கண்ணை மூடியே காப்பவன் .. நங்கநல்லூர் J.K.SIVAN
சாதாரணமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ப்ரத்யேகமாக வழிபாடு . எண்ணற்ற பக்தர்கள் அன்று விசேஷமாக ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டு பூஜை அர்ச்சனைகள் செய்வார்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதியில் ஸ்ரீனிவாசனை தர்சனம் பண்ணுவது ரொம்ப நேரம் நின்ற பிறகு தான் கிடைக்கும். ஒரு அரை நிமிஷம் அவன் எதிரே நிற்பதற்கு எட்டு மணி பத்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்படி வெங்கடேசன் தரிசனம் கிட்டும் நேரத்தில் நாம் கண்ணை மூடிக்கொண்டு விடுகிறோம். அவனை மனக்கண்ணில் காண்பதற்கு எதற்கு பத்து பன்னிரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும்?. அரை நிமிஷத்துக்கு மேல் கண்ணை திறந்து நின்றாலும் பிடித்து தள்ளி விடுகிறார்கள். மற்றவர்கள் காத்திருக்கிறார்களே. நாமே இடம் விடாமல் நின்று கொண்டிருந்தால் நியாயம் இல்லையே என்பதற்காக தான் ‘ஜருகண்டி” ட்ரீட்மெண்ட்.
கண்ணை மூடிக்கொண்டால் தான் நமக்கு பக்தி உண்டாகிறதா என்றால், ஒரு விதத்தில் கண்ணை மூடிக்கொள்வதால் மற்ற விஷயங்கள் கண்ணில் பட்டு கருத்து சிதறாமல் கடவுளை வேண்டுகிறோம். நாம் கண்ணால் பார்ப்பதை விட கடவுள் நம்மை கண்ணால் பார்க்கவேண்டும் என்று தான் அவன் முன் நிற்கிறோம். அவன் கடாக்ஷம் தான் முக்கியம். நிறைய பேருக்கு தேவ கடாக்ஷம் என்று பெயர் அதனால் தான். பகவான் பார்வை நேரடியாக பட்டால் அதன் ஒளியை நாம் தாங்க முடியாது.கடைக்கண் பார்வை ஒன்று தான் நாம் வேண்டுகிறோம். அது கிடைக்கவே பல ஜென்மம் தேவைப்படும் போல் இருக்கிறதே.
திருப்பதி வெங்கடேசன் கண்ணை தங்கவஸ்திரத்தால் மூடி வைப்பது அகஸ்தியரால் என்று சொல்வதுண்டு. ஏன் என்ற காரணம் அகஸ்தியரிடமிருந்து தான்தெரிந்து கொள்ளவேண்டும். வெங்கடேசன் குழந்தையாக இருந்த போது நீரில் நீந்திக் கொண்டிருந்தார். ஒரு மீன் அவர் வாய்க்குள் சென்றுவிட்டது. அதைத் துப்பியபோது அது தங்கநிறம் கொண்டதாகி சூரிய ஒளியில் கண்ணைக் கூசியது. வெங்கடேசன் கண்கள் அளவற்ற சூரிய ஒளியால் கூசக்கூடாது என்று நேரடியாக ஒளியை தவிர்க்க கண்ணை மூடி வைத்தார்களென்று ஒரு ஐதீகம். பகவான் முக்காலமும் உணர்ந்தவர். முக்கால திருஷ்டி கொண்டவர். வெங்கடேசன் கண்களை முக்காலுக்கு மேல் நாமம் மறைந்துவிடுகிறது.புத்தர் சிலைகள் கண்மூடி அவர் தியானத்தில் இருப்பது போல இருக்கும். வெங்கடேசன் பார்வையில் நமது தீய சக்திகள் படக்கூடாது என்று அவரைப் புனிதமாக்க அகஸ்தியர் கண்ணைமூடி வைத்தாரோ என்னவோ?கல்யாண சுந்தரம் என்கிற ராஜாவுக்கு ஒரு எண்ணம் உதித்ததாம். பகவான் பார்வை பக்தர்கள் கண்களோடு உறவாடினால் பக்தர்கள் அதில் மயங்கி தம் வீட்டுக்கு திரும்ப மாட்டார்கள்,கடமைகளை செய்ய மாட்டார்கள் என்பதால் பெருமாள் கண்ணை மூடச் செய்தானாம் .
உடல் உறுப்புகளில் கண் அதீத சக்தி கொண்டது. ரமணர் போன்ற மஹான்கள் நயன தீக்ஷை அளித்தவர்கள். வாய் பேசாமல் கண்கள் மூலமாகவே அனைத்து விஷயங்களையும் சந்தேகங்களையும் அறிந்து பார்வையே பதிலாக அருள்பாலிப்பது. இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவும் மங்களாவும் தேரில் திருமலைக்கு வரும்போது குதிரைகள் படு வேகமாக சூரியனுக்கு எதிர்த்திசையிலிருந்து ஓடி வந்தன. சூரிய ஒளி தஹித்து திரு மாலின் கண்கள் சிவந்து வீக்கம் கொண்டு விட்டன. மங்களா உடனே ஒரு வஸ்த்ரத்தால் அவன் கண்களை மூடி சூரிய ஒளியிலிருந்து காக்கிறாள். அதிலிருந்து வெங்கடேசன் கண்கள் மறுக்கப்பட்டு வருகிறது என்று கதை சொல்கிறது.
வெங்கடேசனின் கண்கள் மூடியிருப்பதன் காரணம் அவன் லோகக்ஷேமத்துக்காக தியானத்தில் இருப்பதால் என்று விளக்குவது ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. அதனால் தான் நாமும் அவன் எதிரே நின்று கண்ணை மூடி அவனை நினைக்கிறோமோ? என்று தோன்றுகிறது.