அப்பாவை போல் பிள்ளை கட்டின கோவில் நங்கநல்லூர் J K SIVAN
இந்த கோவில் பேரை படித்தாலே, எழுதினாலே, கேட்டாலே, நினைத்தாலே ஒரு ஆனந்தம் அடிமனதில் ஏற்படுகிறதே. அதற்கு என்ன காரணம்? அற்புதம், அதிசயம், ஆனந்தம் இதெல்லாம் நிரம்பிய ஒரு கலைக் கோவில் என்பதால். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற இன்னொரு பெருமை தரும் ஆலயம். அப்பாவும் பிள்ளையும் போட்டி போட்டுக்கொண்டு நமக்கு அளித்த மிகப்பெரிய காலத்தினால் அழியாத கலைக்கூடங்கள்.
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் இன்றும் உள்ளது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற ராஜேந்திர சோழன் நிர்மாணித்தது. 560 ft (170 m) நீளமும் 320 ft (98 m) அகலம் உள்ள உயர்ந்த மேடை மேல் வடிவம் பெற்றது. மூலவர் சந்நிதி முன்னால் 6 ft (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் . மூலவர் சந்நிதி விமானம் 55 m (180 ft); அப்பா கட்டிய தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் கோவில் விமானத்தை விட 3 m (9.8 ft) உயரம் தான் குறைவு. நந்தி (200 m (660 ft)) ஆகிருதி. ஜம்மென்று இருக்கிறார். சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டு மூலவர் சந்நிதி சில்லென்று குளிர்ச்சியாக இருக்கும். தெற்கு பார்த்த அம்மன் பெரியநாயகி. 9.5 ft (2.9 m) உயரமாக நிற்கிறாள். ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறு உள்ள ஆலயம்.
1020ல் உருவானது. ஒன்பது வருஷங்கள் கட்டப்பட்டது. ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய பெருவுடையார் கோயில். ஆம். இங்கேயும் சிவன் பெரியவர். பிரகதீஸ்வரர். பெரிய நந்தி.
சோழர்களின் பொற்காலத்தில் உருவான ஆலயம். வடக்கேயும் சோழர் பலம், ஆதிக்கம், பெருமை ஓங்கியிருந்தது. ராஜேந்திரன் வடக்கே சென்று பல ராஜ்யங்களை வென்றதால் தான் அவன் பெயர் ”கங்கை கொண்டவன்”. எவ்வளவோ வேலைப்பாடுகளை, சிற்பக் கலைத்திறன் கொண்ட ஆலயம். கல்லிலே கலைவண்ணம் இங்கேயும் தஞ்சாவூரில் உள்ளது போல் காண முடிகிறது. வடக்கு சாளுக்கிய ராஜ்யங்களை வென்று அவர்கள் கலாச்சாரத்தையும் பல்லவர்களின் சிற்பக்களை நேர்த்தியும் சேர்ந்தது.
நர்த்தன கணேசரை பார்க்க தவறவே கூடாது. அர்தநாரீஸ்வரர் அழகு கிளி கொஞ்சுகிறது. சக்தியும் சிவமும் சேர்ந்த பரா சக்தி கோட்பாடு. சிற்பி ஆண்மையையும் பெண்மையையும் ஒரு சேர ஒரே முகத்தில் காட்டும் அழகை என்னவென்று வர்ணிப்பது.
‘ஹா என்று பிரமிக்க வைக்கும் மூலவர் பிரகதீஸ்வரர். 4 மீட்டர் உயரமானவர். கர்பகிரஹம் நுழையும் முன்பு நாம் வணங்க அருள் புரிபவள் சரஸ்வதி தேவி. நேர்த்தியான கலைவாணி. சாளுக்கிய கலைத்திறன் அங்கே காண முடிகிறது.
சூர்ய பீடம் அற்புதம். நவகிரஹங்களில் முதன்மையானவன் அல்லவா? இதிலும் சாளுக்கிய கலைத்திறன் காண முடிகிறது. பிற்காலத்திற்கு நடந்ததை தெரிவிக்க முன்னேற்பாடோடு ராஜேந்திரன் நிறைய செப்பேடுகள், கல்வெட்டுகள் அளித்திருக்கிறான். சோழ சாளுக்கிய உறவை அதில் அறிய முடிகிறது. போர் சங்கதிகள், ராஜேந்திரனின் வெற்றிகள், தான தர்மங்கள், எல்லாம் கதை கதையாக கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டு, செப்பேடுகள் பொய்ச்செல்லாமல் நிஜத்தையே கக்குகிறது. அடேயப்பா எத்தனை எதிர்ப்புகளை சமாளித்திருக்கிறது இந்த அதிசய கோவில். வெள்ளைக்காரர்கள், பிற்கால பாண்டியர்கள், கொள்ளைக்கார்கள், எல்லோரிடமிருந்தும் தப்பித்திருப்பதே ஒரு அதிசயம் தான். மொத்தத்தில் க .கொ .சோ.புரம் ஆலயம் ஒரு கலைப் பொக்கிஷம். எனக்கு முன்னால் எத்தனையோ மஹான்கள் இங்கே வந்து தரிசித்திருக்கிறார்கள் என உணரும்போது நானும் பாக்கியசாலி தான். பார்க்காதவர்கள் நிச்சயம் ஒருமுறை சென்று பார்க்கவேண்டும்.