THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. –  நங்கநல்லூர்  J K  SIVAN
மணிவாசகர்
மார்கழி 24ம் நாள் சொக்கனின்  திருவிளையாடல்
மணிவாசகரின் வாழ்க்கையில்  ஈசன் எவ்வாறு விளையாடி அவரைத்  தடுத்தாட்கொண்டான் என்பது ஒரு அதிசயம். எல்லோர் வாழ்விலுமா அது  நடக்க சாத்தியம்? ஆம்  சாத்தியம்  என்றால் நிச்சசயம்  நாமும் மணிவாசகர் போல் குறைவில்லாத  புனித  அன்பும் பக்தியும்  பரமேஸ்வரன் மேல்  கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நாமும் மணிவாசகர் எனலாம்.

பாண்டியன் ”வாதவூரரே, நீர் தான் சரியானவர். புத்திமான், விஷயமெல்லாம் அறிந்தவர். இந்த மூட்டைகளில் பொற்காசுகள் உள்ளது.  எடுத்துச் சென்று நல்ல குதிரைகளாக  தேர்வு செயது நமது படையை பலப்படுத்த சிறந்த குதிரைகளை வாங்கி வாரும்” என அவரை அனுப்ப, வாதவூரர் பொற்காசுகளுடன் புறப்பட்டு  இரவு நேரம்  திருப்பெருந்துறை  அடைந்து,  அங்கே  தங்கி, மறுநாள்  குதிரை தேடுவதற்கு பதில் குருவைத் தேட வைக்கிறான்  ஆத்மநாதன். தானே வயோதிக ப்ராமண குருவாக  அவருக்கு ஞானம் போதிக்கிறான்.  வாதவூரர் தன்னை முற்றிலும் மறந்த நிலையில் தம்மிடம் இருந்த பொற்காசுகளை  திருப்பெருந்துறை சிவாலயம் புனருத்தாரணம் செய்ய பயன்படுத்தி அங்கேயே  சதா தியானத்திலும்  சிவ சிந்தனையிலும்  உலகை மறக்கிறார்.   மாதக்  கணக்கில் நாள் சென்றதால்  பாண்டியன் ஆட்கள் அவரை அடைந்து அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்டுகிறார்கள்.
”நீங்கள் திரும்பி செல்லுங்கள், ராஜாவிடம் சொல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்”.  ஏதோ ஓரு இயந்திரம்  போல் மணிவாசகர்  சொல்லிவிட்டாரே  தவிர அவரிடம்  குதிரை வாங்கக் காசு இல்லை.  கொண்டு வந்த பொற்காசுகள் அனைத்தும்  திருப்பெருந்துறை சிவாலய கோபுரமாகிவிட்டதே.  அந்த கோவில் தான் இப்போது  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1100 வருஷ ஆவுடையார்  கோவில்.  நமக்குத்  திருவாசகம் தந்த க்ஷேத்ரம்.

ஒருமாத காலம் பொறுத்த பின்னும்   குதிரைகள் வந்து சேராததால் அரிமர்த்தன பாண்டியன்  மணிவாசகரை சிறையில் அடைத்தான்.   கொடுமைப்  படுத்தினான். மணி வாசகர்  மனம் ஆத்மநாதர் மேலேயே  இருந்ததால், சிவன்   அவருக்காக பரிந்து நரிகளை பரிகளாக்கி அனுப்பினான்,  பரிகளான  நரிகள் மீண்டும் நரிகளாக ஓட,   பாண்டியன் வாதவூரரை சுடும்  வைகை மணலில் வாட்டி வதைத்து  நிற்க வைத்தபோது பரமேஸ்வரன்  வைகையில்  வெள்ளம் பெருக் கெடுக்க வைத்தான். பாண்டியன்   சொக்கேசனின்  திருவிளையாடல்களைப்  புரிந்து கொண்டான்.  வாதவூரர் கால்களில்  விழுந்து அடிமையானான் .

