HOME MEDICINE J K SIVAN

பாட்டியின்   வீட்டு  வைத்தியம்  –    நங்கநல்லூர்   J K   SIVAN
செட்டியாரம்மா  மனோஹரிக்கு  வயிற்று வலி. என்ன செய்வது என்று தெரியாமல்  யாரோ சொல்லி பாட்டி வீட்டுக்கு வந்த போது பாட்டி ”என்னடி  உனக்கு?” என்று கேட்டு விட்டு  வெள்ளரிக்காயை  அரிவாள் மணையில் நறுக்கிக்கொண்டே பதிலளித்தாள்.”நீ சொல்றதைப் பார்த்தா  பட்டாபிக்கு வந்தது போலத்தான்  இருக்கு.  அதுக்கு  குடல்  புண்ணுன்னு பேர்.  நா சொல்றதை செய்டி.  சரியாயிடும்.
பூசணிக்காயை எடுத்து  அதிலே  இருக்கிற   விரை, (விதை) எல்லாம் எடு. தோலை சீவு. பூசணிக்காயை பொடிப்  பொடியா நறுக்கி  அம்மியில் அரை. (இப்போ நமக்கு மிக்சியில் ) அரைச்சு  வடிகட்டி சாறு எடுத்துக்கோ.. இத்துடன் மிளகு, சீரகம், இடிச்சு பொடிபண்ணி,  உப்போ  சர்க்கரையோ உனக்கு எது சௌகர்யமோ அப்படி  கலந்து சாப்பிட்டு. ஒருவாரம் இப்படி பண்ணினீயானால்   அப்புறம் பார்  குடல் புண்  கொஞ்சம்  கொஞ்சமா  ஆறி சொஸ்தமாகும்.(சரியாகிவிடும்)இன்னொரு  மருந்தும் கூட இருக்குடி. சொல்றேன்  கேளு.
மாதுளம் பழத்தை  உரிச்சு மணியெல்லாம்  அதான், முத்து எல்லாத்தையும்  எடுத்து  அரைச்சு,  வடிகட்டி சாறு  (ஜூஸ்) எடுத்து  கொஞ்சம்  தேனுடன் கலந்து சாப்பிட்டீனா   வயிற்றுப் புண், வயிற்றுவலி  எல்லாம்  பொடேர் னு  போயிடும். சுப்புலெட்சுமிக்கு அப்படித்த்தான் குணமாச்சு.
இன்னொன்னு கூட  ஞாபகம் வருது சொல்றேன் எழுதி வச்சுக்கோ.  ஆத்தி  கீரையை (அகத்திக்கீரை) தினோமும் வதக்கி மசிச்சு இல்லேன்னா  துண்டு துண்டா நறுக்கி  கறி மாதிரி பண்ணி  சாதத்தோடு  சேர்த்து சாப்பிடு ஒரே வாரம்  குடல் புண் குணமாகும். தெலுங்கு காரி  ஒருத்தி எனக்கு சொன்னா இதை.
அத்திக் காயை நறுக்கி  பயத்தம் பருப்பு போட்டு  கூட்டு ம அதிரி பண்ணி சாதத்தோடு கலந்து சாப்பிடு. வயித்துப் புண்ணுக்கு இதெல்லாம் மருந்துடி. பெரியம்மா  ஜானா வீட்டிலே இது தான் பழக்கம்.
அம்மான் பச்சரிசின்னு  தோட்டத்திலே தானாவே முளைக்கிற  செடி இருக்கே. அற்புதமானது. பகவான் கொடுத்த வரப்பிரசாதம் அது.   அதோடய  இலையை பறிச்சு  மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைச்சு சாப்பிட்டா  குடல் புண்ணுக்கு நல்ல நிவாரணம்னு   சொல்வா.  அம்மாம் பச்சரிசி எப்படி இருக்கும்னு முதல்லே கேட்டு தெரிஞ்சுக்கோ. கொல்லைப்பக்கம் வா  உனக்கு காட்றேன்.
அரை நெல்லிக்காய்னு குழந்தைகள் சாப்பிடுமே  அது இல்லை நா சொல்றது.   முழுசா  பெரிசா இருக்குமே  ஊறுகா போடுவா பாரு, அந்த பெரிய நெல்லிக்காயை எடுத்து அரைச்சு  சாறு எடுத்து  கால் கரண்டி  (ரெண்டு டேபிள் ஸ்பூன் சொல்றா பாட்டி) வெறும் வயத்தில் சாப்பிட்டீன்னா குடல் புண் ஆறிடும்..
ஏலக்கா, சுக்கு, கிராம்பு (லவங்கம்), சீரகம்,   தலா (ஒவ்வொண்ணுலேயும் )  அரை  கரண்டி  ( நமக்கு இப்போது 50 கிராம்) எடுத்து பொடிச்சு வைச்சுக்கோ.  தினோமும்   ரெண்டு சிட்டிகை   (நமக்கு  2 GRAM ) ரெண்டு  வேளை சாப்பிட்டா  குடல் புண்  வயிற்று வலி எல்லாம் போயிடும். கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊற வைத்துச் சாப்பிடறதாலே  நிறைய  பேருக்கு வயத்துப் புண் குணமாகி இருக்கு .
அதே மாதிரி  கொஞ்சம் அரிசி  (2 ஸ்பூன்), கசகசா  கொஞ்சம் ரெண்டையும்  ஜலத்திலே  ஊற வைச்சிட்டு தேங்காய் சில்லு   பொடிப் பொடியா நறுக்கி  சேர்த்து அரைத்து ஜலம் சேர்த்து கஞ்சி மாதிரி  அடுப்பில் மிதமான சூட்டில் காய்ச்சி வச்சுண்டு அப்பப்போ குடிச்சா வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிடும்.   ரெண்டு மூணு வேளை குடிச்சாலே  கை  மேலே  பலன் தெரியும்டி.
இதெல்லாம்  எங்கம்மா  சாலாக்ஷி சொல்லிக்கொடுத்தது . வயத்தில் புண்ணு இருந்தா  சாப்பாடு ஜீரணமாகாது.  வாய் நாறும். .அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும்.  வயறு வலிச்சிண்டே இருக்கும்.  எரிச்சல் இருக்கும்.  காரம் சாப்பிடவே முடியாது. சாப்பிடவே பிடிக்காது. எதை சாப்பிட்டாலும் வயத்தை வலிக்கும். தூக்கம் கெட்டுப்போகும். மனசுலே   சோகம், அழுத்தம், யாரோடயும் பேச பிடிக்காது. சள்ளுபுள்ளு ன்னு எல்லார் மேலேயும் எரிஞ்சு விழுவா. இதுக்கு தான்  பாட்டி மேலே  சொன்ன வைத்யம்  ஒரு நிவாரணி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *