கிஷ்ண சாமி நீயே துணை. நங்கநல்லூர் J K SIVAN
குடிகார கணவன் வீட்டை விட்டு எங்கோ போய் வருஷம் ஏழு எட்டு ஆகிவிட்டது. ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அருகே ஒரு கிராமத்தில் ருக்மணி குழந்தை முரளியோடு குடியேறி அவனை வளர்த்து பக்கத்து நகரத்தில் படிக்கிறான். பள்ளியில் முரளியின் பெயர் “பார்த்தசாரதி” இந்த பெயர் பின்னால் ஒரு குட்டி கதை இருக்கிறதே அதை முதலில் சொல்கிறேன்.
ஏகாம்பரம் குதிரை ரேஸ் பைத்தியம். அதென்னவோ அவன் எந்த குதிரையின் மீது பணம் கட்டினாலும் அது அவசரமே படாமல் ஜாக்ரதையாக கடைசியில் மெதுவாக நடந்து வந்தது. அவன் பெண் ருக்மணியை திருவல்லிக்கேணியில் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருந்த பார்த்த சாரதி கோவிலில் எப்போதும் பார்க்கலாம். பார்த்த சாரதியின் புன்முறுவல் நிறைந்த முகம் எப்போதும் அவள் நெஞ்சிலே. அவள் அவனை நினைக்காத நேரமே இல்லை. “கிஷ்ண சாமி, நீயே துணை” என்பது அவளுக்கு தெரிந்த ஒரே மந்திரம். பார்த்தசாரதியை நினைத்தாலே அவள் கவலைகள் பறந்து விடும். குடிகார, குதிரை ரேஸ் பைத்திய அப்பன் தினமும் அம்மாவோடு சண்டையிட்டு அவளையும் ருக்குவையும் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போதெல்லாம் “கிஷ்ண சாமி நீயே துணை” தான் சொல்வாள். அப்பன் கண்ணை மூடினான் அவனது கை வண்டியில் ருக்கு காய்கறி வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ 4வது படிக்கும்போதே படிப்பை நிறுத்தி வீட்டு வேலை செய்து பாத்திரம் கழுவியது பழங்கதை. கணவனும் அப்பன் மாதிரியே . அது தான் பழங்கதை.
பள்ளிக்கூடம் போகும் முரளி தினமும் ஒரு மைல் குறுக்கு வழியில் ஒரு அடர்ந்த காட்டு பாதையில் செல்ல வேண்டும். பஸ் டவுன் வழியே செல்லும். ஆனால் பஸ்ஸில் போக முரளிக்கு ஆசை இருந்தும் வசதியில்லை.“அம்மா என்னை பஸ்ஸிலே ஸ்கூலுக்கு அனுப்பு” ருக்கு அழுதாள்
“ ஏன்மா அழுவுறே”
“நாம்ப ஏழை கண்ணு, என்கிட்டே காசு இல்லப்பா. நீ குறுக்கு வழியாகவே காட்டுப்பாதையில் நடந்து போப்பா”
“ தனியா காட்டுப்பாதையில் போக பயமா இருக்கு மா”.
“கிஷ்ண சாமி, நீயே துணை என்று சொல்லுடா. கிருஷ்ணன் காப்பாத்துவார். பயமா இருக்கும்போது கிஷ்ணா, கிஷ்ணான்னு கூப்பிட்டுக் கிட்டே போ. காப்பாத்துவான். எனக்கு வேறே வழி தெரியலை கண்ணு.”
காட்டுப் பாதையில் ஒரு மாதமாக முரளி ” கிஷ்ணா கிஷ்ணா” என்று கூப்பிட்டு கொண்டே ஸ்கூலுக்கு நடக்கிறான். மனதுக்கு அது தெம்பாக இருந்தது. போகும்போதும் வரும்போதும் யாரோ கூடவே துணைக்கு வருவது போல் இருந்தது.
ஒருநாள் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியருக்கு ஒய்வு பெற்றதால் பிரிவு உபசார விருந்து. ”எல்லா பசங்களும் ஹெட்மாஸ்டருக்கு எதாவது பரிசு கொண்டு வந்து கொடுக்கணும்” என்று தாமு வாத்தியார் ஆர்டர் போட்டார்.
” அம்மா ஹெட்மாஸ்டருக்கு நான் என்ன பரிசு கொடுப்பேன் ? ஏதாவது குடு” வழக்கம் போல் அம்மா பஞ்சப்பாட்டு பாடினாள்.
“நமக்கு யார்டா இருக்க உதவ. உனக்கு துணை வரானே கிஷ்ணன், அவனையே ஏதாவது தரச்சொல்லு ” மனமுருகி ருக்கு முரளியிடம் சொன்னாள்.
“கிஷ்ணா கிஷ்ணா” என்று முரளி காட்டுப்பாதையில் கூப்பிட்டான்.
