போகி பண்டிகை – நங்கநல்லூர் J.K. SIVAN
போகியும் பொங்கலும்
ஒவ்வொரு வருஷமும் ஜனவரி மாதம் 13 அல்லது 14 தேதி அன்று காலண்டர் போகி பண்டிகை என்று காட்டும். போகி பண்டிகை ஸங்க்ராந்தி எனும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் பண்டிகை.
வறட்சியை விரட்ட மாதம் மும்மாரி பொழிய இந்திரனை நம் முன்னோர்கள் கொண்டாடிய நாள் இந்த போகி பண்டிகை. இந்திர விழா என்று இதை வடக்கே கொண்டாடுகிறார்கள். பழையன கழிதலுக்கும் புதியன புகுதலுக்கும் மரியாதையோடு வரவேற்பு தரும் நாள் போகி . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று ஒவ்வொருவரும் வாழ்த்தும் நாள். இந்த பொங்கல் சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கிறது. .
இப்போதெல்லாம் குப்பை கூளங்களை எரித்து எங்கும் புகை மண்டலமாக்குவது கொஞ்சம் குறைந்திருக்கிறது. போகியன்று எங்கு பார்த்தாலும் இவ்வாறு குப்பைகளை எரித்து சுற்றி வர நாங்கள் சிறு பையன்களாக இருந்த காலத்தில் தம்பட்டம் அடித்து மகிழ்ந்திருக்கிறோம். புகையும் பனியும் கவிந்து மின்சார விளக்கும் இல்லாத காலத்தில் எதிரே வருபவன் தெரியாத காலம் உண்டு. நேற்று கூட நங்கநல்லூர் குளக்கரையில் தம்பட்டம் விற்றுக்கொண்டிருந்தார்கள். தம்பட்டத்தை மோளம் எனும் மேளமாக நாலணாவுக்கு வாங்கி இருக்கிறேன். ஆட்டுத்தோல் நாற்றம் அடிக்கும்.களிமண் கலய வளையத்தின் மேல் தோலை ஒட்டி விற்பதை தான் மேளம் என்று வாங்கி குச்சியால் அடித்துக்கொண்டே ஓடுவோம். இப்போது அது வெறும் கனவு. போகியன்று எல்லோரும் குப்பைகளை எரித்து புகைமண்டலமாக்கி அருகே விமான நிலையத்தில் மேலே பனியும் புகைமண்டலமுமாக இருந்தால் சில சமயம் பனிமூட்டம் FOG காரணமாக விமானங்கள் ஓடாது..
போகி அன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் உதவாக்கரை, பயனற்ற சாமான்களை, (பெரிசுகள் சேர்த்தி இல்லை) எறிகிறார்கள், இல்லை எரிக்கிறார்கள். போகி இல்லாவிட்டால் கூட பெரிசுகளை இல்லங்களுக்கு போக விடுகிறார்கள். வேண்டாததை போக்கிவிடும் ‘போக்கி’ நாள் என்பது போகி நாளாகிவிட்டது.
வேண்டாத, உதவாக்கரை, பழசு சாமான்களை போக்கினால் மட்டும் போதாது. பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் போக்கவேண்டும். மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் போக்கிவிட வேண்டும் .எல்லாம் புதிதாக இருக்கவேண்டும். அதனால் தான் பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசும் வழக்கம்.
போகி அன்று, விடிகாலையில் சூரியோதயம் முன்பே ‘நிலைப்பொங்கல்’ வைப்பார்கள். . வீட்டின் வாசல்படி, நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்கும் வழக்கம் இன்னும் சில குடும்பங்களில் இருப்பது பற்றி ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை நைவேத்யமாக சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.
கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு போகி அன்று காலை குளித்து பூஜை எல்லாம் முடிந்து, வடை பாயசம் சாப்பிட்டுவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்று வெளிநாடு சென்று அங்கே பல வருஷங்கள் இருந்தேன். என் வெளிநாட்டு உத்யோகம் இவ்வாறு பழைய உத்தியோகத்தை போக்கி புது உத்யோகமாக அமைந்த அந்த போகி மறக்க முடியாத நாள். வாழ்க்கையில் அதற்கப்பறம் எத்தனை திருப்பங்கள்!!!