பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
அபூர்வ மாண்டலின் இசை.
ஒரு சாதாரண மனிதன் முதல் உலகமறிந்த பிரபலங்கள் வரை, யாராக இருந்தாலும் திருப்பதி வெங்கடேசனுக்கு ஒன்று தான். அவனை தரிசிப்பது என்பதே அவன் அனுக்ரஹம் இருந்தால் தான் கிடைக்கும் என்பார்கள். மஹான்களும் அப்படித்தான் எல்லோரையும் ஒன்றாகவே கருதுபவர்கள்.
காலஞ்சென்ற மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அனுபவம் ஒன்றைப் பற்றி கல்கி ஆன்மீக இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகி இருத்தது பற்றி வெகுநாட்களுக்கு முன் ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். பல வருஷங்களாக அது கண்ணில் படவே இல்லை. நேற்று தான் படித்தேன். அதன் சாராம்சம் இது :
மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம்மை வரவேற்பவர் புட்டப்பார்த்திபாபா. அவரது பெரிய வண்ணப்படம் ஒன்று சுவற்றில் அபய ஹஸ்தத்தோடு வரவேற்கும். அதற்கு எதிரே இன்னொரு மகானின் படம். சந்தேகமே இல்லாமல் அது காஞ்சி மஹா பெரியவா படம் தான். இது தவிர அநேக சுவாமி படங்கள், அலமாரிகளில் சுவர்களில் எல்லாம் ஸ்ரீனிவாஸ் பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றிய புகைப்படங்கள். பரிசுப்பொருள்கள் வீடெங்கும் காணப்படும்.
பெரிய தாராளமான பலர் உட்கார்ந்து பஜனை பண்ண வசதியான பூஜை அரை. அங்கே சுவற்றில் நடுநாயகமாக புட்டபர்த்தி பாபா படம். பாபா பக்தர்கள் வீட்டில் பாபா படம் அருகே ஒரு ஆசனம், பீடம், நாற்காலி இருக்கும். ஸ்ரீனிவாஸ் வீட்டில் தேக்குமர நாற்காலி பிரத்யேகமாக பாபாவுக்கு என்று செய்யப்பட்டு அதில் உட்கார மெத்து மெத்தென்று சில்க் தலையணை குஷன். நாற்காலியின் முதுகில் பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது.
”என்ன பார்க்கிறீர்கள், இந்த நாற்காலி பாபாவுக்கு. அதில் வந்து உட்கார்வார். எப்போதும் எனக்கு ஆசியருள்பவர்”
என்று ஸ்ரீனிவாஸ் சொல்வார் என்றால் அவருக்கு பாபா மேல் எவ்வளவு பக்தி,நம்பிக்கை என்று புரியும்.
கையில் ஒரு மோதிரம் எப்போதும் அணிந்து இருப்பார். கையை நீட்டி ‘இந்த மோதிரம் எப்படி கிடைத்தது தெரியுமா?. ஒரு தடவை பாபா முன்னிலையில் டர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது” என்று சொன்னாராம் ஸ்ரீனிவாஸ்.
‘காஞ்சி மஹா பெரியவாவும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக் கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார் என்றாராம் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.
மஹாபெரியவாளின் சங்கீத ஞானம் உலகப் பிரசித்தம். அவரே வீணை வாசிப்பவர். ஆகவே மாண்டலின் இசையில் அலாதி திருப்தி உண்டானதில் ஆச்சர்யம் இல்லை. .
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் வீட்டில் மஹா பெரியவாவை தஞ்சாவூர் பெய்ன்ட்டிங்காக யாரோ ஒரு அருமையான ஓவியர் வரைந்து ஸ்ரீநிவாஸுக்கு அளித்திருக்கிறார். அதை காட்டி ”சார் இது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்” என்று நினைவு கூர்ந்தார் ஸ்ரீனிவாஸ்.
”ஸார் நீங்களும் கேட்கவில்லை, நானும் சொல்ல மறந்துவிட்ட இன்னொரு அருமையான விஷயம் என்ன தெரியுமா? எனக்கு திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் ரொம்ப பக்தி உண்டு. எங்கு போனாலும் முதலில் அவரை வேண்டிக்கொண்டு தான் போவேன். எல்லா காரியங்களும் வெற்றிகரமாகவே முடியும். ஏழுலையான்மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள்.
அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த ‘குட்டு’ என்று புரிந்தது.
பெருமாளுக்கு எப்படி திருப்பதியோ அப்படி தான் வினாயகருக்கு பிள்ளையார்பட்டி . ஸ்ரீனிவாஸ் பிள்ளையார்பட்டி கோயில் ஆஸ்தான விதவனாக நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார்பட்டியில் வினாயகர் சதுர்த்தியன்று மாண்டலின் ஒலிக்கும். அதே போல் வருஷத்தில் மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.” மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சொல்லி இருக்கிறார்.
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஒரு புண்ய புருஷர். சிறு வயதிலேயே நமது பூமியை விட்டு விண்ணுலகம் சென்ற காரணம் அவரது இசையை தேவ லோக மக்கள் விரும்பிக் கேட்க ஆசைப்பட்டதாலேயே என்று சொன்னால், ஆமாம் அப்படித்தான், என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.