”பொன் மொழி” – நங்கநல்லூர் J K SIVAN
தமிழக மன்னர்கள், சோழர்கள், பாண்டியர்கள், தமிழ் ப்ரியர்கள்கள் . புலவர்களை ஆதரித்தார்கள். அவர்களிடம் வீரம்,பக்தி, தமிழ் பற்று இருந்தது. மக்களை நேசித்தார்கள். ஒரு சோழ ராஜா ஒளவையார் காலத்தில் இருந்தவன் ஒருநாள் எல்லா புலவர்களையும் அடுத்தநாள் அவையில் கூடி இருக்க வைத்து அவர்களுக்கு ஒரு சவால் விட்டான்.
ராஜா என்ன கட்டளையிடப்போகிறாரோ என்ற அச்சத்தில் திகைப்பில் புலவர்கள் காத்திருந்தனர்.
சோழன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
மந்திரி எழுந்து, ”புலவர்களே இப்போது நம் அரசர் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்போகிறார். கவனமாக அமைதியாக எல்லோரும் கேட்டு அதன்படி செய்யுங்கள்” என கூறிவிட்டு அமர்ந்தான்.
ராஜா எல்லா புலவர்களையும் பார்த்தான்.
என் அருமை புலவர்களே, தமிழ் வித்தகர்களே, என் மனதில் நேற்றிரவு எழுந்த ஒரு எண்ணத்தை வெளியிடுகிறேன் கேளுங்கள்.
‘இப்போதிலிலிருந்து இன்னும் ஏழு நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறேன். எட்டாவது நாள் காலை நீங்கள் மீண்டும் இங்கே கூட வேண்டும். அப்போது நீங்கள் நான்கு கோடி பாடல்கள் எழுதிக் கொண்டு வரவேண்டும். உங்கள் கவிதை,புலமை தமிழறிவை நான் நன்கறிவேன், ஆகவே தனித்தோ, ஒன்று சேர்ந்தோ எப்படி சௌகர்யமோ அப்படி செய்து கொள்ளுங்கள். வெற்றிபெற்றால் சிறந்த பரிசுகள் காத்திருக்கும். தோல்வி கண்டால் இனி அவையில் இடமில்லை. புதிய கலைஞர்கள், புலவர்கள் இடம் பெறுவார்கள் .”
அவை கலந்து மன்னன் சென்றுவிட்டான். புலவர்கள் திகைத்தனர். எவ்வளவு பாடல்கள் எழுதினாலும் ஒரு கோடி நிரம்பாத என்று கவலை கொண்டார்கள். விஷயம் நாடு பூரா பரவியது. ஆறுநாள் கழிந்தும் பதினாயிரம் பாடல்கள் கூட தேறாதே என்னசெய்ய என்று ப்ரஹதீஸ்வரிடம் சென்று வணங்கி வழி காட்டவேண்டும் என்று வேண்டினார்கள். அங்கே அப்போது ஒளவையார் வந்தார். அவர் புலவர்கள் கூட்டமாக நிற்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
”ஆச்சர்யமாக இருக்கிறதே இவ்வளவு புலவர்கள் இங்கே கூடி இருக்கிறீர்களே என்ன விசேஷம்?”
”பாட்டி , எங்கள் கவலையைக் கண்டு ஆனந்திக்கிறீர்களா? என்று புலவர் ஒருவர் கேட்டார்.
”உங்கள் கவலையே என்னவென்று தெரியாதபோது எப்படி ஆனந்திக்க முடியும். யோசித்துப் பேசுங்கள்”
புலவர்களில் ஒளவையை நன்கறிந்த ஒரு முதிய புலவர் விஷயத்தை எடுத்துச் சொன்னார்.
‘அட . இதற்கா உங்கள் கலக்கம். எதற்காக வீண் கவலை உங்களுக்கு. ராஜா ஒரு ”கோடி ”பாடல் தானே கேட்டார். நான் நாலு கோடி பாடல் ஒன்று பாடுகிறேன்.அதை நீங்கள் அரசரிடம் சென்று பாடுங்கள். மகிழ்வார், உங்கள் அனைவருக்கும் நிறைய பரிசில்கள் கொடுப்பார். எழுதிக் கொள்ளுங்கள் நான் பாடுவதை” என்றால் ஒளவை.
இது தான் ஒளவை அக்கணமே அங்கே பாடிய நாலு கோடி பாடல்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
கோடி என்றால் பொன் என்று ஒரு அர்த்தம். அரசன் கோடி பொன் பாடல் என்றது பொன் பரிசு பெற தகுதியான பாடல் என்று அர்த்தம். இந்த பாடலில் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு கோடி பொன் பெறக்கூடிய ”பொன் மொழி”
1. நல்ல குணம், பண்பு, மரியாதை தகுதி, இவற்றை எல்லாம் மதித்து வரவேற்று உபசரிக்காமல் உதாசீனம் செய்பவர்கள் வீட்டின் வாசலைக் கூட மிதிக்க கூடாது. அப்படி அங்கே போகாமல் இருப்பது ஒரு கோடி பொன்னுக்கு சமமானது. 2. உளம் கனிந்து, சந்தோஷத்தோடு ”வாருங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள்” என்று அழைக்காதவர்கள் வீட்டிற்கு போய் சாப்பிடாமல் இருப்பது ஒரு கோடி பொன்னுக்கு இணையானது .
3. ஒரு கோடி பொற்காசுகளை கொடுத்தாவது பண்பு, நல்ல குணம் உள்ள நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது ஒரு கோடி பொன்னுக்கு சமம்.
4. பல கோடி பொற் காசுகள் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது
புலவர்கள் எட்டாவது நாள் அல்ல மறுநாளே அரசன் அரண்மனைக்கு சென்று அவர்களின் தலைவர் இந்த பாடலைப் பாட,கேட்டு சோழன் மகிழ்ந்து அனைவருக்கும் பரிசு வழங்கினான் என்று சொல்லவேண்டியது அவசியமில்லாத வாக்கியம்.