THIRUMURUGAATRUPPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை –   நங்கநல்லூர்   J K   SIVAN

5. குன்றுதோறாடல்
திருத்தணிகை மலை

இது வரை  திருமுருகாற்றுப்படையில் நான்கு  படைவீடுகளைப்  பற்றி  நக்கீரர்  இயற்றிய  திருமுருகாற்றுப்படை  பாடல்கள் என்ன  சொல்கிறது  என்று  தெரிந்து கொண்டோம்.  ஐந்தாவது படைவீடு  திருத்தணிகை எனப்படும் திருத்தணி.  அழகிய  மலை வெகு தூரத்திலிருந்தே  தெரிகிறது. ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ரொம்ப அழகு.   சென்னைவாசிகளுக்கு அருகிலேயே உள்ள  படைவீடு இது  தான்.
இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருளும்  படைவீடு இந்த திருத்தணிகை  மலை.   திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில்  உள்ளது.
முருகப்பெருமான் தேவர்களின் துயரம் போக்க  சூரனுடன் போரிட்டது  ஒரு விஷயம்.  ஆனால்  அழகி வள்ளியை மணக்க  வேடுவர்களுடன்  ஒரு   சிறு யுத்தமும் நடந்தது. வள்ளியை மணந்து தனது  கோபமெல்லாம் தணிந்து அமர்ந்த ஸ்தலம்   திருத்தணி.  முருகனின் பக்தர்களின்  துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம். மலை உச்சியில்,  கிழக்கு நோக்கிய  ஆலயம்  ரெண்டு பக்கமும்  ரெண்டு மலைத் தொடர்ச்சிகள்,  வடக்கே  வெள்ளையாக இருப்பது “பச்சரிசி மலை”. தெற்குப்பக்கம்  கொஞ்சம் கருப்பாக இருப்பது “ புண்ணாக்கு மலை”..
வருஷத்தில்  365 நாட்களைக் குறிக்கும்  365 படிகள் .  லக்ஷம் ருத்ராக்ஷங்களால் ஆன ருத்ராக்ஷ மண்டபம் இங்கு விசேஷம். சூரபத்மனோடு  யுத்தம் செய்த   முருகனின்  நெஞ்சில்  காயம் ஏற்பட்டு பள்ளமாக இந்த  திருத்தணி முருகன் மூல விக்ரஹ மார்பில்  இருக்கிறதாம். மயிலுக்கு பதிலாக யானை வாகனம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்  நக்கீரர்  இயற்றிய திருமுருகாற்றுப்படையில்  ஐந்தாவது  படைவீடான  திருத்தணி பற்றி என்ன சொல்கிறார்?:
 ” பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் –  190
 அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு-191
 வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்-192
 நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்-193
 கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்-194
 நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் – – – – – – 195
 குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து-196
 தொண்டகச் சிறுபறைக் குரவை அயர …” 197

“பச்சை பசேல் எனும் பசுமை நிறக்  கொடிகளால்,  சுகந்த வாசனை கொண்ட  ஜாதிக்காயையும், அழகான  புட்டில் போன்ற தக்கோலக்காயையும்  (இது என்ன காய் என்று எனக்கு தெரியாது)   நடுவில் வைத்து, காட்டு  மல்லிகை புஷ்பங்களோடு  வெண் கூதாளம் [வெண்டாளி    இது  என்ன பூ? இப்போது என்ன பெயர்?)பூவையும் சேர்த்து மாலை தொடுத்து அதைத் தனது  சிரத்தில்  அழகாக  சுப்பிரமணியன்  அணிந்து காட்சி தருகிறான்.  அவன் மார்பு முழுதும்  கமகமவென்று  அரைத்த சந்தனம் பூசிக்கொண்டிரு ப்பதால் மஞ்சள் மார்பன்.  சக்தி வாய்ந்த  வில்லால்  விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச்  செய்யும் வேடர்கள், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த  தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிறு ஊரில் வாழும் தம்  சுற்றத்தாருடன்  குடித்து  மகிழ்ந்து [அக் குறிஞ்சி நிலப் பகுதிக்குரிய] தொண்டகம் எனப்படும் சிறியதொரு பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுகிறார்கள்.”   இந்த காட்சியை நக்கீரர் மனதில்  கண்டு  வர்ணிக்கிறார்.
 ” விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் –  198
 குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி-199
 இணைத்த கோதை அணைத்த கூந்தல் – 200
 முடித்த குல்லை இலையுடை நறும்பூ-201
 செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு -202
 சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை-203
 திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ-204
 மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு …” – 205

“விரல்களால்  பல  வித வாசனை  மலர்  அரும்புகளைத் தொட்டு  அளைந்து  அடுக்கப்பட்டு  தொடுக்கப்பட்டதால் பல்வேறு வகை நறுமணம் வீசுகிறது.   அந்த மலர்கள்  திருத்தணிகை  மலையில்  ஆழமான  சுனையில்  ஊரும் நீர்களின் சக்தியில் மலர்ந்தவை.   அடர்ந்த மலர்க்காடுகள்.  அதில் ஏராளமான  வண்டுகள் மொய்க்கிறது.  அழகிய  பல வண்ண மலர்களால்  தொடுக்கப்பட்ட கனமான  மாலையை  முருகன் அணிகிறான்.  வேடுவர்கள் விதவிதமான  மலர்களை தலையில் சூடுபவர்கள். பல வ்வித வர்ண  மாலைகளை தொடுத்து சேர்த்து கட்டிய கூந்தலை  உடையவர்கள்.   பல வித பச்சை மூலிகை  இலையைத் தலைமுடி மீது அணிந்தவர்கள்.  அவர்களுக்கு பிடித்தது  கடம்ப மரத்தின் மலர்க் கொத்துகள். வேடுவர்கள் ஆணும் பெண்ணுமாக  நிறைய   குளிர்ந்த அழகிய தழையையும், வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணிந்திருக்கிறார்கள்.   இடுப்பில், ஆடையாக பலவித  வர்ண  இலைகள், துணிகள்  உடுத்தியவர்கள்.  மயிலைப் போன்றசாயலை உடையவர்களாக  இருக்கிறார்கள்  என்கிறார்  நக்கீரர். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *