கொஞ்சம் வேதாந்தம் – நங்கநல்லூர் J K SIVAN
மொத்தத்தில் இந்த உலகம் என்பது என்ன? ஐம்புலன்களின் நாடகம், அதில் நாம் நடிகர்கள். மனத்தை எப்படி எல்லாம் ஆக்ரமிக்க முடியுமோ அப்படி தன் வசப்படுத்தி பயாஸ்கோப் காட்டுகிறதே அது தான் உலகம். அப்படி நாம் என்ன உணர்கிறோமோ அது தான் உலக சுக துக்கங்கள். ஒரு நாள் சிரிப்பு பல நாள் அழுகை. மாறி மாறியும் இன்பமும் துன்பமும் தான் வாழ்க்கை.
மனம் ஒடுங்கினால் வெளி உலகம் காணாமல் போய்விடும். உண்மையாக நமக்கு தோன்றுவதெல்லாம் ஸாஸ்வதமற்றது. உண்மையில் இருப்பது ஆத்மா ஒன்று தான். ஞானி உலகம் இருக்கிறதா இல்லையா என்ற எண்ணமே இல்லாதவன். வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மையால் அச்சிட்டதை ஏதோ முன்பே தெரிந்ததோ, தெரியாததோ, ஒரு விஷயத்தை நாம் படிக்கிறோம். நமது கவனம் ஒருநாளாவது துளிக்கூட அந்த எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் வெள்ளைக் காதிதத்தின் மேல் இல்லை. ஞானி வெள்ளைக் காகிதத்தை மட்டும் தான் உணர்கிறான். அதன் மேல் எழுதப்பட்ட மறையும் வஸ்து மேல் அவன் கவனம் இல்லை.
மைசூர் பாகு, லட்டு, ஜாங்கிரி அதிர்ஸம், பாயசம், ஹல்வா, என்னென்னவோ பேர் கொண்ட இனிக்கும் பக்ஷணங்கள். எல்லாவற்றிலும் முக்யமான உட்பொருள் இனிப்பான சர்க்கரை. அதுபோல் வெவ்வேறு உருவத்தில் நாம ரூப பேதத்தோடு காண்பவை அனைத்திலும் உள்ளே நிற்பது ஆத்மா. அதுவே ஞானப் பிரகாசம், பகவான். ஈஸ்வரன் என்று நாம் கருதுவது.
ஆத்மாவில் திளைத்துவிட்டவனுக்கு தேகமோ, அதன் வலியோ எதுவுமே இல்லை. மனசு மூச்சு ரெண்டும் ஒன்றாகவே இயக்கப்படுகிறது. மனம் கட்டுப்பாட்டில் இருந்தால் மூச்சும் கட்டுப்படும். மூச்சுக் கட்டுப்பாட்டில் வந்தால் மனசும் அதோடு இணைந்து அடங்கும். ஞானிகள் பிராணாயாமம் பண்ணும்போது தேகமோ, மனமோ எந்த அசைவுமில்லாமல்
மரக்கட்டையாகிறது. பிராணாயாமத்தைப் போலவே தான் ஜபம், தியானம், ரெண்டுமே. ஏகாக்ர சித்தத்துடன் (ஒரு மனத்துடன்) எதிலும் மனம் ஈடுபடாமல் ஈஸ்வரன் மேலேயே நிலைத்திருப்பது.
பிராணாயாமத்தில் மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்) நாஹம் ‘நான் இந்த தேகம் இல்லை”
மூச்சை வெளியே விடுவது (ரேசகம்) தான் கோஹம், ”நான் யார் விசாரம்?”
மூச்சை உள்ளே அடக்குவது (கும்பகம்) தான் ஸோஹம் ”நான் அவனே””
மூச்சு தான் குதிரை. மனம் அதன் மேல் உட்கார்த்து ஓட்டுபவன். பிராணாயாமம் தான் கடிவாளம். மூச்சை அடக்கினால் மனது ஒடுங்கிவிடும். சும்மா மனதை உபயோகித்து கடவுளைக் காணமுடியாது. ஓடும் மனதை அடக்கி உள்நோக்கி செலுத்தினால் தான் கடவுள் ஒளி வீசுவதை உணரலாம்.
பரப்பிரம்மம் இந்த நாடகமேடையில் விளக்கொளி மாதிரி. விளக்கொளியால் மேடை, நடிகன் அனைத்தையும் காட்சிகளாக காண்கிறோம். மேடை இல்லாவிட்டாலும் நாடக நடிகர்கள் இல்லாதபோதும் விளக்கு ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கும். இரும்பு பழுக்க காய்ச்சப்பட்டபோது அதைக் காய்ச்சிய தீயைப் போல் தானும் சிவப்பாகிறது. சம்மட்டியால் அடி வாங்கி வளையமாகவோ, பட்டையாகவோ, கம்பியாகவோ உருமாறுகிறது. அதைச் சிவப்பாக்கிய நெருப்பு அந்த அடியை வாங்கவில்லை. இரும்பு துண்டு தான் ஜீவாத்மா. சிவப்பான நெருப்பு பரமாத்மா.
எத்தனையோ சந்தேகங்கள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக எழுகிறது.கடல் அலைகள் போல் ஓயாமல். ஆத்ம விசாரம் இந்த ஓட்டத்தை தடை செய்யும்.
நாம் அடிக்கடி சொல்வோமே,திருடன் கையிலேயே சாவியைக் கொடு என்று. அது தான் இது. திருடனையே போலீஸ்காரனாக மாற்றும் வித்தை தான் மனதை மனத்தால் நாசம் செய்வது.மனோநாசம் இது தான். எண்ணங்களோ அவை எழும்பும் இடமோ ரெண்டுமே இல்லாமல் இருப்பது.
ஏனோ நான் அடிக்கடி இந்த மாதிரி வறட்டு வேதாந்தங்களைச் சொல்லி உங்களை துன்புறுத்துகிறேன். என்ன செய்வது. என் குணத்தை இனிமேல் மாற்ற முடியுமா?