பாட்டி வைத்தியம்– நங்கநல்லூர் J K SIVAN
”பாட்டி, கோகிலா மாமி, மருதாணி கொடுத்தா. அதை தலைலே பூசினா கலர் வரும் னு சொன்னா. வரலையே.
”ஆமாண்டி. ஆத்துலே பதமா போடற மருதாணி வேறே. கடையிலே வாங்கறது வேறே. கிமிக்கலோ ஜெமிக் கலோ ஏதோ சொல்றாளே, அதை சேர்த்து பண்ணறா . அதாலே கலர் வராது, வியாதிதான் வரும். அந்த சாயம் ரொம்ப நாள் நிக்காது. பழையபடி தலை வெள்ளையா பல்லை இளிக்கும். ஆத்துலே மருதாணி இலையை ஆஞ்சு அரைச்சு, , கரிப்பவளம் காய்ச்சி குழைச்சு தடவினா நரை முடி எப்போவும் கறுப்பாவே இருக்கும்.
”மூசாம்பரம் என்கிறாளே அது என்ன பாட்டி?
”கத்தாழை பார்த்திருக்கியா, அதை பாடம் பண்ணி தான் கரிப்பவழம் பண்ண முடியும். கரிப்பவழம் தான் மூசாம்பரம். கத்தாழையை வெட்டினால் அதிலிருந்து மஞ்சளா சாறு சொட்டும். அதை விஷம் ன்னு சொல்லுவா. அதனாலே தான் வெள்ளை நரை முடியை கறுப்பாக்கும்.’
‘அதை என்ன பண்ணறது பாட்டி?”
”அந்த மஞ்சள் சாறு இருக்கு பாரு, அதை சில ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்தி பாடம் பண்ணுவா. அப்படி தான் கரிப்பவழம் என்கிற மூசாம்பரம் செய்யறாளாம். .”அது எப்படி இருக்கும் பாட்டி?’
”’மரத்திலிருந்து பிசின் எடுத்து அது கெட்டியானா எப்படி இருக்குமோ அப்படி பெருங்காய கட்டி மாதிரி கெட்டியா இருக்கும். கருப்பா இருக்கும். அதனாலே தான் நரை முடி வெளுப்பா ஆகறது.. அடிக்கடி இதை குழைச்சு தடவிக்கிறதாலே எப்போதுமே தலை முடி கறுப்பாயிடறது.
”சொல்லுங்கோ பாட்டி எழுதிக்கிறேன்”.
மூசாம்பரம் – சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கோ. தேங்காயை துருவி அரைச்சு பால் அரைடம்பளர் எடுத்துக்கோ அரை டம்பளர் தேங்காப் பாலில் மூசாம் பரத்தை போட்டு கலக்கி மூடிவை. ரெண்டு மணி நேரத்திலே கரைஞ்சுடும்.அதை குழைச்சு அழுத்தி தலை மேலே தலைமுடி வேர்க்காலில் படற மாதிரி தடவு.ரெண்டு மணி நேரம் ஊறணும். ஷாம்பூ போட்டு தலையை அலசணும். அம்புட்டுதான்.
”இது ஒன்னு தான் வழியா பாட்டி?
”இல்லே, இன்னொன்னும் இருக்கு. சொல்றேன்
.”கரிப்பவளம்.பவளம் சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக்கோ.
”அதோடு நெல்லிக்காய் அரைச்சு ஜூஸ் – 1 கப் எடுத்துக்கோ”
”ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸில் கரிய பவளத்தைப் போட்டு கலந்து 2 மணி நேரம் ஊற விடு. அப்புறம் அதை கலக்கி தலை மேலே தடவணும் . ரெண்டு மணி கழிச்சு தலையை அலசி துடைச்சுக்கோ.தலை கருப்பா இருக்கும்
”சிலபேர் இந்த கரிப் பவழம் என்கிற மூசாம்பரத்தை டீ டிகாஷன் ஒரு கப் எடுத்துண்டு அதிலே ரெண்டு மணி நேரம் ஊற வைச்சுட்டு தலையிலே தடவிப்பா.
அடிபட்டா காயம் பட்ட இடத்திலே ரத்தம் கட்டிண்டு வீக்கமாகும். அப்புறம் அந்த ரத்தம் கட்டிய இடம் கருப்பா மாறிடும். வலிக்கும். அந்த ரத்தக்கட்டு கரைய மூசாம்பரம் தடவறது வழக்கம். ரத்தம் உறைஞ்சு போன இடத்திலே ரத்த கட்டு கரைஞ்சு ரத்தம் குழாயில் ஓட வைக்க இந்த மூசாம்பரம் உதவறதாலே அதுக்கு ரத்தப்பாளை என்று கூட ஒரு பேர்.
”ரத்தக் கட்டு குணமாக இன்னொரு வைத்தியம் தெரியுமா உனக்கு?
இரத்தக் கட்டு குணமாக புளியை கொஞ்சம் எடுத்து, கல்லுப்பு சேர்த்து பிசைந்து பசைபோல கலக்கி ரத்த கட்டு இருக்கிற இடத்துக்கு மேலே பத்து போட்டால், தடவினால், ரத்தக்கட்டை கலைச்சுடும்.
நாட்டு மருந்து கடைகளில் மூசாம்பரம் என்கிற ரத்தபாளை , கரிப்பவழம் கிடைக்கும். தண்ணிலே குழைச்சு ரத்தக்கட்டு இருக்கிற இடத்துக்கு மேலே தடவினா வீக்கம் குறையும், கருப்பா இருந்த ரத்தக் கட்டு கலையும் .வலியும் போயிடும்.
எங்க மாமியார் ஆத்துலே ஒரு வழக்கம். மஞ்சள் பொடி கொஞ்சம் எடுத்துண்டு வெந்நீரில் கலந்து களிம்பு மாதிரி ரத்த கட்டு மேலே தடவி, வெள்ளை துணியால் சுத்தி கட்டு போடுவா. ரெண்டு மூணு நாளிலே குணமாயிடும் .
ஆமணக்கு, நொச்சி இலை இருக்கு பார்த்தியா, அதை பறிச்சு விளக்கெண்ணெயில் கொஞ்சம் சூடா வதக்கி, வெள்ளைத்துணிலே கட்டி பொறுக்கிற சூட்டில் ஒத்தடம் கொடுக்கிறதும் உண்டும். வடக்கே ஆர்க்கா ட்டு பக்கம் இது தான் வீட்டு வைத்தியம். ரத்தக்கட்டு கரைஞ்சுடும்.
இன்னும் சொல்றேன் .
இப்போ வடைக்கு அரைக்கணும்.