விஷுக்கணி – நங்கநல்லூர் J K SIVAN
14.4.2024 மலையாள நண்பர்களுக்கும் நம்மைப் போல விசேஷ நாள். விஷு വിഷു) கேரளாவில் மட்டுமல்ல மலையாள மக்கள் உலகில் எங்கிருந்தாலும் கோலாகலமாக கொண்டாடும் புத்தாண்டு விழா.நாளை ஏப்ரல் 14 அன்று சூரியன் மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்றால் ”சமம்” என்று அர்த்தம். வருஷத்தின் ஓர் சமதின நாளைக் குறிகிறதோ? விஷு (மேஷ த்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் – செப்டம்பர்) முதல் நாளே மலையாள புத்தாண்டு தினம் விஷுக்கணி படையல்கள் பகவானுக்கு அர்ப்பணம் பண்ணுவார்கள். பூஜை அறையில் , அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர், தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்து நைவேத்யம். வெண்கல நிலா விளக்கு பளிச்சென்று தீப பிரகாசம் கொடுக்கும். எல்லாம் முதல் நாள் ராத்திரியே தயாராக வைப்பார்கள். விஷூ அன்று விடிகாலை எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே கண்ணை விழிப்பது வழக்கம். குழந்தைகளை கண்களை மூடி பூஜை அறைக்கு அழைத்து வருவார்கள். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கம் என்பதால் ராமாயண பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படிப்பார்கள். சிலர் இராமாயணத்தின் எந்த பக்கத்தை திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை பற்றி சொல்லும் என்ற நம்பிக்கை. பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து “விஷூக்கணி காழ்சா” என்ற தரிசனம் பெறுவார்கள்.
கணிக் கொன்றை விஷூக்கனியின் போது வைக்கும் பிரபலகேரள பூ. வட கேரளாவில் குழந்தைகள் பட்டாசு வெடிப்பார்கள். புதுக் கோடி (DRESS ) அணிவது வழக்கம். ” விஷூக்கை நீட்டம்” என்று தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் காசு (நாணயம்) ( இப்போது.ரூபாய் நோட்டு) கொடுப்பார்கள். விஷு விருந்தும் உண்டு. உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமையல் பண்ணுவார்கள். . விருந்தில் வேப்பம்பூ ரசமும் (கசப்பான வேப்பமரப் பூ) மாம்பழ பச்சடி யும் (புளிப்பான மாம்பழச் சாறு) நம்மைப்போல் அங்கேயும் உண்டு.
மலையாளத்தில் “கணி” = பார்ப்பது “விஷுக்கணி”= விஷூ அன்று விடிகாலை முதலில் காண்பது.
“கணி ” பார்க்க பெரிய வெண்கல உருளி பாத்திரம் தான் உபயோகிப்பது வழக்கம். எல்லா அளவுகளிலும் கிடைக்கும். இதன் விட்டம் சில அங்குலங்களிலிருந்து 10-12 அடி வரை கூட இருக்கும்! பெரிய வடிவ உருளிக்கு சரக்கு, ஓடு என்று பெயர்கள். பஞ்சலோக உருளி பஞ்ச பூத அண்டத்தைக் குறிக்கின்றது
ஒரு தட்டில் சிறிது அக்ஷதை, அரிசி , புஷ்பம், வெள்ளி நாணயம் எல்லாம் வைப்பார்கள். கணி காணலுக்குப் பிறகு டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூவா தலையா பார்த்து வேண்டுதல் பலன் அறிவார்கள். கணி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் விக்ரஹத்துக்கு எதிராகவோ, படத்திற்கு முன்போ வைப்பார்கள். கொன்றைப் பூவால் கணி உருளி, படம் எல்லாவற்றுக்கும் அலங்காரம். வெண்கல விளக்கு, பித்தளை விளக்கு தீபத்தால் தான் கணி உருளையைப் பார்ப்பார்கள். உருளிக்குள் தேங்காய் மூடி ரெண்டில் தீபம் இருக்கும்.
மனிதர்கள் விஷுக்கணி பூஜை அறையில் கண்டபிறகு நடக்கமுடியாதவர்களுக்கு உருளியை எடுத்துச் சென்று காட்டுவார்கள். தோட்டத்தில் செடி கொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு பகவானை இவ்வாறு காட்டுவார்கள். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று உருளியோடு ப்ரதக்ஷிணம் வருவார்கள்.
விஷூக்கணி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர் கோயில் மற்றும் சபரிமலை போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
சாத்யா கேரள பண்டிகைகளில் மிக முக்கிய அம்சம். விஷூவின் போது, விஷூ கஞ்சி மற்றும் தோரன் நிச்சயம் உண்டு. பாயசம் மாதிரி. கஞ்சி, அரிசி, தேங்காய்ப் பால் மற்றும் ஏலக்காய், குங்குமப்பூ போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிப்பது.
மலையாள நண்பர்களுக்கு என்னுடைய விஷு வாழ்த்துக்கள்