பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN
அபூர்வ காளி பக்தர்
கேசப் சந்திர சென் (19.11.1838- 8.1.1884) 46 வருஷங்கள் வாழ்ந்த ஒரு அற்புத மனிதர். ஞானி சமூக சேவகர், ப்ரம்ம சமாஜத்தை சேர்ந்தவர். சிறந்த சீர் திருத்த எழுத்தாளர். ஆரம்பத்தில் ப்ரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டு விக்ரஹ ஆராதனையே எதிர்த்தவர்.அவரை சந்திக்க ராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவில் அவர் வீட்டுக்கு சென்றார். மாலை 5 மணி. காற்று ஜிலுஜிலுவென்று வீச கேசப் செனின் வீட்டில் கூடத்தில் அமர்ந்தார். ராமகிருஷ்ணர் வந்திருப்பதை வேலையாட்கள் கேசப்புக்கு சொன்னதும். கூடத்துக்கு வந்தார். வெளியே போவதற்காக தயாராக இருந்த சமயம் அது.
”ஐயா சென் அவர்களே, நீங்கள் பிரபலமான பெரிய மனிதர். நிறைய வேலைகள் உண்டு. எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பத்ரிகை வேறு நடத்தி ஆசிரியராக இருப்பவர். உங்களால் எப்படி தக்ஷிணேஸ்வரம் வர முடியும்? ஆகவே நானே புறப்பட்டு உங்களை பார்க்க வந்தேன். உங்களுக்கு உடம்பு சரியில்லையாமே? உங்கள் உடல் நலம்பெற வேண்டும் என்று நான் அம்பாளுக்கு இளநீர் சர்க்கரை காணிக்கை தந்து கொண்டிருக்கிறேன். அம்மா அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது. அப்படி ஏதாவது ஆகிவிட்டால் நான் கல்கத்தாவிலியாரை சந்தித்து பேசுவேன்?” என்று சொல்லி இருக்கிறேன். அந்த அறையில் பிரதாப், மற்றும் சில ப்ரம்ம சமாஜ் பக்தர்கள் இருந்ததை ராமகிருஷ்ணர் பார்த்தார். அங்கே M என்கிற மோஹேந்த்ர நாத் இருப்பதையும் பார்த்தவுடன் கேசப் சந்திர சேனிடம் ‘மோஹிந்த்ர நாத் இப்போதெல்லாம் ஏன் தக்ஷிணேஸ்வர் வருவதில்லை என்று கேளுங்கள்?. அவர் தான் குடும்பம் குழந்தைகள் என்ற பற்று இல்லை என்று சொன்னாரே” என்று கேட்டார்.
”குருநாத்ஜி, இனிமேல் வருவேன்… கொஞ்சம் வேலைகள் இருந்தது ” என்கிறார் M .
பண்டிட் சமத்யாயி என்கிற வேத சாஸ்திரி அங்கே இருந்ததால் அவரை ராமகிருஷ்ணருக்கு அறிமுகப்படுத்தினார்கள். ”இவர் வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் நன்றாக கற்றவர்.”
”ஓஹோ… அவரைப் பார்த்தாலே அவர் கண்களைப் பார்க்கும்போதே உள்ளே உள்ள சகல ஞானமும் தெரிகிறது. ஒரு கண்ணாடி கதவு வழியாக அறைக்குள் இருப்பதை எல்லாம் பார்க்கமுடிகிறதே அது மாதிரி”என்றார் பரமஹம்ஸர் .த்ரை லோக்யா என்பவர் பஜனை பாடல்கள் பாடினார். ராமகிருஷ்ணர் எழுந்து ஆட ஆரம்பித்தவர் அப்படியே சமாதி நிலைக்கு சென்றுவிட்டார். அவர் வாய் அம்பாளின் பெயரை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் விழிப்பு நிலைக்கு வந்த பரமஹம்சர் வங்காளியில் பாடினார்.அதன் சாராம்சம்:
”நான் குடிப்பது அம்ருத பானம். காளியின் பெயர் சொல்லும்போதே அது எனக்கு இனிக்கிறது. என்னை மதி மயக்கி மேலும் மேலும் அவளை நினைத்து போற்றும் போதையில் ஆழ்த்துகிறது. அம்பாளைப் பற்றிய ஞானம் தான் அமிர்த போதை யை உண்டாக்குகிறது. மந்த்ரங்கள் என்ற வார்த்தைகள் தான் மதுவை அனுபவிக்கும் கண்ணாடி சீசாக்கள். காளியின் நாமம் தான் அம்ருதம். ஹநுமானுக்கு ராம நாமம் போல புனிதமானது எனக்கு காளியின் நாமம்.
கேசப் சந்திர சென் மற்றும் அங்கிருந்தவர்கள் சிலையாக உட்கார்ந்து பரமஹம்சரை ரசித்தனர். மேலும் ராமகிருஷ்ணர் பாடி முடித்து பேசினார்.
”கேசப், கவனித்தீர்களா, சர்வ சங்க பரித்யாகம் பண்ணி, அம்பாள், காலி ஒருவளையே நினைத்தால் எல்லாம் அவள் ஒருவள் என்று புரிகிறது. அது தான் உண்மை. சாஸ்வதம். மற்றதெல்லாம் தோன்றி மறைவது. அம்பாளை அறிந்தபிறகு வேறென்ன இருக்கிறது அறிவதற்கு. இது தான் ரஹஸ்யம்” என்றார் .
யாரோ பியானோ வாசித்தார்கள். எல்லோரும் பேசினார்கள். எல்லோரும் வணங்கினார்கள். பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு நெருங்கவே, வாசலில் குதிரை வண்டி வந்து நின்றதும் எல்லோரும் அவரை மரியாதையோடு வாசலுக்கு வந்து வழியனுப்பினார்கள்.