திருமந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
பரமேஸ்வரன் பரம தயாளன்.
‘முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. ‘
அப்பா என்று நான் வாய் திறந்து மனமார கூப்பிடும்போது என்னடா கண்ணா என்று என்னை வாரி அன்போடு அணைப்பவன் அவன் தான். அப்பன் எல்லோருக்கும் அவன்தான்,அந்த பரமேஸ்வரன். பொன் போன்ற ஸஹஸ்ர தளத்தில் காட்சி தருபவன். அவனே பழமைக்கெலாம் பழமையானவன் பழமனாதி. ஆதி சிவன். நாம் வணங்கும் நான்முகன், திருமால், உருத்திரன், முதலிய மூவர்க்கும் மூத்தவன். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன்னவன். முதலானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஸ்வயம்பு வான சிவன். சுப்பனின் தந்தை நமக்கும் எந்தை.
‘தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே’
பரமேஸ்வரன் அக்னி ஸ்வரூபன், தீப்பிழம்பு. நெற்றிக்கண்ணே அக்னி தான். அதே சமயம் உடலிலும் உள்ளத்திலும் குளிர்ச்சி மிகுந்தவனும் கூட. குளிர்ந்த பனி நீராகிய கங்கையைத் தலையில் தாங்கியவன். பனிமலையில் அமர்ந்து தவம் செய்பவன். ஒரே சமயத்தில் தீயை விட வெம்மை உடையவ னாகவும் வேண்டும் பக்தர்களுக்கு பனி நீரை விடக் குளிர்ந்த வனாகவும் குழந்தையை விட பாசமும் நேசமும் மிக்கவனாகவும், நம் அருகிலேயே எப்போதும் இருப்பவன் பரமேஸ்வரன். நம்பும் அடியார்க்குத் தாயை விட சாலப்பறிந்து அருள் செய்பவன். தாயுமானவன். காருண்யன். இவ்வாறிருந்தும் அதை இறைவனை, அவன் கருணையை நாம் இன்னும் அறிந்து கொள்ள வில்லையே.
”பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே”
என்றாவது ஒருநாள் இல்லை, இன்றே இக்கணமே கண்ணை மூடி ஒரு வினாடி நினைத்துப் பார்ப்போம். சிவனை விடச் சிறந்த தெய்வம், ஏதாவது உண்டா?. இணையாக எவரும் இல்லாதவன்! பரமேஸ்வரன் பொன்னால் இழைக்கப்பட்டது போன்ற அழகிய சடை பின்புறம் விளங்க தோன்றுபவன். நந்தி என்பது அவனது திரு நாமமாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத் தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.
”தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடல் ஆமே. ”
எங்கும் எதிலும் எப்போதும் என்றும் நிறைந்து யாவுமாய் நிற்பவன் சிவனே. விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டும், ஆகாய வடிவினனாகவும், சுடுகின்ற அக்னியாகவும், அருள் பொழியும் சத்தியுமாகவும் இருக்கிறான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான். ஆகவே தான் அவனை ஸர்வேஸ்வரன் என்கிறோம்.
” அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே.”
பரமேஸ்வரனுக்கு எத்தனையோ நாமங்கள், அதிலொன்று நந்தீஸ்வரன். கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்று ஒரு பகுதி. அங்கே ஒரு பழங்கால சிவாலயம் சென்று ஆனந்தமாக அவனை தரிசித்திருக்கிறேன். கூடுவாஞ்சேரிக்கும் எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.நான் முதன்முதலில் 18வயதில் சம்பாதித்து வாங்கிய ரெண்டு கிரௌண்ட் நிலம். காயரம்பேடு என்ற கிராமத்தில். அங்கே பள்ளிக்கூடம், காலேஜ், சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரி, ரயில்,கப்பல், விமானம் எல்லாம் வரும் என்று விற்பவன் சொன்னதை நம்பினவர்களில் நானும் ஒருவன். பிறகு முப்பது வருஷம் கழித்து என் நிலத்தில் எவரோ மண் தோண்டி எடுப்பதை ஒரு வருஷம் சென்ற பிறகு பார்த்துவிட்டு அந்த இடம் ஒரு குட்டையாக , குளமாக மாறுவதற்கு முன் வந்த விலைக்கு விற்றேன். இதற்கிடையில் பல வருஷங்கள் நடையாய் நடந்து பல வருஷங்களாக சென்று அந்த பொட்டல் காட்டை பார்த்தபோதெல்லாம் வழியில் நந்தீஸ்வரன் ஆலயம் சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியிலிருந்து 35 கி.மீ. சைக்கிளில் சென்ற அனுபவம் மறக்கமுடியாதது. ஸ்வயம்பு நந்தீகேஸ்வரர், அம்பாள் சௌந்தரநாயகி உலகத்திலேயே பரம அழகி. ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பல்லவன் நந்திவர்மன் கட்டிய ஆலயம். அழகான நந்தியை நாகலிங்க மரத்தடியில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சம். .தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு எங்கேயும் இருக்கும் அந்த கருணைவள்ளல் பெருமையை எவ்வளவு எண்ணினாலும் வேறு யாரையும் ஈடாக சொல்ல முடியாத ஒரு சக்தி வாய்ந்த பெரிய தெய்வமாக உள்ளவன் ஈஸ்வரன். நம்முடைய சகல முயற்சியும், முயற்சியின் பயனும், மழையும், மழை பொழிகின்ற மேகமும், அவனே தான். அந்த பரமனாதி தான். அவனைத்தான் நந்தீஸ்வரன் என்கிறோம். எப்பெயரால் விளித்தாலும் இனிப்பவன்.