திரு வீழிமிழலை. – நங்கநல்லூர் J K SIVAN
அப்பர் எனும் திருநாவுக்கரசர் காலடி பட்ட இடம் எல்லாம் சிவபக்தி பயிர் விளைந்தது. உழவாரப்பணி அவர் சென்ற
இட மெல்லாம் சிறப்பாக நடந்தது. சமீபத்தில் பாலாற்றங்கரை அரசர் கோவில் என்னும் க்ஷேத்ரம் சென்றபோது தரையில் கால் வைக்க முடியவில்லை. அத்தனை நெருஞ்சி முள். நமது உழவாரப்பணி நண்பர்கள் இத்தகைய நிலையில் உள்ள பல கோவில்களிலும் பக்தர்கள் சௌகர்யமாக நடக்க ”வழி” செய்யவேண்டும் என்று தோன்றியது.
அப்பர் நிறைய சிவஸ்தலங்களை அடைந்து பதிகங்கள் பாடினார். திருப்புகலூர் சென்றார். அங்கே ஞானசம்பந்
தரும் வந்திருந்தார். என்ன அபூர்வமான சந்திப்பு. தாத்தாவும் பேரனும் போல ஞானப்பழங்கள். இருவரும் முருக நாயனார் திருமடத்தில் சில நாட்கள் சிவபக்தியில் திளைத்து அளவளாவி மகிழ்ந்தார்கள். பிறகு சிறுத்தொண்டர், நீலநக்கர், முருக நாயனார் ஆகியோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர். குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி, அம்ருத கடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திரு வீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங்களில் திரு வீழிமிழலையில் தங்கினார்கள்.
அப்போதும் மழையில்லாமல் வருந்தும் காலம் உண்டு. ஆற்று நீர் சுருங்கியும், வறண்டும் விட்ட நிலையால் உணவுப் பஞ்சம். ‘ இறைவா, எப்படி பக்தர்களுக்கு அன்ன தானம் செய்ய முடியும்? பல உயிர்கள் பசியால் துன்புறுகிறதே, வீழி நாதரே, கொஞ்சம் காசு தரக்கூடாதா” என்று ஞானசம்பந்தர் பாடுகிறார், அப்பரும் வேண்டுகிறார்.
”வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.
அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே”
பரமேஸ்வரன் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் இருவர் கனவிலும் தோன்றினான். `கால வேறுபாட்டால் துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக் காசு தருகின்றோம்` என ஆறுதல் அளித்தான். என்ன ஆச்சர்யம், திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு தானாக தோன்றும்படி அருள் செய்தான். அக் காசுகளைப் பெற்று `சிவனடியார்கள் இரு பொழுதும் உணவு பெற்று வாழ்க” என எல்லோருக்கும் சொல்லியவாறு அடியார்க்கு அன்னதானம் செய்தார்கள். திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞான சம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.
திருவீழிமிழலை சென்று வீழிநாதரை தரிசித்திருக்கிறேன்.அற்புதமான பெரிய கோவில். இந்த ஊர் பற்றிய சில புராண கதைகள் ஒருவரியில். காத்யாயன ரிஷியும் அவர் பத்னியும் தவமிருந்து பார்வதி பெண்ணாக பிறந்து அவளை சிவனுக்கே மணமுடிக்க வேண்டி, சிவன் மாப்பிள்ளை கோலத்தில் இங்கே காசியாத்திரை கிளம்ப, சிவனுக்கு மாப்பிள்ளைஸ்வாமி என்று பெயரோடு, கோவிலில் பந்தக்கால் கூட இருக்கிறது. மூலவருக்குள்ள பெயர்கள், வீழிநாதர், வீழிஅழகர், நேத்ரபாணேஸ்வரர், அம்பாள் பிருஹத் சுந்தர குஜாம்பாள் , அழகிய வண் முலையம்மை , காத்யாயனி. இந்த க்ஷேத்ரம், சந்தனம்,செண்பகம், பலா, விளா மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது . அனைத்துக்கும் வீழி என்று பெயர். மிழலைக் குறும்பன் என்ற சிவ பக்த வேடன் சிவனுக்கு ஒரு விளாம்பழத்தை நைவேத்தியமாக அளித்ததால் இந்த க்ஷேத்ரம் திரு வீழிமிழலை என்று பெயர் பெற்றதும் இங்கே விளாம்பழம் மூலவரின் காலின் கீழே காண்பதும் ருசிகர சமாச்சாரம். ஈசன் பொற்காசு படி அளந்து வழங்கிய பீடம் இன்றும் இருக்கிறது. பெரிய வௌவால் நாற்றம் வீசும் மண்டபம் ஒன்று காணப்பட்டது. நான் சென்றபோது அந்தி நேரம். இருட்டில் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.