திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
5. குன்றுதோறாடல்
திருத்தணிகை மலை
பாடல்வரிகள் 206-217 வரை
” செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் – 206
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்-207
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்-208
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்-209
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் -210
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்-211
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு-212
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்-213
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்-214
முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி -215
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து-216
குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று ” – 217
குரவைக் கூத்து என்ற ஒரு ஆட்டம் முருக பக்தியில் விசேஷமானது. அதில் வேலன் என்று பாத்திரம், முருகனைப் போல பசுந்தழைகளை, இலைகள், கொடிகள் உடுத்தி, வண்ணவண்ண மலர்மாலைகள் அணிந்து ஆடுவான், மலைவாழ் வேடுவ பெண்கள் மாலைகள் சூடி அழகிய மயில்கள் போல் நடந்து வருவார்கள். ஆண்கள் சிகப்பு ஆடை உடுத்தி ஆடுவார்கள். காதில் பூ செருகி இருக்கும். காலில் தண்டை கலீர் கலீர் என்று ஒலிக்கும். அநேகமாக வெட்சிப்பூ மாலை எல்லோரும் அணிவார்கள். சேவல் கொடி கொண்ட முருகனை பாடுவார்கள் ஆடுவார்கள். பெண்கள் கூட்டமாக சேர்ந்து பாடுவார்கள் ஆடுவார்கள். ஆண்கள் பலர் தாரை தப்பட்டை யாழ் போன்ற நரம்பு வாத்தியங்கள் பாட்டுக்கேற்ப முழங்குவார்கள். இது மலை வாழ் மக்களான அவர்களுடைய ஒரு வழக்கமான வழிபாடும் பொழுது போக்கும் கூட.ஒரு முருகனை நினைக்கும்போது பல வேலன்கள் இவ்வாறு அவனை நினைவூட்டுவதை நக்கீரர் இந்த திருமுருகாற்றுப்படையில் திருத்தணி வாழ் வேடுவ மக்கலின் பக்தியோடு இணைத்து வர்ணிக்கிறார்.அடுத்து நாம் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை இனி செல்வோம்.