இந்த அற்புத  ஆவுடையார் கோவில்   ஊருக்கு  மஹா பெரியவா  வந்து தங்கினார்.  ஆலயத்தின் அற்புத  சிலைகளின் நேர்த்தியை,  சிற்பக் கலை அழகைக்கண்டு  ரசித்து வியந்தார். இந்த  ஆலய நிர்வாக பராமரிப்பு திருவாடுதுறை  ஆதீன தம்பிரான் மேற்பார்வையில் உள்ளது.  தினமும்  ஆத்ம நாதர், யோகாம்பிகை, மாணிக்க வாசகர், குருந்த மர தரிசனம் செய்து மகிழ்ந்தார்  மஹா பெரியவா.
மஹா பெரியவா  தங்கியிருந்த காலத்தில் மிகவும் உழைத்து  ஸ்வாமிகளுக்கும் மடத்திற் கும் சேவை செய்தவர் நெய்க்குப்பை ஏகாம்பர சேர்வைக்காரர்.   அவரை  இன்னொரு மணி வாசகர் என்று சொல்லலாம். அவ்வளவு சிவ பக்தி, பெரியவாளிடம்  பாசம்,  பக்தி, மரியாதை.
ஆவுடையார் கோவிலில்  சாதுர்மாஸ்யம் முடிந்து  மஹா பெரியவாளின்   விஜய யாத்திரை துவங்கியது.  திருவாடுதுறை ஆதீனம், மடாதிபதி, அதிகாரிகள்  மற்றும்  ஆன்மீகத்தொண்டர்கள்  குவிந்தனர்.  மஹா பெரியவாளுக்கு  பிக்ஷா வநிதானம் அளித்தனர்.
ஆத்மநாதர் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் ஆதி  கயிலாயநாதருக்கு ஒரு தனிக் கோயில். வாதவூராருக்கு ஆத்மநாதன் ப்ராமணராக  குரு உபதேசம் செய்த இடம்.  இக்கோயில் மாணிக்கவாசகர் காலத்துக்கு முன்பே உள்ளது. ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். இப்போது அந்த ஊர் வடக்கூர் (வடக்களூர் என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கிறார்கள்.
ஆத்மநாதன்  கிழ பிராமணனாக உருவெடுத்து 300 பிராமண வீட்டு குழந்தைகளுக்கு வேதம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுத்து பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து ஒரு பாடசாலை நிறுவினார். பிராமணர்கள் வீட்டிலிருந்து தினமும் புழுங் கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து கிழ பிராமணருக்கு உணவு தந்தனர்.
 ஒருநாள் கிழ பிராமண வாத்தியாரை காணோம். சிஷ்ய பிள்ளைகள் தேடினர், வருந்தினார். குழந்தைகளோடு விளை யாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அன்று ராத்திரி எல்லா சிஷ்ய பிள்ளைகள் கனவிலும் ” திருப்பெருந்துறை ஈஸ்வரன் நான் தான் உங்கள் கிழ வாத்யாராக வந்து கற்பித்தேன்.நீங்கள் கொடுத்த உணவை விரும்பி உண்டேன் ‘ என்றதால் இன்றும் அங்கே புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் சமையல் அன்னம் தான் நைவேத்தியம்.
பிள்ளையார் பெயர் ஸ்ரீ வித்யாகணபதி.
பின்னால் துண்டகன் என்ற முரட்டு மந்திரி ஒருவனுக்கு இந்த கிராமத்தின் மேல் ஆசை உண்டாகி பிராமணர்களை விரட்டி விட்டு சொந்தமாக்கி கொண்டான். ”ஆத்மநாதா, நீயே கதி என்று எல்லா பிராமணர்களும் வேண்ட ஒரு வயதான முதியவர் திருப்பெருந்துறைக்கு வருகிறார்.
”இந்த ஊர் எனக்கல்லவோ சொந்தம். அதற்கு ஆதாரமான பட்டயம் என்னிடம் அல்லவோ இருக்கிறது ” என்கிறார்  முதியவர்.   அவரை வரை பாண்டிய மன்னனிடம் அழைத்து செல்கிறார்கள்.
”யார் நீர் ? உமக்கு இங்கே என்ன வேலை?-என்கிறான் பாண்டியன்.
‘நான் தில்லையை சேர்ந்தவன். என் பெயர் பரமசுவாமி,’
”உமக்கு இந்த சிவபுரம் ஊர் சொந்தமென்று ஏதோ ஆதாரம் இருப்பதாக  சொல்கிறீரே அதைக்காட்டும்” என்கிறான் பாண்டியன்.
ரெண்டு பட்டயங்களை காட்டுகிறார் முதியவர். அதில் நிலத்தின் அளவு எல்லைகள்  காட்டப்படுகிறது.  இங்கே எவ்வளவு வெட்டினாலும் நீர் வராது என்று அரசன் சொன்ன , ஈஸான திசை மேட்டு நிலத்தில் இதோ பார்  என்று   சிவபுரத்தில் நீர் வரவழைக்கிறார். அனைத்துத்  தீர்த்தங்களையும் அங்கே வரவழைக்கிறார், திருப்தி அடைந்த பாண்டியன் துண்டகனை தண்டிக்கிறான். அவனிடமிருந்து ஊர் மீட்கப்படுகிறது.

”இந்த நிலத்தை பிராமணர்கள் சமூகம் பாதுகாக்கட்டும். எனக்கு 300ல் ஒரு பங்கு வருமானம் கோவிலுக்கு இறையிலியாக சேரட்டும்” என்ற கிழவர் காணாமல் போகிறார். அப்போது தான் கிழவராக வந்தது ஆத்மநாத சுவாமி என்று பாண்டியனும் மற்றவர்களும் அறிகிறார்கள்.
தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

இனி   திருப்பள்ளியெழுச்சி  4வது பாடல்:

”இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற ஆத்மநாத ப்ரபு ,  அடியேனையும்   ஆட்கொண்டு  இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையை எழுப்பும் வீணை  வாசிப்பவர்கள்,  யாழினை   ஒலிப்பவர்களையும் உடையவரே,  அதோ  ஒரு பக்கத்தில், வேதங்களோடு உம்மை   ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள்  ஒருபுறம். நெருக்கமாக  தொடுக்கப்பட்ட வாசமிகு வண்ண மலர்களால் ஆன மாலைகளை   கைகளில்  ஏந்தியவர்கள் ஒரு பக்கம்,   சிரமேற் கரம் குவித்து வணங்குபவர்கள்,  ”ஹர ஹர மகாதேவா,  ஓம்  நமச்சிவாய”, என்று  வணங்குபவர்கள் ஒருபுறம் ,  பக்தி கண்ணீராக ததும்பி, தளும்பி வழிய  நிற்கும் பக்தர்கள் ஒருபக்கம் உடையவரும்,  கீழே விழுந்து எண்சாண் கிடையாக  விழுபவர்கள்  ஒருபுறமும் காணப் படுகிறார்களே . எல்லோருக்கும் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வீராக.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *