THE RACING MIND J K SIVAN

மன  ஓட்டம்    –    நங்கநல்லூர்  J K   SIVAN
தாத்தா  மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு  பெஞ்சில் தலைக்கு  மேல் துண்டை சின்னதாக  மடித்து தலையணையாக வைத்துக்கொண்டு அரைக்கண்ணை  மூடிக்கொண்டு அசையாமல் படுத்திருக்கிறார்.  அசையாமல்  என்று நான் சொன்னது அவர் உடம்பை.  அவர் மனத்தில்  எண்ண  ஓட்டங்கள்  கிண்டி ரேஸ்  குதிரைகளைவிட  வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியே  எண்ணங்களை யாராலும்  பார்க்க முடியாது. அவற்றின் சத்தமும் கேட்கவில்லை என்பதால் அவற்றை பிறர்  எவரும் அறியவோ காணவோ, புரிந்து கொள்ளவோ  முடியாது.
பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த பெரிசு நான் என்று வைத்துக் கொண்டால் என் மனத்தில் என்ன அப்படி எண்ண ஓட்டங்கள்ஓடுகிறது.?  வேகமாக ஓடுவதில் சிலதைப் பிடித்து  அது என்ன  என்று உங்களுக்கு சொல்லட்டுமா?
ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன். அவர்கள் எனக்கு தெரிந்த முகங்கள்  தான். குறித்த நேரத்தில் எதிரும் புதிருமாக  போவோம் வருவோம்.  பேசி ஒருவரை ஒருவர்  அறிந்து கொள்ளாத  பழக்கமில்லாதவர்கள். பேசாததால் எனக்கு அவர்கள் மேல் கோபமோ,  விருப்போ, வெறுப்போ எதுவுமே இல்லையே. இப்படித்தான்  பற்றற்று இருக்க வேண்டுமோ?
வாழ்க்கை என்பதே இப்படித்தான்  10% எனக்கு நடந்ததும்,  90% நான் எப்படி அந்த செயல்களுக்கு எப்படி  எதிர் வினை, எதிர் விளைவு ஆற்றினேன் என்பது தான் என் வாழ்க்கை  அனுபவம். எல்லோருக்கும் இதே  தான்.
சொந்த பந்தம், நட்பு,  எவராக இருந்தாலும் அளவற்ற  அன்பும்  எதிர்பார்ப்பும் இருந்தால்  அதே அன்பு,  நீ எதிர்பார்த்தது, உனக்கு  கிடைக்காவிட்டால், கடைசியில்  ஏமாற்றம் பிரதிபலனாக  விளைந்தால் அந்த வலியை  மனம்   தாங்க முடிகிறதா?  சற்று  தூரத்தில்  ஒட்டாமல் இருந்தால் எதுவும் நம்மை நெருங்கி வந்து   இடிக்கப் போவதில்லை. நாம் துன்பப்படப் போவதில்லை என்பது பாடம்.
வயதாக ஆக  ஒரு படிப்பினை புரியும். அநேக  எண்ணற்ற  நண்பர்கள் உனக்கு இருக்கிறார்கள் என்ற  பெருமிதத்தை விட   அவர்களில்  உண்மையான நண்பர்கள் உனக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்  என்பது புரியும்.
பிறருக்கு  எதையாவது  கொடுப்பது என்பது பலவீனம், தற்பெருமை அல்ல. நீ பலமிக்கவன்,  உண்மையை புரிந்து கொண்டவன் என்று காட்டுகிறது. நீ கொடுக்கும் வஸ்து  இல்லாமலேயே நீ வாழமுடியும் என்ற நம்பிக்கை தருகிறது.  கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் எப்படியாவது அது நிறைவேறிவிடும்.  கொடுக்கவேண்டாம் என்று நினைத்தால் அதற்கு ஏதாவது  ஒரு காரணம் மனதில் தோன்றி  அதை தடுக்கும்.கொடுக்க நினைத்தால் அந்த கணமே அதை நிறைவேற்றவேண்டும். அப்புறம்  அது   நடப்பதில்லை. இது  மனித ஸ்வபாவம்.
உலகில் பேரழகி  வேண்டவே வேண்டாம்.  உன் சிறிய  உலகத்தை  அழகாக்கும் பெண் கிடைத்தால்  நீ ராஜாதி ராஜன்.காதல்  அன்பு, இதெல்லாம்  ஒவ்வொருவருக்கும்  அவர் வாழ்க்கையில்  மனைவி மக்களோடு இருக்கிறது. இணை பிரியாத அன்புக்கு  இருவர்  சேர்ந்திருக்க வேண்டும்  என்ற கட்டாயம் இல்லை.  உண்மையான அன்பு இருவரையும்  கண்காணாமல் எங்கெங்கோ பிரிந்து  இருந்தாலும்  கோந்து  போட்டு ஒட்டினால்போல மனதில் ஒன்று  சேர்க்கும்.   என் நண்பன்  பாலகிருஷ்ணன் மனைவி இழந்தவன்.   இறந்த சில நாட்களிலேயே உற்சாகமாக சந்தோஷமாக  வழக்கம் போலவே  ஜாலியாக இருந்தான். ”என்னடா  பாலு இது, கோமதி போய் ஒரு மாசம் ஆகலே  உனக்கு கல் மனசா?  துக்கமே  இல்லையா? என்று கேட்டபோது
”கோமதி எங்கேடா செத்துப்போனாள் . அவள் தான் என்றுமே  எப்போதுமே  என்னோடு  இருக்கிறாளே இப்போது கூட  அவளோடு தானே  அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்” என்பான்.  ”கல்யாணம் பண்ணிக்கோ”  என்றால்   ”சும்மா இருப்பா,  சரியான, சகலமும் அறிந்த, பண்புள்ள, அழகான, படித்த, குடும்ப பாங்கு நிறைத்த,  நிறைய சம்பாதிக்கும் PERFECT  பெண் வேண்டும்”   என்கிறவனே, கொஞ்சம் யோசி, அவளால் உனக்கு  PERFECT  சந்தோஷம் கிடைக்குமா?  மேலே சொன்னதெல்லாம் இல்லாத  ஒரு நல்ல பெண், உன்னை perfect ஆக சந்தோஷமாக  இருக்க செய்பவள் கிடைத்தால் தான்  நீ பாக்கியசாலி. நிழலைத் தேடாமல் நிஜத்தை தேட வேண்டும். நல்லவை கிடைப்பது வாழ்க்கையில் அபூர்வம்.அப்படி  நல்லவை கிடைக்க  வாய்ப்பிருக்கும்போது தவறவிடாதே.
ஒன்று நிச்சயம் தம்பி. ஒவ்வொன்றும் உன்  வாழ்க்கையில் நீ  அனுபவித்தது உன்னை ஏதோ ஒரு தருணம் வரும்போது உதவும்.   உபயோகமாக இருக்கும். அனுபவம் ஒரு பொக்கிஷம். மறக்காதே.
நான்  மற்றவர்களை விட மேலானவன்,உயர்ந்தவன் என்று பெருமைப்படாதே, உண்மையில்  நீ  முன்பிருந்ததை விட இப்போது வேறாக , திருந்திய  உயர்ந்தவன், மேலானவன் என்பதில் தான் நீ பெருமைப்படவேண்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *