RESIST ANGER J K SIVAN

ஆத்திரம்  அறிவின்  சத்ரு    –   நங்கநல்லூர்    J K SIVAN
எதற்கெடுத்தாலும்  அப்பப்போ, நமக்கு பச்சை மிளகாய் கடித்ததுபோல்  சட்டென்று  கோபம் வருகிறது.   அந்த  நேரத்தில்,  நம்மை மீறி  வார்த்தைகள் கடுமையாக  வாயிலிருந்து உதிர்கிறது. அப்புறம்?  அவ்வளவு தான்  ஒருவரும்  கிட்டே  நெருங்க மாட்டார்கள். மதிக்கமாட்டார்கள்.  உறவு, நட்பு எல்லாம் பகையாகும்.    வாழ்க்கையில் ஒதுக்கப்பட்டு  சந்தர்ப்பங்களை  இழக்க  வேண்டியது தான்.  கோபத்தால், நமக்கு மட்டுமே  நஷ்டம். உடம்பு  பாழாகும், உள்ளம்  கெடும்.  புத்தி கெடும்.  எதற்கும் பயனிலா  உதவாக்கரையாகிவிடுவோம்.
ஒவ்வொரு நாளும்  வீட்டில் ஒதுக்குப்புறமாக,  தனிமையில் சில நிமிஷங்கள்  உட்கார்ந்து த்யானம் பண்ணுவோம். எந்தெந்த நேரத்தில்  எல்லோரிடத்திலும்  என்னென்ன மாதிரி  நாம் வெடிக்கிறோம், கடிக்கிறோம்  என்று அலசி தீர்வு காண்போம்.
சமீபத்தில் நடந்த  ஏதோ  ஒரு சில  ஐந்து  ஆறு  அனுபவங்களை மனத்  திரையில்  சினிமாப்படம்  ஓட்டி பார்ப்போம்.  எதனால் யாரிடம் எப்படி  எதற்கு கோபமுற்றோம் என்று மீண்டும்  ரீ வைண்டிங் பண்ணி பார்ப்போம்.  எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்  என்று சிந்திப்போம். அப்போது தான் மீண்டும் அப்படி நடக்க மாட்டோம்.
முதலில் மிருதுவாக  மெதுவாக  குரல் உயர்த்தாமல் பேச கற்போம். பேசுவதற்கு முன்  எதிராளி பேசுவதை கவனிப்போம், சிந்திப்போம்.    அப்புறம்  பதில் சொல்வோம். இது  பட்டாசு மாதிரி  குதிக்காமல்  உணர்ச்சி வசப்படாமல் இருக்க பயிற்சி தரும்.  சுய கட்டுப்பாடு கற்றுக் கொடுக்கும்.
கோபமாக இருக்கும்போது  ஹாஸ்ய காட்சி  எதாவது  நினைத்துக் கொள்வோம். பிறர்  கேலி செய்த போதும்  சிரிப்போம். கோபம் வராது.
எப்படி  கொரோனா போன்ற  தோற்று நோய்  நம் உடலை பாதிக்காமல் ஒதுங்கி இருப்போமோ  அப்படி கோபத்தை தவிர்ப்போம். பிறரிடம் தப்பு  காண்பதை, தவற்றை சுற்றிக்  காட்டுவதை நிறுத்துவோம்.    நாமே  தெரிந்தும்  தெரியாமலும் எவ்வளவு தப்புகள்  பண்ணுகிறோம்.   நம் வாழ்வில் நேரும் தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்கும்  பிறர் எப்படி காரணமாவார்கள்? நாம் தான் பொறுப்பு என்று  புரிந்து  கொண்டு  அமைதியாக  சகித்துக் கொள்வோம். 

கோபம் வருகிறது என்றால்  நமது உடல்  களைத்து  ஒய்வு தேடுகிறது என்று நினைத்து   அங்கிருந்து  விலகுவோம்.  குளிர்ந்த நீரால்  அடிக்கடி  முகம் கழுவி  ஒரு டம்ளர்  பருகுவோம்.  கண்ணை மூடி  மூச்சை நிதானமாக உள்ளிழுத்து, உள்ளடக்கி,  மெதுவாக  வெளியே விடுவோம்.  பேச்சை குறைப்போம். 

கோபம் வருகிறது என்றால் என்ன அர்த்தம்?   நாம்  சொல்வதோ, செய்வதோ தான் சரி. மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்ற தவறான எண்ணம்  வளர்கிறது மனதில்  என்று அர்த்தம். பிறர்  என்ன செய்கிறார்கள்  சொல்கிறார்கள்?  அதையே செய்வோம் என்பதும்   சரியல்ல.  ஒவ்வொருவர் மனநிலை, சமய சந்தர்ப்பம் வெவ்வேறானது. ஒவ்வொருவர்  வழியும் வாழ்க்கைப் பாதையில் தனித்தனி சந்து,  ரோடு.என்னுடைய  உணர்ச்சிகளுக்கு  நான்  தான் பொறுப்பு என்று உணரவேண்டும்.
வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்த  பாதை.    வருவதை எதிர் கொள்ள  நெஞ்சில்  உரம்  வேண்டும்.  நம்பிக்கை வேண்டும். அப்போது ஞானம் தலை தூக்கும். பகவான் மேல் பக்தி இருந்தால் அது கை  கொடுக்கும். பிறரை நேசிக்கவும்.  அவர்களை புரிந்து கொள்வதும் வாழ்க்கையில் புத்திசாலித்தனம். அது தான் உண்மையில் வெற்றிக்கு படிக்கட்டு. 

நம் உடலை பாதிக்கும், கொடிய  வியாதி, கான்சர், புற்று நோய்  போல மனதை  பாதிப்பது கோபம். அது நம்மையே  தாக்குவதை நாம் அறிவதில்லை. இனிமேல் உணர்வோம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *