”நச்” னு சொன்ன நறுக்கு ஓலை !” — நங்கநல்லூர் J K SIVAN
அப்பா அம்மா வைத்த பெயர் வெண்காடர், ஸமஸ்க்ரிதத்தில் ஸ்வேதாரண்யர். இருந்த ஊர் திருவெண்காடு. தொழில் பரம்பரையாக கடல் வாணிபம். வியாபாரம் திருவிடை மருதூரில். ரொம்ப சிவபக்தி கொண்ட சைவ செட்டியார் குடும்பம். ரொம்ப நாள் சிவநேசன் செட்டியாருக்கும் அம்மா ஞானக்கலைக்கும் குழந்தை இல்லாததால் திருவெண்காடு பழைய சிவாலயத்தில் மூலவரான திருவெண்காடரை வேண்டிக்கொண்டு குழந்தை பிறந்ததால் அதற்கு அவர் பெயரையே வைத்தார்கள். வெண்காடருக்கு ஐந்து வயதில் அப்பா சிவநேசன் செட்டியார் சிவலோக ப்ராப்தி அடைந்தார்.
நிறைய சிவனடியார்களுக்கு தான தர்மம் செய்த குடும்பம். சிவநேசன் செட்டியார் காலத்திற்கு பின் மகன் வெண்காடர் வளர்ந்து வியாபாரத்தில் நிறைய செல்வம் சேர்த்தவர். அந்த ஊரில் இன்னொரு வணிகர் பெரும்பணக்காரரான சிவசிதம்பரம் செட்டியார் மகள் சிவகலைக்கும் 16 வயது வெண்காடருக்கும் கல்யாணம். கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகியும் வெண்காடருக்கு புத்ர பாக்யம் இல்லை.
அந்த ஊரில் சிவசர்மா என்று இன்னொருவர். அவரும் சிவ கைங்கர்யத்தில் ஈடுபாடு கொண்டு அன்னதானம் செய்பவர். வாரி வழங்குபவர். சொத்து கரைந்தாலும் குறைந்தாலும் அன்னதான கைங்கர்யம் நிற்கவில்லை. மனைவி நகைகள் அன்னதான உணவாயின. மனைவியின் தாலியும் அன்ன தானத்துக்கு உதவியது.
ஒரு நாள் சிவன் சிவ சர்மா .கனவில் தோன்றி ”நான் காட்டும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கும். நீ அதைத் தூக்கிக்கொண்டு நேராக வெண்காடர் செட்டியார் வீட்டுக்குப் போய் குழந்தையை அவர்களிடம் கொடு. அன்னதானத்திற்கு பணம் கேட்டாயே, இந்த குண்டு குழந்தையின் எடைக்கு எடை பொற்காசுகள் கொடுப்பார்.அதன் மூலம் உன் அன்னதானம் தொடரட்டும்.” என்கிறார் திருவெண்காட்டீஸ்வரன். பொழுது விடிந்ததும் சிவசர்மா ஓடினார். கனவில் பரமேஸ்வரன் சொன்ன இடத்தில் ஒரு தங்க விக்ரஹம் போல் ஆண் குழந்தை. சந்தோஷமாக அதைத் தூக்கி வாரி அணைத்துக்கொண்டு வெண்காடு செட்டியார் வீட்டுக்கு போனார். கொடுத்தார்.
”சிவகலை, நமக்கு சிவனருளால் என்ன ஒரு அற்புதமான குழந்தை கிடைத்திருக்கிறது என்று பூரித்தார் வெண்காடர். மருத வாணன் என்று பெயரிட்டார்கள். அப்பா வழியில் மருதவாணனும் வளர்ந்தபின் கடல் வாணிபத்தில் ஈடு பட்டு நல்ல பெயர் எடுத்தான். பாய் மரக்கப்பல்களில் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து அநேக வியாபாரிகள் கீழை நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செயது நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள். மருதவாணனும் அவ்வாறே செய்தான்.
வெண்காடர் ஒருமுறை நிறைய பணம் செலவழித்து சரக்குகள் வாங்கி மகன் மருதவாணனின் கப்பலில் ஏற்றி கப்பல் கடலில் சென்றது. நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டு மருதவாணன் பல மாதங்கள் கழித்து கப்பலில் திரும்ப வருவதற்கு காத்திருந்தார்.
கப்பலில் திரும்பினான் மருதவாணன் . நிறைய மூட்டைகள் வந்து இறங்கின. திருவெண்காடர் அவைகளை பார்வையிட சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. அத்தனையும் உமி, தவிடு, சாம்பல், எரிமுட்டை எனும் விரட்டிகள். எப்படி இருக்கும் திருவெண்காடருக்கு.
”முட்டாள் மகனே, இப்படியா ஒருவன் வியாபாரம் செய்வது. நல்ல பாடம் கற்பிக்கிறேன்.” என கோபத்தோடு வெண்காடர் மருதவாணனை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டார். கடற்கரையில் நின்றிருந்த கப்பல் அருகே அத்தனை உமி தவிடு சாம்பல் மூட்டைகளையும் தூக்கி எறிந்தார். என்ன ஆச்சரியம். வெளியே எடுத்த போது தான் தெரிந்தது. மேலே தவிடு, உமி ஆனால் உள்ளே அத்தனை மூட்டைகளிலும் சொக்கத் தங்க காசுகள். தவிடு அல்ல அதெல்லாம் தங்கப்பொடி, தங்க பஸ்பம், அந்த விரட்டிகளில் நவ ரத்ன வைர வைடூர்ய கோமேதக மாணிக்க கற்கள் பொதிந்திருந்தனவே. தலை தெறிக்க தான் செய்த தவறுக்கு தண்டனை பெற, மன்னிப்பு கேட்க மகனைத் தேடி வீடு நோக்கி ஓடினார் வெண்காடர். பூட்டிய அறையில் மகன் மருதவாணனைக் காணோம்.
”சிவகலை எங்கேடி நமது செல்வம் மருதவாணன்? அலறினார் வெண்காடர்.
”அவன் எங்கேயோ வேகமாக போனான், எங்கே போனான் என்று தெரியாதே”’
”ஆஹா எங்கே,போனான், எதற்கு ஏன்? என்ன சொன்னான்?”
”ஒன்றுமே சொல்லவில்லை. இதை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு ”அப்பாரு வந்தாக்க நான் கொடுத்தேன்னு இதைக் கொடு ” ன்னு சொல்லிட்டு போனான். சிவகளை வெண் காடர் செட்டியாரிடம் ஒரு ஓலைப்பெட்டியை நீட்டினாள். ஆவலாக அதை பிரித்து உள்ளே பார்த்த போது ஒரு பனை ஓலை நறுக்கு, அதோடு ஒரு காது இல்லாத ஊசி. இது மட்டும் தான் இருந்தது. எதுக்கு இந்த காதறுந்த ஊசி. நறுக்கு ஓலை துண்டு? ஓலையில் ஏதோ எழுதியிருக்கிறதே? அது என்ன?” படித்தார்.தமிழில் தான் மருதவாணர் எழுதி இருந்தான்.
”காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” — தம்பி நீ இந்த வாடகை இல்லாத பூமியில் நிறைய அகடவிகட சாமர்த்தியம் எல்லாம் பண்ணி சம்பாதித்து கோட்டை கட்டி சேர்த்த செல்வம் எல்லாம்…. பாவம் நீ திடீரென்று நோட்டீஸ் இல்லாமல் இதை விட்டு கிளம்பும்போது உன் கூட வரப்போவது இல்லை. அதெல்லாம் வேறு எவனுக்கோ. இதோ இந்த காது இல்லாத ஊசியைக் கூட உன்னால் உன்னுடன் கூட கொண்டுபோக முடியாது. கவனம் இருக்கட்டும்.”
அந்த வாசகத்தை திரும்ப திரும்ப படித்தார் செட்டியார். வெகுநேரம் சிலை போல் எதையோ சிந்தித்தவாறு நறுக்கு ஓலை வாசகத்தையே திருப்பிச் சொன்னார். மனதில் பாறாங்கல் போல ஏதோ ஒன்று மிகவும் கவும் பாரமாக கனமாக ர் நெஞ்சில் உட்கார்ந்து கொண்டு வலித்தது. நறுக்கு ஓலை வாசகம் மனதைத் துளைத்துக்கொண்டு உள்ளே போய் ஓடி வேலை செய்தது. தலை சுற்றியது? எதிரே தெரிந்த எல்லாமும் வேகமாக சுற்றியது? உலகம் சுற்றியதா? அதில் காண்ப தெல்லாம் சும்மாவா? வீடு வாசல், மனைவி, சுற்றம், செல்வம், ……எல்லாமே வெறும் பயாஸ்கோப் தானா? இத்தனை காலம் வெறும் நிழலைத்தேடி அலைந்தேனா..படுபாவி நான். எவ்வளவு காலம் விரயமாகி விட்டது.
வெண்காடர் தான் உடுத்திய விலையுயர்ந்த ஆடைகளை களைந்தார். ஒரு துணியைக் கிழித்து கோவணமாக அணிந்தார். என்னென்னவோ பாட்டுகள் இதயத்திலிருந்து பீறிட்டு வந்தன. அதெப்படி அத்தனையும் அற்புத தத்துவப் பாடல்களாக அமைந்தன. வெண்காடர் திசையெதுவும் தேடாமல் மனம்போன போக்கில் கால் இழுத்துக் கொண்டு போன இடம் துறவியாக அலைந்தார். இவர் காவிரிப்பூம் ”பட்டினத்தை” சேர்ந்தவர் என்று அறிந்து சுருக்கமாக ”பட்டினத்தார்;; என்று எல்லோரும் அடையாளம் காட்டினார்கள். வெண்காடர் , திருவெண்காடராகி நமக்கு நிலையாக ஒரு சித்தர் பட்டினத்தார் கிடைத்துவிட்டார். பட்டினத்தார் ஊர் ஊராக சிவனிருக்கும் இடம் எல்லாம் சென்றார். காளஹஸ்தி சென்றபோது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரனை என்ன கேட்டார் தெரியுமா?
”பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு பொன்படைத்தோன் தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மை போல் உன்னாற் பிரயோசனம் வேணதெல் லாம் உண்டு உனைப் பணியும்என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?காளத்தீயீச்சுரனே!”
‘காளத்தீசா, இதோ பார் இந்த வென்காடர் செட்டியார் நிறைய தங்கம் சேர்த்தார், அதால் நிச்சயம் நிறைய பயன் இந்த செட்டியாருக்கு உலகத்தில் இருக்கிறது. அதுசரி அதை வைத்திருந்தாரே செட்டியார், அவரால் ஒரு நயா பைசா பிரயோஜ னம் அந்த தங்கத்திற்கு உண்டா? நான் உன்னெதிரே வந்து நிற்கிறேன். தரிசிக்கிறேன், உன்னால் போதும் போதும் என்ற அளவிற்கு எனக்கு புண்ணியம் பயனாக உண்டு. ஆனால் அதே நேரம் உன்னைப் பணிகிறேனே , என்னால் உனக்கு ஏதாவது ஒரு சிறு உபயோகமாகவாது உனக்கு உண்டா சொல் சிவா”எப்படி இருக்கிறது பட்டினத்தாரின் எளிய பாடல்? இன்னும் நிறைய சொல்லட்டுமா?