துருவன் – நங்கநல்லூர் J K SIVAN
நமக்கு துருவ நக்ஷத்ரம் தெரியும், ஆங்கிலத்தில் orion எனப்படுவது. அதை pole ஸ்டார் என ஆங்கிலத்தில் சொல்வது தான் தமிழில் துருவ நக்ஷத்ரம். வானில் பிரகாசமாகத் தெரியக்கூடிய விண்மீன்களில் ஒன்று. யார் துருவன் என்பதற்கு ஒரு சின்ன கதை சொல்லவேண்டும்.
மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தான பாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணம் சுநீதியையும் துருவனையும் அந்த ராஜா, காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்கிறது. ஒருநாள் சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்து கொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான். சின்ன குழந்தை துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்த போது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று திட்டி அவனைக் கீழே தள்ளிவிட்டாள். கீழே விழுந்த குழந்தையைப் பார்த்த ராஜா அவனைத் தூக்கவுமில்லை, ஏன் தள்ளினாய் என்று சுரூசியினிடம் கேட்கவுமில்லை. தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி மவுனமாக வாய் மூடி உட்கார்ந்திருந்தான். இப்படி ஒரு ராஜா! இல்லை, அப்பன்! பாவம் துருவன் எனும் அந்த சின்ன குழந்தை ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தது. அழுது கொண்டே அம்மா ஸுனீதி ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு நடந்ததைச் சொல்லியது.
என்ன நடந்தது என்று தாயார் கேட்டதும் நடந்ததைச் சொன்னான். “அப்பா துருவா, சுரூசி சொன்னதில் என்ன தப்பு? நான் பாபம் செய்தவள். என்னிடத்திலே பிறந்த நீயும் பாபத்தையே செய்திருக்கிறாய். பாபத்தைப் பண்ணிவிட்டு உயர்ந்த பலனை அடைய நாம் விரும்பலாமா? நமக்கு வேறு கதி இல்லையே”என்று தானும் அழுதாள்.”அம்மா, நீ அழாதே, நீ அழுதால் எனக்கு என்னமோ செயகிறது? ஏதாவது வழி தெரிந்தால் சொல்லேன்” என்று கேட்டான் ஐந்து ஆறு வயது குழந்தை துருவன்.
”அப்பா துருவா, நம்முடைய கஷ்டத்திற்கு ஒரே வழி கோவிந்தனை அடைந்து பூஜிப்பது தான் என்று எனக்கு தோன்றுகிறது””அப்பா நான் என்ன செய்தால் கோவிந்தன் நமக்கு வழி காட்டுவான் என்று சொல்லிக்கொடு” என்றான் சிறுவன் துருவன் ” நாம் காட்டில் தான் இப்போது வாழ்கிறோம். நீ ஒருஇடத்தில் போய் தனியாக உட்கார்ந்து கொள் . கண்ணை மூடி ”கோவிந்தா, நாராயணா” என்று அவன் பேரைச் சொல்லிக்கொண்டே விடாமல் அவனை நினைத்துக் கொண்டிரு. ஒருநாள் அவன் வருவான் வந்து நமக்கு உதவி செய்வான். எனக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லையப்பா” என்றால் சுநீதி . குழந்தை துருவன் அந்த காட்டில் தனியாக ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்தான். தவம் செய்தான்.பரிசுத்தமான மனத்தோடு அந்தக் குழந்தை ” நாராயணா நாராயணா ”என்று இடைவிடாமல் ஜபம் செய்தது.
சப்தரிஷிகளும் அந்த குழந்தையைப் பார்த்து க்ஷத்ரிய தர்மமான தேஜஸ், கோபம் இரண்டும் இவனுடைய முகத்திலே தெரிகிறதே என்ற ஆச்சரியப்பட்டார்கள். அவர்களில் நாரதரும் ஒருவர். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை நாரதர் அக்குழந்தையின் செவியில் உபதேசம் செய்தார்.
துருவன் இருந்த காடு யமுனை நதிக்கரைப் பக்கம்இருந்தது. முதல் ஒரு மாதம் பழத்தை மட்டும் சாப்பிட்டுத் தியானம். இரண்டாவது மாதம் இலை, தழை சாப்பிட்டுத் தியானம். மூன்றாவது மாதம் தீர்த்தம் மட்டும் பருகிவிட்டுத் தியானம். நான்காவது மாதம் வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு தியானம். ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளாது நின்றுகொண்டு தியானம் பண்ணினான் துருவன்.
நாராயணன் நாமம் சொன்னால் நமக்கே நல்லது நடக்கும் எனும்போது இடைவிடாது உபவாசத்தோடு ஜபம் செய்த துருவன் நாரதரின் அனுக்ரஹத்தோடு பெரிய பக்தனாகிவிட்டான். ஒவ்வொரு மாதமும் துருவனுக்குப் படிப்படியாகச் சுத்தி ஏற்பட்டு ஐந்தாவது மாதத்தில் பரப்பிரம்ம ஞானம் சித்திக்கிறது. தியானம் செய்யும் மூர்த்தி ஹ்ருதயத்தில் தெரிகிறான். நாரதரின் உபதேசத்தினால் ஐந்தாவது மாதத்திலேயே ஸ்ரீமந் நாராயணனைப் பார்த்துவிட்டான் துருவன்
கண் மூடி வாய் மாத்திரம் நாராயணா நாராயணா என்று ஜெபிக்கும் துருவன் எதிரே பகவான் வந்து நின்றான். “துருவா!” கண்ணைத் திறந்து பார்த்த குழந்தை திக்பிரமையாகித் திகைத்து நிற்கிறது. யார் இது என்றே அவனுக்குத் தெரியாதே.குழந்தையின் நிலையைப் பார்த்த பரமாத்மா தன் இடது கையிலேயிருந்த பாஞ்சஜன்யமாகிற சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தைத் தொட்டார்.சங்கு தான் சகல வேதம். சங்கின் நுனி ப்ரணவ மந்திரம். சங்கின் நுனி பட்ட மாத்திரத்தில் குழந்தை துருவன் மகா ஞானியாகிவிட்டான். கடகடவென்று பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறான் துருவன். “நீ அல்லவோ என்னுள் உட்புகுந்து பேச வைக்கிறாய்” என்று பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிரான் துருவன்.
`உன்னுடைய அனுக்ரஹம் இல்லாமல் ஏதாவது நடக்குமா? என்று கேட்கிறான்.பரமாத்மாவுக்கு பரம சந்தோஷம். ”துருவா நீ எழுந்து உன் அப்பாவிடம் போ. இன்றுமுதல் இன்னும் முப்பத்தாறாயிரம் வருடங்கள் நீதான் ராஜ்ய பரிபாலனம் செய்யப் போகிறாய்” என்கிறார் நாராயணன். துருவன் முன் ஜென்மத்தில் ஒரு பிராமணனாக இருந்தான். ராஜாவின் அரண்மணையை ஒரு நாள் பார்த்து நாமும் ஒருநாள் ” ராஜ்ய பரிபாலனம் பண்ண மாட்டோமா” என்று நினைத்தான் அந்த பிராமணன். அந்த ஆசையை இப்போது அடுத்த பிறவியில் துருவனாக பிறந்த[போது நிறைவேற்றி வைத்தார் பரமாத்மா.
அரண்மனையில் திடீரென்று உண்டான ஒரு தீயில் ராஜா உத்தான பாதனின் இளைய மனைவி சுரூசியும் பிள்ளை உத்தமனும் கருகி மாண்டு போனார்கள்.ராஜா உத்தான பாதனுக்கும் நல்ல புத்தி வரும்படி பகவான் அனுக்ரஹம் பண்ணி உத்தானபாதன் தான் செய்த தவறுக்கு வருந்துகிறான். சுநீதியையும் துருவனையும் அரண்மனைக்கு அழைத்து வருகிறான். துருவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்து ராஜாவாகிறான்.
காலம் சென்று கொண்டிருந்தது.
பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் துருவனுக்காக நட்சத்திர மண்டலத்தில் உத்தமமான இடத்தை அமைத்துக் கொடுத்தார். புஷ்பக விமானம் வந்து அவனை அழைத்துக்கொண்டு போனது. நம் அம்மாவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த துருவனுக்கு முன்னே மற்றொரு விமானத்தில் சுநீதி சென்றுகொண்டிருந்தாள். துருவனால் அம்மாவிற்குப் பெருமை. பரமாத்மா அமைத்துக் கொடுத்த இடத்தில் துருவன் இன்னமும் வீற்றிருக்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதுதான் துருவ நட்சத்திரம் என்று வழங்கப்படுகிறது. துருவ நட்சத்திரத்தின் பக்கத்தில் சிறிய நட்சத்திரமாக சுநீதி இருக்கிறாள்.
பகவானைப் பிரார்த் தனை செய்தால் இவ்வுலகில் வாழ்வதற்கான ஆரோக்யம், ஐஸ்வர்யம், நல்ல குடும்பம் எல்லாம் தந்து கடைசியில் மோட்சத்தையும் கொடுக்கிறான் பகவான். இதுதான் துருவனின் கதை நமக்குச் சொல்லும் சேதி.
பூமியிலுள்ள நாம் மேலே தலையை சாய்த்து பார்த்தால் துருவநட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். மீதி நக்ஷத்ரங்கள் துருவங்களைச் (celestial poles) சுற்றி வரும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அதுவும் வான துருவத்தில் இருக்கும். இதனால் பண்டைய காலத்தில் கடற்பயணம் பண்ணும்போது இரவில் திசை அறிய துருவ நட்சத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வடக்கில் காணப்படும் பிரகாசமான துருவ நட்சத்திரத்தின் பெயர் போலாரிஸ் (polaris). தென் துருவத்தில் இப்படி ஒரு பிரகாசமான நடசத்திரம் எதுவும் இல்லை.