“என்ன முரளி, சொல்லு” என்று ஒரு குரல் அன்போடு கேட்டது
“எங்க க்ளாஸ் தாமு வாத்தியார் ஹெட்மாஸ்டருக்கு பரிசு கொண்டா” ன்கிறார். அம்மா உன்னை கேக்க சொல்றா. நீ தான் ஏதாவது பரிசு கொடுக்கணும். தரியா?” ‘ ஓ, ‘தரேனே . அதோ உன் எதிரே தெரியுது பார் ஒரு பெரிய ஆலமரம்.அதன் அடியில் ஒரு செம்பு நிறைய பால் வச்சிருக்கேன். அதைக் கொண்டு போய் கொடு. நான் பசு மாடு மேய்க்கறவன். என் கிட்டே பால் தானே இருக்கும்”.
எல்லா பிள்ளைகளும் வித விதமான பரிசு கொடுக்க முரளியின் பால் செம்பு சீந்தப்பட வில்லை. தாமு அவனை கேவலமாக பார்த்தார். அன்று மதிய வேளையில் தாமு வீட்டில் மனைவியிடம்:
“என் கிளாஸ்லே ஒரு பையன் செம்பு நிறைய பால் கொண்டு வந்தான். அதை எப்படி ஹெட்மாஸ்டருக்கு கொடுக்கிறது. அந்த செம்பு பாலை காய்ச்சி நாம ரெண்டு பேரும் குடிக்கலாம். இந்தா”
தாமுவின் மனைவி அடுப்பில் பாத்திரத்தில் பால் செம்பை கவிழ்த்தாள். அட இது என்ன அதிசயம்? செம்பு மீண்டும் பாலால் நிரம்பியது. மறுபடியும் கொட்ட மீண்டும் நிரம்பியது. அவள் பயந்து ஓடிப்போய் போய் தாமுவிடம் விஷயம் சொல்ல, தாமு பள்ளிக்கூடத்தில் முரளியைப் பிடித்தார்.
“ஏலே, உனக்கு யார்டா பால் செம்பு கொடுத்தது?”
”என் நண்பன் கிஷ்ணன்”. முரளி விஷயம் சொல்ல, தாமுவும் மற்ற பிள்ளைகளும் கொல்லென்று சிரித்தனர்
“கிஷ்ணனாவது, ராமனாவது என்னடா இது உளறல்?. கதை உடுறே. யாரோ மாஜிக் காரன் கிட்டே செம்பு வாங்கி வந்து ஏமாத்தறே”“ இல்லே சார் கிஷ்ணன் தான் கொடுத்தான்”.
“ டேய் , எனக்கு பைத்தியம் பிடிச்சுடும். திருப்பி திருப்பி கிஷ்ணன் தினமும் கூப்பிட்டா பேசுவான், துணை வருவான், பால் செம்பு தந்தான் என்று அதையே திரும்ப திரும்ப சொல்லாதே. கிஷ்ணன் ராமன் எல்லாம் எந்த காலமோ. இப்போ எங்கடா இருக்காங்க? கோவில்ல தான் சிலையாக, படமாக பாக்கலாம். புராணத்திலே தான் பேசியிருக்காங்க”
“இல்லீங்க ஸார், கிஷ்ணன் தினமும் என் கூட பேசுவான் சார், அவன் தான் சார் இந்த சொம்பை நிறைய பாலோடு கொடுத்தான். உங்க கிட்ட குடுக்க சொன்னான்”
“டேய் பார்த்தசாரதி, மேலே பேசாதே, கோபம் அதிகமாச்சுன்னா உன் தோலை உரிச்சுடுவேன். கொம்பால் விளாசிடுவேன். வா இப்பவே என்னோடு. எங்கே இருக்கான் உன் கிஷ்ணன். எனக்கு காட்றியாடா?”
“சரிங்க சார்” என்றான் முரளி
காட்டுப்பாதையில் தாமு அருகில் நிற்க ” கிஷ்ணா கிஷ்ணா” என்று முரளி பலமுறை கூப்பிட்டும் பதிலே இல்லை.
முரளி அழுதான்.
”கிஷ்ணா, எங்க வாத்தியார் வந்திருக்கார் நீ என் கூட இருக்கிறதை, பேசறதை, சொன்னா நம்ப மாட்டேன்றார் உன்னை பார்க்கணுமாம் கொஞ்சம் இங்கே வரியா.”
தீர்க்கமாக ஒரு குரல் அவர்கள் இரண்டு பேருக்கும் கேட்டது.
“முரளி, நான் எப்படி அப்பா வர முடியும். உங்க வாத்யார் தான் நான் இல்லவே இல்லை என்று சொல்லிட் டாரே. என்னை நம்பாதவர் முன் நான் எதற்கு வரணும் ?”
தாமு கண்ணில் நீர் வடிந்தது. நடுங்கினார்
“கிஷ்ணா என்னை மன்னிச்சுடு நான் தப்பு பண்ணிட்டேன்”
முரளியின் காலை பிடித்து கொண்டார் தாமு வாத்யார்.
“கிஷ்ண சாமி, நீயே துணை” என்றார் தாமு வாத்யார். முரளி தான் எப்போதும் சொல்பவனாச்சே.