குதம்பை சித்தர் – நங்கநல்லூர் J K SIVAN
அரத்தமுள்ள நாலு வரிகள் .
குதம்பை சித்தரை சினிமாக்காரர்கள் கூட விடுவதில்லை. சின்ன வயதில் தெருவெல்லாம் சிதம்பரம் ஜெயராமன் பாடிய ”குதம்பாய், காசு முன் நில்லாதடி” என்று கூம்பு போன்ற ஒலிபெருக்கி காதை பிளக்க ஒலிப்பதை நின்று கேட்டு கூடவே பாடியிருக்கிறேன்.
குதம்பை சித்தர் அற்புதமான எளிய தமிழில் தத்துவங்களை ரெண்டு வரிகளில் அள்ளி வீசும் ஞானி. கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காய கற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.
நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா? என்ற வினாவை எழுப்பிய அவர் வாசி யோகமான பிரணாயாமத்தைப் பின்பற்றும் ஒருவருக்கு எந்த யோகமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். ”வேகம் அடக்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு யோகந் தானேதுக் கடி” – என்று அவர் கேட்பது ரொம்ப நியாயமாகப் படுகிறது.
உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும்
இலகும் கடவுளை ஏத்தி – நலமார்குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்குநிதம்பார்த்து நெஞ்சில் நினை.
அஞ்ஞானம் ஒழியவேண்டுமா? எல்லோருக்கும் பொதுவான அந்த பகவானை வேண்டிக் கொள் . கடவுள் பக்தி இருந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம ஞானம் வளரும்; குதம்பாய், விடாதே , நீ இதை தினமும் அனுசரி” என்கிறார் சித்தர்.
பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்காரணம் இல்லையடி குதம்பாய்காரணம் இல்லையடி.
சர்வமும் அறிந்த ப்ரம்ம ஞானிக்கு இங்கே பூமியில் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை. வாஸ்தவம் தான். கர்மம் இல்லாதவனுக்கு பூமியில் பிறப்பெதற்கு?
போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்சாங்காலம் இல்லையடி குதம்பாய்சாங்காலம் இல்லையடி.2
ஜனன மரண உபாதைகளுக்கு அப்பாற்பட்டவன் ஜீவன் முக்தன். கர்மங்கள் ஒழித்தவன். பற்றற்றவன். உலக வாழ்க்கை பந்தங்கள் சொந்தங்கள் எதுவும் இல்லாதவன், ஸம்ஸ்காரம் எல்லாம் காலி பண்ணினவன். அவனுக்கு இறப்பேது? என்கிறார் குதம்பைச் சித்தர்.
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்குமுத்திதான் இல்லையடி குதம்பாய்முத்திதான் இல்லையடி.3
பரமாத்மாவை தொழாமல் மற்ற ஈடுபாடுகள் கொண்டவனுக்கு முக்தி ஏது? என்று அதைப் பெறப்போகிறான்? திரும்ப திரும்ப செத்து செத்து மீண்டும் ரேஷன் கடையில் மட்டமான துவரம்பருப்புக்கு அழுக்கு சர்க்கரைக்கு, நாளெல்லாம் க்யூவில் நிற்கவேண்டியது தான். கை ரேகை மெஷினில் கட்டமுடியாமல் ”போய்ட்டு நாளைக்கு கையை நல்லா கழுவிட்டு வாங்க” என்று வீடு திரும்பவேண்டியவன்.
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்குற்றங்கள் இல்லையடி குதம்பாய்குற்றங்கள் இல்லையடி.5
இது எவ்வளவு அற்புதமான வார்த்தை அனுபவியுங்கள். பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்று வள்ளுவர் சொன்னதை தான் சித்தர் இங்கே சொல்கிறார். பற்றுகள் ஒன்று மில்லாத பரந்தாமனை பந்த பாசங்கள் ஆசை நேசங்களை விட்டு தேடு. அப்போது தான் கிடைப்பான். கிடைத்தவனை விடாதே பிடித்துக்கொள். அப்புறம் உனக்கு எந்த குறையும் இல்லை. .குற்றமும் இல்லை. கர்மங்கள் தொலையுமே. என்கிறார் சித்தர்.
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்சூட்சியாய்ப் பார்ப்பாயடி.6
”காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட் ஏறாதடி குதம்பாய்” என்ற நவீன குதம்பை சித்தர் பாடல் தான் நமக்கு பழக்கும். மாயையிலிருந்து விடுபட்டு சத்ய ஸ்வரூபமாக இருக்கும் பிரமத்தை மனதில் பிடித்தவனுக்கு பேரானந்தம்.
விடாமல் தேடினால் ப்ரம்மம் பிடிபடும், புரிபடும்.