சந்தோஷம்…. நங்கநல்லூர் J K SIVAN
”ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து கண் திறந்தால் நான் சந்தோஷமா,திருப்தியா, ஒரு குறையுமில்லாமல் இருக்கேன்””என்ன சார். ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரும் நான் சந்தோஷமாக திருப்தியாக இருக்கிறேன் என்று சொல்வதே இல்லை. ஏதோ ஒரு குறை கூறுவார்கள் . அது இல்லை இது இல்லை என்று சொல்லும் உலகத்திலே நீங்கள் பேசுவது விந்தை. நிஜம்மாவா?”என்று என்னை ஒருவர் கேட்டார்.
”ஆமாம். இதில் எதற்கு பொய் ? நான் சந்தோஷமாக இருக்கும்போது இல்லேன்னு ஏன் சொல்லணும்?”’
‘சந்தோஷமா இருக்க என்ன வழி?”’
‘இந்த கேள்வியை என்னைக் கேக்காதீங்க. உங்களை யே கேட்டுக்கோங்க”
‘என்ன சார்? இடக்கு மடக்கா பேசறீங்க, நான் உங்க ஹெல்ப் தானே கேக்கறேன்?”
”இடக்கு மடக்கு, வடக்கு தெற்கு எதுவும் இல்லை இதிலே. நீங்க சந்தோஷமாக இருக்கிறது உங்க மனசிலே தான் இருக்கு சார்
”கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்
‘சந்தோஷம் அடையறது என்பது உங்க கிட்ட இல்லாத ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டு அலைவதில் இல்லை. உங்க கிட்டே எப்போதும் இருக்கிறதை தெரிஞ்சுண்டு அது இருப்பதற்காக பகவானுக்கு நன்றி சொல்வதில் தான் இருக்கு நான் கிருஷ்ணனுக்கு அப்படி தான் எப்போவும் நன்றி சொல்றவன்.’
சந்தோஷம் உங்க சொந்த,பந்தம், நட்பு, சொத்து, உத்யோகம், சம்பளம் அந்தஸ்தில் எல்லாம் இல்லே. அது உங்களோடு எப்போவும் இருக்கிறது. அங்கே தான் ஆரம்பிக்கிறது. தொடர்கிறது.
சந்தோஷம் என்பது பணம் சம்பாதிச்சு, சேர்த்து, பணக்காரன் ஆனா கிடைக்கிறது இல்லே. இலவசமா உங்க கிட்டேயே எப்போதும் இருப்பது. அது வெளியிலிருந்து கிடைக்கிற வஸ்து இல்லே. இன்னொருத்தர் மூலம் கிடைக்காது. உங்களுக்குள்ளேயே இருக்கிறதை நீங்க அறியாமல் இருந்து இப்போது தேட வேண்டிய விஷயம். இல்லாததை நினைக்காமல், தேடாமல், இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி அடை . அது தான் சந்தோஷத்தை உனக்கு கொடுக்கும்.
அப்படின்னு தான் மஹான்கள் யோகிகள், ரிஷிகள் எல்லாம், ஏன் நம்ம, க்ரிஷ்ணன்கூட அடிக்கடி சொன்னது.
சந்தோஷம் என்பது மனசு கொடுப்பது. . நீ உலகத்தை எப்படி பார்க்கிறாய், எப்படி அனுபவிக்கிறாய் என்று உன் மனம் தான் தீர்மானிக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டுவா. திருப்திப்படு .
உனக்கு எது தேவை, எது வேண்டாம் என்று தீர்மானிக்கும் சக்தி உன் மனதுக்கு இருந்தால் சந்தோஷம் உனக்காக அது காத்திருக்கும். நம்மில் அநேகருக்கு நமக்கு எது தேவை,எது தேவையில்லை என்பது தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறோம்.
சந்தோஷம் வெளிலே பொட்டலமா வாங்கற வஸ்து இல்லே. நீயே உண்டாக்கிறது உனக்குள்ளேயே.
சந்தோஷம் என்பது எல்லாம் நல்லதா எங்கேயாவது இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது இல்ல. நல்லதை , இருக்கிற எல்லாத்திலேயும் பார்க்கிறது. இந்த வித்யாசம் உனக்கு தெரியுதா? தெரிஞ்சா சந்தோஷம் உன்கிட்டே இருக்கிறது புரியும்.
வாழக்கை இப்படி தான் இருக்கணும் என்று ஒரு தீர்மானம் பிளான் எதுவும் பண்ணாமல், அது அமைந்துள்ள விதத்தை ஏற்று அதைக் கொண்டாடி மகிழ்ந்தால் அது தரும் நீ தேடும் சந்தோஷத்தை.
கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. வாழ்க்கை ரயிலில் சந்தோஷம் என்கிறது ஏதோ நீ போய் சேரப்போற ஸ்டேஷன் இல்ல, அது தான் உன் பயணமே. அதை சுகமாக்கிக்கொள் அது எல்லா இடத்திலேயும் எப்போதும் நீ அனுபவிப்பது. எங்கேயோ போய் சேர்ந்ததும் கிடைக்கிறது இல்ல. less luggage more comfort என்பது மூட்டை முடிச்சு, பொட்டி ,படுக்கை இல்லை,உன் தேவைகளை குறைத்துக் கொள்வது. இருப்பதை அனுபவித்து திருப்தி அடைவது.