோடு மஹாலக்ஷ்மி-மஹாவிஷ்ணுக்களையும் சேர்த்துக் கொண்டதாகிவிடும் என்று சொல்வர் மஹா பெரியவா. அர்த்தம் ‘மாறிவிட்டது’ என்பதைவிடக் ‘கூடிவிட்டது’ என்பது தான் கரெக்ட்.
ப எப்படி பாதி ஆகும் என்று மஹா பெரியவா அழகாக விளக்குகிறார்:
‘ப’ என்று சொன்னாலே ‘பதி’தான். ‘அதிபதி’ என்பதை ‘அதிப’ (தமிழில் ‘அதிபன்’) என்றாலே போதும். ‘ந்ருப’ (நிருபன்) என்று ராஜாவைச் சொல்கிறோம். ‘ந்ரு’ என்றால் ‘நர’. நரஸிம்ஹம் என்பதை ந்ருஸிம்ஹம் என்றும் சொல்வதுண்டு. நரபதிதான் ‘ந்ருப’ என்பவன். ‘பார்வதீப’ என்றால் பார்வதீபதியான ஈச்வரன். ‘ரமேச்வர’ என்றால் ரமைக்கு ஈசனாக, நாயகனாக இருக்கப்பட்ட விஷ்ணு. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்றால் ‘சிவ-விஷ்ணுக்களை’ என்று அர்த்தம்.

‘பார்வதீ-பரமேச்வரௌ’ என்று வைத்துக் கொண்டால் சிவ-சக்திகளைச் சொன்னதாகிறது. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்று அதையே ஒரு எழுத்து பின்னே தள்ளிப் பிரித்துக்கொண்டால் சிவ-விஷ்ணுக்களாகிவிடுகிறது.

இதிலே பெரிய தத்வம் இருக்கிறது. சக்தியேதான் புருஷ ரூபத்தில் இருக்கிற போது விஷ்ணு சிவம் எப்போதும் புருஷனாகச் சொல்லப்படும் நிர்குண வஸ்து. லோக வ்யவஹாரத்துக்காக அவர் ஸகுணமான சக்தியோடு சேர்ந்திருக்கும்போது சக்தி ஸ்திரீ ரூபத்தில் அம்பாளாக இருந்தால் அவளை இடது பாதியில் வைத்துக் கொண்டு அர்த்தநாரீச்வராக இருப்பார். அந்த ஸகுண சக்தியே புருஷ ரூபத்தில் விஷ்ணுவாயிருந்தாலும் அவரை அதே இடது பாதியாக வைத்துக்கொண்டு சங்கரநாராயணராக இருப்பார். விஷ்ணு அம்பாள் ஸ்தானத்தில் ஈஸ்வரனுக்குப் பத்தினியாக இருப்பவர். “அரி அலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார். ஆகையால் ‘உலகத்தின் தாய் தந்தையான சிவ-விஷ்ணுக்களை’ என்று அர்த்தம் செய்து கொண்டால் அதில் தப்பேயில்லை. இவர்களைத் தாய் தந்தையாகக் கொண்டு பிறந்தவர்தான் சாஸ்தா*.

இதிலே இன்னொரு விசேஷம், மஹாவிஷ்ணு என்ன இருந்தாலும் புருஷ ரூபத்திலிருப்பதால் மஹாலக்ஷ்மியோடு சேர்த்து நினைத்தாலே மனஸுக்கு நிறைவு. ராமாநுஜ மதத்துக்கு “ஸ்ரீ வைஷ்ணவம்” என்று தாயாரான ஸ்ரீயை முதலிலும் அப்புறம் விஷ்ணுவையும் சொல்லியே பெயர் வைத்திருக்கிறது. ஈஸ்வரனையும் அம்பாளோடு சேர்த்து ஸாம்பமூர்த்தியாக நினைத்தால் தான் நிறைவு ஏற்படுகிறது. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈச்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்! சைவம், வைஷ்ணவம் என்று பேதமில்லாமல் ரெண்டையும் சொல்லையும் பொருளையும் போலப் பிரிக்க முடியாமல் சேர்த்து விடுவது!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *