ராகி எனும் ரக்ஷா பந்தன் – நங்கநல்லூர் J K SIVAN
பாசமலர் படம் ஞாபகம் இருக்கிறதா? அண்ணன் தங்கை பாசத்தை அதற்கு மேல் சொல்லவோ, காட்டவோ இதுவரை ஒரு படம் பார்த்ததில்லை. எத்தனையோ குடும்பங்களில் அக்காள், தம்பி, அண்ணன் தங்கை பாசம் பொங்கி வழிவதைப் பார்த்திருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் தங்கைகளையோ, தங்கைகள் அண்ணனையோ, அக்காள்கள் தம்பியை,தம்பிகளையோ புகழ்வது நிறைய கேட்டிருக்கிறேன். நமக்கு ராகி, ரக்ஷா பந்தன் பண்டிகை பழக்கமில்லை. ஆடி, கார்த்திகை யின் போது அண்ணன் தங்கை சீர்கள் தெரியும். அவ்வளவு தான். வடக்கே ஒரு அற்புதமான பண்டிகை ராகி என்னும் ரக்ஷா பந்தன். ஆவணி பௌர்ணமி அன்று இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரக்ஷை என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் பிணைப்பு. கூடப்பிறந்தவர்களின் ஒற்றுமையை அறிவிக்கும், தெரிவிக்கும் பண்டிகை.
கூடப்பிறந்தால் தான் நட்பு பாசம் என்று இல்லை, பார்க்கும் பழகும் ஆண்கள் எல்லோரும் உள்ளன்போடு பாசம் கொண்ட சகோதர்கள், பெண்கள் சகோதரிகள் என்ற எண்ணம் மனதில் நிலைத்தால் அதற்கு அடையாளம் தான் ராகி, ரக்ஷா பந்தன் காப்பு. இது நேரே கையில் கட்டிக்கொள்வதோடு மெயில், வாட்சப், முகநூலில் எனக்கு நிறைய கிடைக்கிறது.நான் கொடுத்து வைத்தவன். கிருஷ்ணா உனக்கு நன்றிடா. ராகி யார் யாருக்கு வேண்டுமானாலும் அன்போடு தெரிவிக்கலாம்.
மஹாபலி கதையோடு சம்பந்தப்பட்டது ரக்ஷா பந்தன். பவிஷ்ய புராணம் சொல்லுகிறது. ஒருகாலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை. இந்திரன் அம்பு மழை பொழிகிறான். எதிரே ராக்ஷஸர்கள் சார்பில் மஹாபலி வாணவேடிக்கை காட்டுகிறான். இந்திரனின் மனைவி சசி, மஹா விஷ்ணுவிடம் சென்று இந்திரன் வெற்றிபெற வேண்டுகிறாள். நாராயணன் அவள் கையில் ஒரு பட்டுக்கயிறு கட்டி கையில் ஒன்று கொடுத்து சந்தோஷமாகப் போ என்று அனுப்புகிறார்.சசி அந்த கயிற்றை இந்திரன் கையில் கட்டி அனுப்ப, அதற்கப்புறம் ,தொடர்ந்த சண்டையில் மஹாபலியை இந்திரன் வெளுத்து வாங்கிவிட்டு அமராவதி நகரத்தை மீண்டும் கைப்பற்றினான். எல்லாம் ராகியின் மஹிமை. பெண்களின் பிரார்த்தனையின் பலன். சகோதர சகோதரி பாசத்தின் பலம். வாமனனாக வந்து மஹாபலியிடமிருந்து மூன்று லோகங்களையும் மூன்றடி மண்ணாக கேட்டு அடைந்து மஹாபலியோடு நட்பு தொடர்ந்தது.
வாடா மஹாபலி எங்கள் வைகுண்டத்துக்கு என்று மஹா லக்ஷ்மி மகாபலியின் கைகளில் ராகி கட்டினாள். போதுமா நட்புக்கும் பாசத்துக்கும் உண்டான பிணைப்பு .
இன்னொரு ராகி விஷயம். சந்தோஷி மா பற்றியது. மஹாகணபதிக்கு ரெண்டு பிள்ளைகளாம் . சுபம், லாபம், என்று அடடா, நமக்கு ஒரு சகோதரி இல்லையா என்று வருந்தினார்களாம். விக்னேஸ்வரர் சந்தோஷி மாவை தோற்றுவித்து மகிழ்ச்சியை அளித்தார். பேரே சந்தோஷ அம்மா தானே. இரு சகோதரர்களும் அவளுக்கு கையில் ராகி கட்டினார்களாம்.கிருஷ்ணன் திரௌபதிக்கு ராகி கட்டினான். குந்தி அபிமன்யுவுக்கு கையில் ரக்ஷை கட்டி போருக்கு அனுப்பினாள் .
யமனுக்கு அதே போல் சகோதரி யமுனா மீது கொள்ளை பாசம். யமுனைக்கு அடிக்கடி அண்ணாவை பார்க்க ஆசை. ”வருஷாவருஷம் வடக்கே “Bhai Dooj, பை தூஜ்” என்று அண்ணா தங்கை உறவு பற்றி பெருமையாக கொண்டாடுகிறார்கள்.
எனக்கு சகோதரி யாரும் இப்போது இல்லை, பிறந்த சிலரும் உடனே சிறுவயதில் மறந்து விட்டார்கள். ஆகவே முகநூல் வாட்ஸாப்ப் சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் என் மானசீகமான, மிகவும் சந்தோஷமான, ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். நமது, நட்புறவு, பாசம், பொங்கி மேலும் மேலும் பெருகவேண்டும்,உங்களுக்காக நான் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நீங்கள் என் கையில் கட்டிய பாசப் பட்டுக்கயிறு கட்டியதை , அந்த முடிச்சை நானும் பெருமையோடு, அன்போடு , பெருமிதத்தோடு தொட்டுப் பார்க்கிறேன். .