ஜில்லென்று குளிர்ச்சியான ஒரு பெருமாள் – நங்கநல்லூர் J K SIVAN
அருமையான பெருமை வாய்ந்த ஒரு பெருமாள் அருகிலேயே இருக்கிறார். அருகிலிருந்தால் என்ன தூரத்தில் இருந்தால் என்ன, நாம் தான் கோவிலுக்கு போகவே யோசிக்கிறோமே ! வசதிகள் நிறைந்தால் இது தான் சங்கடம். முற்காலத்தில் மாதக்கணக்கில் நடந்து திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று தரிசித்தார்கள். அந்த நீண்ட கால பிரயாணத்தின் போது உபவாசம், விரதம், வேறு. இப்போது கார் எங்கு வேண்டுமானாலும் நீண்ட நல்ல சாலையில் டோல் கட்டிவிட்டு சீக்கிரம் செல்ல வாய்ப்பிருக்கிறது. பஸ்கள் நிற்காமல் ஓடுகிறது. மனத்தில் தான் இடமில்லை.
சென்னையிலிருந்து விர்ரென்று திருச்சி மார்கத்தில் GST ரோடில் சென்றால், செங்கல்பட்டிலிருந்து 15 கி.மி. பாலாறு தாண்டி 1 கி.மி. தூரத்தில் உத்திரமேரூர் மேற்கு பக்கம் திரும்பும். அதில் 2 கி மி. தூரத்தில் புக்கத்துறை. புக்கை என்பது புஷ்கரணி என்பதன் தமிழாக்கம். துறை என்றால் குளக்கரை. தாமரைக்கு புண்டரீகம் என்று பெயர். குளத்தில் சிறிய தாமரை மலர்கள்…புக்கத் துறையில் ஒரு தடவை ப்ரம்மா ஒரு யாகம் பண்ணினார். யாகத்தில் தோன்றியவர் தாமரைக்குளத்தில், புஷ்கரணியில் காட்சி தந்ததால், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ புண்டரிக வரதராஜ பெருமாள் என்று நாமம். நமக்கு தரிசனம் கொடுக்க நின்றுகொண்டிருக்கிறார், ஒருநாள் ரெண்டு நாளாக இல்லை. பல நூறு வருஷங்களாக …நாம் தான் போகவில்லை..
உஷ்ணத்தில் தவிக்காதீர்கள் குளிர்ச்சி தருகிறேன் என்று பெருமாள் புண்டரீக புஷ்கரணியில் (தாமரை குளத்தில்) காட்சி தந்தார் என்று ஸ்தல புராணம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிழக்கு நோக்கிய பெருமாள். தாயாருக்கும் ஆண்டாளுக்கு தனி சந்நிதி. நவராத்திரி, பங்குனி உத்திரம், கூடாரவல்லி சமயங்களில் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் கூட்டம் கூடுகிறார்கள். வருஷா வருஷம் சித்திரையில் பிரமோத்சவம். சித்ரா பவுர்ணமி அன்று புண்டரீக புஷ்கரணியில் தீர்த்தவாரி..
ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் உள்ள தூணில் தரிசனம் தரும் ஆஞ்சநேயர் ரொம்பவே வரப்பிரசாதி.
பிற்காலச் சோழ மன்னனான திரிபுவன வீர தேவனின் 35-ஆவது ஆட்சியாண்டின் எட்டு கல் வெட்டுகள் இந்த க்ஷேத்ரத்தில் உள்ளது. தாயார் சந்நிதியில் உள்ள ஒரு கல்வெட்டு மட்டும் தெலுங்கு மொழியில் உள்ளது.இது விஜயநகர மன்னர்களின் காலத்துக் கல்வெட்டு ஆகும். “விச்சாதிர விண்ணகராழ்வாா்” என்று கல்வெட்டு பெருமாளை சொல்கிறது. கோயிலின் தென் மேற்கிலுள்ள தூணில் சதுா்புஜத்துடன் கூடிய ஶ்ரீபூவராக மூா்த்தி தன் தேவியை ஆலிங்கனம் செய்தபடி அருமையான சிற்பம்.