கொஞ்சம் மனம் திறக்கட்டுமா? – NANGANALLUR J K SIVAN
சந்தோஷமா இருக்கணும்னு ஆசையாக இருக்கு. ஆனால் எப்படி சந்தோஷமா இருக்கிறது? என்று மட்டும் தெரியலே. சந்தோஷம் என்கிறது எங்கே கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? யார் தருவார்? என்ன விலை தரணும்? இது எல்லாம் விஷயம் தெரியாதவர்கள் படும் கவலை. தேடல். சந்தோஷம் நமக்குள்ளேயே இருக்கிறது. தேடவே வேண்டாம். அனுபவித்தால் போதும். கொஞ்சம் புரிதல் வேண்டும். அவ்வளவு தான். சந்தோஷம் கற்பனைப் பொருள் இல்லை. நிச்சயம் கிடைக்க கூடிய ஒன்று தான்.
சுற்றிலும் பார். எது எப்படி தெரிகிறதோ, அப்படியே அதை ஏற்றுக்கொள். அதில் விருப்பமோ வெறுப்போ வேண்டாம். அது உனக்காக படைக்கப்பட்டது இல்லை. உன்னைப்போலவே அதும் தோன்றியது தான். அதில் நீ யார், அப்படி இருக்க வேண்டும், இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க?. உன்னைக்கேட்டா நீ படைக்கப்பட்டவன்?
உன்னைப்போலவே எல்லோரும் என்று புரிந்து கொண்டு எல்லோரையும் நேசி. அன்போடு பழகு. அதற்கு தான் உனக்கு உரிமை. அது தான் உனக்கு இட்ட கடமை.
உன் சுக துக்கங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. ஆகவே அதற்கு தனி அந்தஸ்து ஒன்றும் வேண்டாம். கிடைத்ததற்கு நன்றி சொல். சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள் கிடைத்ததை அனுபவி. மேற்கொண்டு தேடாதே. உனக்கு சந்தோஷத்தை அளித்த எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் நன்றி சொல். உன்னால் முடிந்தவரை நீயும் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்க முயற்சி செய். தவறுகள் எல்லோருக்கும் சகஜம். குறை கண்டுபிடிக்காதே. தவறுகள் மூலம் தான் சரி யாக எதையும் தெரிந்து கொள்ள முடிகிறது, திருந்த முடிகிறது.
‘ மறப்போம் மன்னிப்போம்’ அருமையான கொள்கை. விடாமல் கைப்பிடி. நடப்பதெல்லாம் நாராயணன் செயல், எல்லாம் நன்மைக்கே என்ற பண்பட்ட மனம் உன்னை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
திறந்த மனத்தோடு எல்லாவற்றையும் அணுக கற்றுக்கொள். அப்போது எங்கும் எவரிடமும் நேசம் தோன்றும். அன்பு பரிமளிக்கும் . விருப்பு வெறுப்பு அங்கே காணாமல் போய்விடும். எது தவறு?, யார் தப்பு? அப்படிப்பார்த்தால் ஒருவருக்கு தப்பாக தோணுவது மற்றொருவருக்கு சரி என மனதில் படலாம். ஆகவே எவரும் எவரையும் மதிப்பிடக்கூடாது. வித்யாசம் தோன்றும் மனதில் நிம்மதி இருக்காது என்று புரிந்து கொள் .
மனதை ஏதேனும் ஒன்றின் மேல் செலுத்தி தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பவன் அலுப்படைவதில்லை. நல்ல விஷயங்களை மனதில் நிரப்பிக்கொண்டால் தனக்கும் மற்றவருக்கும் சந்தோஷம் தானாகவே நிலைக்கும்.
திருப்தி என்பது மனதுக்கு கடவுள் தந்த ஒரு பரிசு. ‘இன்னும் இன்னும்’ என்று தேவைகளை ஆசைகளை அதிகரித்துக் கொண்டே வரும் போது ஒருவேளையிலும் எவருக்கும் நிம்மதி கிடைப்பதில்லை. கோபம் தாபம் பொறாமை எல்லாம் போனசாக அவர்களை வாட்டும்.
பிறருக்கு உதவும்போது ஒரு விதமான ஆனந்தம் சந்தோஷம் மனதுக்கு கிடைப்பதை அனுபவித்தவர்கள் நன்றாக அறிவார்கள். இறைவன் இயற்கையை அற்புதமாக படைத்து நமக்கு சுகமாக வாழ அளித்திருக்கிறான். அதை நன்றியோடு உணர்வோம்.
நட்பு அன்பு என்பது மனிதகுலத்துக்கு இறைவன் அளித்த சிறப்பு பரிசு. குழந்தைகள் தெய்வ ஸ்வரூபம். அவர்களோடு பழகுவது, விளையாடுவது ஒருவனுக்கு கிடைக்கும் அரிய , அருமையான சந்தர்ப்பம். அதை நழுவ விடக்கூடாது.
தனக்கு என்று ஒரு சில நிமிஷங்களை ஒவ்வொருவரும் தனிமையில் ஒதுக்கிக் கொண்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபடும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறதே. ரிஷிகள், மஹான்கள் பல காலம் யோசித்து, அனுபவித்து நமக்கு அளித்த உபதேசங்கள், அறிவுரைகள், உண்மைகள், நம்மை உயர்வடைய உதவுபவை. அதில் கொஞ்சம் அடிக்கடி நேரம் செலவழிக்க வேண்டும்.
எதுவுமே சாஸ்வதமில்லை, நமது உலக வாழ்வு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் என்ற எண்ணம் அடிக்கடி நினைவில் வரும்போது மனிதன் தன்னுடைய குறுகிய காலத்தை அற்புதமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கும் பிறர்க்கும் நல்லதே செய்ய வாய்ப்பு இருக்கிறது.