CONTROL THE MIND – J K SIVAN

மனமே அடங்கு – நங்கநல்லூர் J K SIVAN 

சில நல்ல விஷயங்களை படிக்கிறோம். இப்படிச்செய், அப்படிச் செய்யவேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஈயடிச்சான் காப்பி யாக அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்கிறாயே, எழுதுகிறா யே நீ அப்படி செய்கிறாயா? இந்த கேள்வியை நான் அடிக்கடி எனக்கே கேட்டுக் கொள்வேன். முதலில் நீ செய், அப்புறம் மற்றவர் களுக்கு சொல் என்ற படிப்பினை அதனால் பழக்கமாகி விட்டது.
நான் இதை ஏன் ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பிறர்க்கு யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாம். எல்லோருமே வாத் யார்களாக இருக்க முயல்கிறார்களே. முதலில் ஸ்டூடண்டாக இருந்துவிட்டு பிறகு வாத்யார் வேலை பார்க்கலாம்.தலைக்கு தலை யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்வது வழக்கமாக போய்விட்டது.
விடிகாலை 3 மணிக்கு எழுந்து குளித்து விட்டு ஒரு காலில் நின்று கொண்டு இதை படி. அதன் பிறகு குறைந்தது ரெண்டு கோவிலுக் காகவாவது போ. விளக்கை ஏற்றி விட்டு உட்கார்ந்து பாரதம் ராமாயணம் உரக்கப் படி என்று நான் யாருக்கும் சொல்வதில் லை.
நான் படித்ததை, கேள்விப்பட்டதை, நான் சிந்தனை செய்ததை மட்டுமே எனக்கு தெரிந்த தமிழில் நான் எழுதுபவைகள்அனைத்தையும் கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் என்றுமே யாருக்குமே கிடையாது. வேறு வேலை ஏதாவது முக்யமாக இருந்தால் கண்டிப் பாக அவசியம் அதில் ஈடுபடலாம். எல்லாம் தெரியும் என்று எனக்கே தோன்றிய தில்லை. நான் ரசிப்பதை, சந்தோஷமாக அனுபவிப்பதை பரிமாறிக் கொள்கிறேன். ” எதேஷ்டம். என் இலையில் இனி எதுவும் வேண்டாம் நிறைய சாப்பிட்டாகி விட்டது” என்பவருக்கு நான் பரிமாறவில்லை. ”இன்னும் கொஞ்சம் சாம்பார்” இலைக்கு மட்டும் தான் இந்த பரிமாறல் என்று ஏற்றுக்கொள்ளலாம
ராம சேஷு அடுத்த தெருவில் ரொட்டிக்கடைக்கு மேலே குடியிருக்கிறார். சைதாப்பேட்டையில் ஒரு அரசாங்க உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு கணக்கு வாத்யார். அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பவர்.
”சார், இன்னிக்கு நாங்க ரெண்டு மூணு டீச்சருங்க மத்யானம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு புத்தகத்தில் ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று படித்தேன் புரியவில்லை. அது பற்றி சொல்லுங்க.”
”நமது மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்று படித்திருப்பீர்களே அது தான். மனம் தான் முதலில் கட்டுப் பாட்டுக்குள் வரவேண்டும். மற்றதெல்லாம் -கண், மூக்கு, வாய், செவி, நாக்கு எல்லாமே வழிக்கு தானே வந்துவிடும்.”
”நீங்க தான் நிறைய கதைகள் சொல்வீர்களே அதுக்கு ஒரு கதையா சொன்னால் நல்லா புரியும்.”
ராமர் தண்டகாரண்யம் காட்டில் இருக்கும்போது ஒரு ஆற்றங் கரையில் அதுவரையில் பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆசார சீலராகக் காட்சி தந்தார் அவர்.
ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந் தார். சரி இவர் ஏதோ ஹோமம் ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ராமர் ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதைக் கவனித் தார்.
துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந் தார்.
அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டி களை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிது சிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.
துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.
துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”
”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ண வில்லை ?” – கேட்டார் ராமபிரான்.
”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப் போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் விட்டுப் பிடித்து அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத் துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல் தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!
சபாஷ் நான் இந்த கதை கேட்டதில்லை என்கிறார் ராமசேஷு. மனத்தை அடக்க எப்படி பயிற்சி செய்யவேண்டும்?
எண்ணங்களை சீர் செய்துகொள்ளவேண்டும். மனதுக்கு அலை பாயாத பழக்கம் தரவேண்டும். இதற்கு தான் த்யானம், ஜபம் பாராயணம், பஜனை, சத்சங்கம் எல்லாம் வைத்திருக்கிறார் கள். தனியாக இருக்கும்போது எண்ணம் எங்கெங்கோ ஓட்டும். நல்ல விஷயங்களை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்ளும் போது அதற்கு வேறு இடம் தாவ சந்தர்ப்பம் கிடைக்காது. படிக்கும்போதும் மனதை அதில் செலுத்தி படிக்கவேண்டும், நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்
”சார், இதற்கு ஒரு குருவின் உதவி அவசியமில்லையா?”
ராமசேஷு, நீங்கள் கேட்ட இதே கேள்வியை ஒரு பக்தர் ரமண மகரிஷியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?:
” நீ இப்போது குருவிடமிருந்து தள்ளிப்போய் எங்கோ தூர இருப்பதாக எண்ணமா?’
”சுவாமி அந்த குருவின் அருகில் இருப்பது அவசியமில்லையா”?”
”நீ என்ன சொல்ல வருகிறாய். அந்த குருவின் உடலும் உன் உடலும் அருகில் இருக்க வேண்டாமா என்று தானே.பக்கத்து பக்கத்தில் இருந்தால் தானே அருகில் இருப்பது என்று அர்த்தம் என்கிறாயா? அதால் என்ன பிரயோஜனம்? மனமல்லவோ குருவின் மனதுடன் சேர்ந்திருக்க வேண்டும் ” என்றார் ரமணர் .
அப்படி இறைவனின் மேல் மனதை நாட்டம் கொள்ள செய்வ தற்கு தான் சத்சங்கம், பூஜை, பஜனை, பிரசங்கம், பாராயணம் என்று எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் ஒன்று மனதை அவன் பால் செலுத்தி த்யானம் பண்ணுவது. மௌனமாக உள்ளே அவனைக் காண்பது.
”இதெல்லாம் எல்லோராலும் முடியுமா சார் என்று கேட்டார் ராமசேஷு.
”எல்லோராலும் எதெதுவோ செய்ய முடிகிறபோது இது மட்டும் முடியாமலா போகும். பயிற்சி தேவை. நீங்க எப்படி இப்போது 7ம் க்ளாஸுக்கு கணக்கு சொல்லித் தருகிறீர்கள். நிறைய வருஷம் படித்தபிறகு தானே? அது போல் தான்.”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *