அங்க சாஸ்திரம் – சாமுத்ரிகா லக்ஷணம் – நங்கநல்லூர் J K SIVAN
இந்த பரந்த உலகில் அடேயப்பா எத்தனை விஷயங்கள் இருக்கிறது. அநேகமாக நமக்கு தெரியாதவை தான் ரொம்ப ஜாஸ்தி. நம்ம எல்லோருக்கும் தேகம் இருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அதே போல தான் அவரவர் குணமும் மாறு பட்டது. அதை அந்த உடம்பே காட்டிக் கொடுக்குமாம். அந்த விஷயத்துக்கு ஒரு சாஸ்திரம் இருக்கிறது.அதற்குப் பெயர் சாமுத்ரிகா லக்ஷ்ணம். அங்க ஸாஸ்த்ரம். இதன் உட்பிரிவாகி, கைரேகை சாஸ்திரம் போன்ற இன்னும் பல அற்புத சுரங்கங்கள் உள்ளது.
சாமுத்ரிகா லக்ஷணம் என்ற பெயர் மட்டும் தான் அநேகமாக நமக்குத் தெரியுமே தவிர அந்த சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று எவரும் அறிய முயற்சிக்க வில்லை. நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. இதோ கொஞ்ச விஷயம்சொல்கிறேன். .ரொம்ப ஸ்வாரஸ்யமாக இருக்கிறது படியுங்கள்.
நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்கம் என்றால் அது தப்பில்லை. எவ்வளவோ விஷயங்கள் அதில் இருக்கிறது. அதை அறியாமலேயே, நாம் முடிந்து விடுகிறோம் . அரைகுறையாக அதை தெரிந்து கொண்ட டாக்டர்கள் ஆஸ்பத்திரிகள் நம்மை இன்னும் சீக்கிரமே முடித்து விடுகிறார்கள்.
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. மோட்டு நெற்றிக்காரன் என்கிறோம். உண்மையில் அகலமாக உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். ரொம்ப அகலமாக மேலே போய் கொண்டிருந்தால் அது வழுக்கை சார். சரியாக பார்த்து சொல்லுங்கள்.
நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத் தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
காது இப்படித்தான் பரந்து விரிந்து இருக்க வேண்டும். காது சின்னதாக ஆக அந்த ஆசாமியின் மனநிலையும் எண்ணங்களும் கூட குறுகலாக இருக்குமாம்.
சாமுத்ரிகா லட்சணம் சும்மா விருதாவாக சொல்வதல்ல. மரத்தடியில் எவன் கையோ பார்த்து இன்னும் மூன்று நாளில் வெளியூரிலிருந்து உனக்கு ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று சொல்பவர்களை நம்புகிறோம். ஐந்து ரூபாய் கொடுத்து அமெரிக்காவில் உத்யோகம் கிடைக்குமா என்று கை ரேகை சாஸ்திர வியாபாரியிடம் ஏமாறுகிறோம். அதேபோல் கிளி ஜோஸ்யம் அதை பற்றி ஒரு பெரிய திண்டு புஸ்தகமே எழுதலாம்.
அதிர்ஷ்டம் தேடியவனுக்கு கடைசியில் செலவு தான் மிச்சம். ஜோசியன் மறைந்து போவான். நான்கு நாள் கழித்து யாரையோ நம்பி காரண்டி surety போட்டதால் அந்த ஆள் பணம் கட்டாததால் பாங்கிலிருந்து நோட்டீஸ் தான் வரும். அது தான் வடக்கே மைலாப்பூரிலிருந்து ஒரு போஸ்ட்மன் மூலம் வருவது தான் அதிர்ஷ்டம்.
இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் காணலாம். அதில் காணப்படுவது எல்லோருக்கும் அமையாது. அமைந்துவிட்டால் அவள் தெய்வம். பெண் பார்க்க போகும்போது அந்த காலத்தில் பெரியவர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்க்கும்போது மாப்பிள்ளைக்காரன் பெண்ணின் அழகை பார்ப்பதில் கவனமாக இருப்பான்.ஆகம சாஸ்திரத்தில் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியவையாக சிலை வடிக்கிறார்கள். நாம் அடிக்கடி யாரையாவது பார்த்தல் ”ஆஹா அந்த பெண்ணை பார்த்தாயா மஹா லக்ஷ்மி மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறாள்” என்கிறோம்.
முகத்தில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லக்ஷணம் சொல்கிறது. கண்களில் எத்தனையோ ரகம் . உரு
ண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் ,கமலாய தாக்ஷி, நீலாயதாக்ஷி, விசாலாக்ஷி, பத்மாக்ஷி, மீனலோசனி… அடேயப்பா அம்பாளுக்கு எத்தனை பெயர்கள் கொண்ட கண்கள்.
நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம். இந்த மாதிரி விறல் உள்ள பெண்கள் மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர் நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். ‘ஆஜானு பாஹு என்று சமஸ்க்ரிதத்தில் இதை தான் சொல்வோம். நமது தமிழ் பொல்லாதது. ”அந்த ஆளுக்கு கை நீளம்” என்றால் வேறு அர்த்தம். உண்மையில் அப்படிப் பட்ட நிறைய பேரை நாம் அரசியலிலிருந்து ஆபிஸ் வரை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். கண் பார்த்ததை கை எடுத்துவிடும் அபேஸ் பேர்வழிகள்.