சிவலிங்கம். – நங்கநல்லூர் J K SIVAN
பரமேஸ்வரனை சிவாலயங்களில் நாம் எப்படி தரிசிக்கிறோம்? கோளமுமில்லாமல், சதுரமுமில்லாமல், வழ வழவென்ற கருமையான கல்லாலான, முகமில்லாத லிங்க வடிவில் தானே. ஏன்? லிங்க புராணம் என்ன சொல்கிறது?
லிங்கம் என்பது ஒரு குறி, அடையாளம். நிறம், வாசனை, ருசி, சப்தம் எதுவும் இல்லாத இயற்கையின் ஸாஸ்வதம். லிங்கம் ஸமஸ்க்ரித வார்த்தை.கோழி முதலா, முட்டை முதலா என்ற வினாவிற்கு இன்று காலை வரை விடையில்லை. ஆதி அந்தமில்ல பழமனாதி பரமேஸ்வரனுக்கு கோழி முட்டை வடிவ லிங்கம் அமைத்த மஹான்கள், ரிஷிகளை எப்படி பாராட்டுவது?
ஆற்றில் நதியில் வெள்ளம் என்றால் மனதில் தோன்றுவது எங்கோ நிறைய மழை பெய்ததால் ஆறு நிரம்பியிருக்கிறது.
நிறைய புகை மூட்டம் இருந்தால், ஓஹோ எங்கோ தீப்பற்றி இருந்திருக்கிறது என்று உணர்கிறோம்.
லிங்கத்தை பார்க்கும்போது? ஓஹோ எண்ணற்ற பல உருவங்களின் கலவையோ இது? லிங்கத்தில் ஒரு புரிபடாத அதீத சக்தி இருக்கிறது. பார்க்கும்போதே மனதை ஆட்டி அசைகிறது. இல்லையென்றால் பல யுகங்கங்களாக ரிஷிகள் மஹான்கள் சிவனை லிங்கமாக ஏற்று, தரிசித்து, வணங்கி இருப்பார்களா? சிவாலயங்களில் மூலவராக இருப்பாரா?
தனக்கென்று எதுவுமில்லாத மற்றதை ப்ரதிபலிக்கும் ஸ்படிக லிங்கத்தை மனதார வணங்குகிறோம். லிங்கம் சைதன்ய ஸ்வரூபம். பார்க்கும்போதே கண்களில் ஆனந்த கண்ணீர். மனம் உருகி கண்ணீர், பேசுகிறோம், பாடுகிறோம், எண்ணுகிறோம். இதயத்தை தொடுகிறது சிவலிங்கம். அளவிடமுடியாத சக்தி புரிகிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கை.உயிர்வாழ இன்றியமையாத ஒளி. ஜோதிர் லிங்கங்கள் 12 இந்தியாவில் துவாதச லிங்கங்கங்களாக வழிபடப்படுகிறது.பஞ்ச பூத லிங்க ஆலயங்கள் காஞ்சி, காளஹஸ்தி, திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் சிவலிங்கமாக வழிபடப்படுகிறதே. நவகிரஹங்களின் உருவம் சிவன். எல்லா நவகிரஹங்களும், நவகிரஹ ஆலயங்களும் சிவன் கோவில்கள் தானே. உலகத்தில் பல இடங்களில் சிவலிங்கங்கள் காணப்படுகிறது.
சர்வேஸ்வரி காமாக்ஷி காஞ்சியில் மண்ணில் லிங்கம் அமைத்து வணங்கினாள். பரமாத்மா விஷ்ணு ராமனாக அவதரித்து ராமேஸ்வரத்தில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து உபாஸித்து பாபத்தை போக்கிக் கொண்டார். இன்னும் என்ன சொல்வதற்கு இருக்கிறது? சொல்ல வார்த்தையில்லை திணறுகிறேன்.திருமூலர் சொல்லும் நாலு வரிகள் தான் ஞாபகம் வருகிறது. சிவோஹம். அன்பு தான் சிவம், சிவமாக நாம் இருக்கிறோம்.
”மானிடராக்கை வடிவு சிவலிங்கம் –
மானிடராக்கை வடிவு சிதம்பரம்
மானிடராக்கை வடிவு சதாசிவம்
மானிடராக்கை வடிவு திருகூத்தே ”
மனிதனின் உடம்பு ஒன்றைப்போல் மற்றொன்று இல்லை, எண்ணற்ற உருவம், வடிவம் கொண்ட, தனி ஒரு உருவமில்லாத சிவலிங்கம். அது எல்லையற்ற வெட்டவெளி. பரவெளி. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான ஒளி மயம். பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு தான் சிவலிங்க கோட்பாடு. அதன் அசைவு தான் ஆனந்த நடனம்.