யோக வாசிஷ்டம் – நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ரமணருக்கு மிகவும் பிடித்த ஒரு நூல் யோக வாஸிஷ்டம். சின்ன புஸ்தகம் இல்லை. 32,000 ஸ்லோகங்கள். அந்த காலத்தில் ரிஷிகளுக்கு நிறைய நேரம் இருந்ததோடு யோசித்து ஸ்தோத்ரம் பாட கற்பனா சக்தியும் இருந்தது. நல்ல விஷயங்களையே எப்போதும் நினைத்தால் ஒருவேளை இது சுலபமாக லாம். இதில் குட்டி குட்டி கதைகள், இதிஹாச சம்பவங் கள் உண்டு. இந்த நூலுக்கு வேறு பெயர்கள் மஹா ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், யோக வாசிஷ்ட ராமாயணம், ஞான வாசிஷ்டம் . போதுமா ?
எப்படி ஆரம்பிக்கிறது என்றால், ராமன் ராஜ்ய உலா போய்விட்டு வீட்டுக்கு வருகிறான். வழியில் எல்லாம் அவன் காணும் மாற்றங்கள் அவனை பிரமிக்க வைப்ப தோடு சிந்திக்க வைக்கிறது.
ஏன் இப்படி என் மகன் கவலையோடு இருக்கிறான்? என்று அப்பா தசரதர் சங்கடப்படுகிறார். குலகுரு வசிஷ்டரிடம் தனது மன நிலையைச் சொல்கிறார்.
ராமனுடைய சத்வ குணம், ஞானம், வைராக்கியத்தை பற்றி வசிஷ்டர் தசரதனுக்கு எடுத்துச் சொல்கிறார்.
”ராமனைக் கூப்பிடு அவன் எப்படிப்பட்டவன் என்று உனக்கு புரியவைக்கிறேன்” என்று வசிஷ்டர் சொல்ல ராமன் வருகிறான். தசரதன் முன்னால் ராமனுக்கு வசிஷ்டர் உபதேசிப்பது தான் யோக வாசிஷ்டம்.
இப்போது சாம்பிளாக வசிஷ்டர் சொல்லும் ஒரு கதை :
ஒரு காகம் எங்கோ பறந்து கொண்டிருந்து விட்டு ஒரு பனை மரத்தைப் பார்த்ததும் அதன் கிளையில் போய் உட்காருகிறது. அந்த நேரம் ஒரு பெரிய கனமான பனம்பழம் உயரத்தில் மரத்திலிருந்து கீழே தொப்பென் று விழுகிறது. காக்கை உட்கார்ந்ததற்கும் பனம் பழம் முத்திப் போய் கீழே விழுந்ததற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் பார்ப்பவர்கள் என்ன நினைக்கிறோம்? காக்கா உட்கார்ந்ததால் அதன் வெய்ட் தாங்காமல் பனைமரத்திலிருந்து பழம் பிய்ந்து கீழே விழுந்தது என்கிறோம். இது தான் நாம் அடிக்கடி உபயோகிக்கும் சொல் ”காக்கை உட்கார பனம் பழம் விழுந்த” கதை.
வாழ்க்கையில் சில நேரங்களில் சில சம்பவங்கள்
நடக்கும்போது அவை ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் ஒன்றாக இணைத்து பேசப்படுகிறது. சொல்பவர்களும் கேட்பவர்களும் நம்புகிறோம். புத்தி அப்படி பேதலிக்கும்.
யோக வாசிஷ்டம் ஆறு பாகங்கள். வேதாந்த, தத்துவ விஷயங்கள் நிறைந்தது. படிக்க வேண்டிய புஸ்தகம். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போவோம்.