ஓம் – பிரணவ சப்தம். – நங்கநல்லூர் J K SIVAN
நான் இதில் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. எல்லோருக்கும் தெரிந்த ”ஓம்” எனும் பிரணவ மந்திரம், சப்தம் பற்றி தான்.
”ஓம்” (OM) என்ற உச்சரிப்பு தெய்வீகமானது, உன்னதமானது. அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யம், நிம்மதி, சந்தோ ஷத்துக்கு இன்றியமையாத உச்சரிப்பு. ‘ஹே , பரமாத்மா ஜீவாத்மாவான என்னை உன்னோடு இணைத்துக் கொள் ” எனும் வேண்டுகோள். அதனால் தான் பகவானை வேண்டும்போதும் போற்றும்போதும், வணங்கும்போதும் முதலில் ”ஓம் ” சொல்லிவிட்டு அப்புறம் தான் நமசிவாய, நாராயணாய, ஷண்முகாய, கணேசாய, எல்லாமே. அண்ட பகிரண்டமே
‘ஓம்’ எனும் ஆதாரத்தில் தான் நின்று சுழல்கிறது. வெளியில் பஞ்சபூத சக்திகளும் உள்ளே பஞ்ச இந்திரியங்களும் கட்டுப்படும் சக்தி ‘ஓம்’ . ‘ஓம்’ சொல்லும்போது உடலில் ஆறு சக்ரங்களிலும் உயிர்ச்சக்தி சீராக ஓடுகிறது. ரத்த ஓட்டம் ஒழுங்காக இயங்குகிறது. அதனால் மன அழுத்தம், நரம்பு தளர்ச்சி எதுவுமில்லை. உடலில் ஜீரண சக்தி பெருகுகிறது. பிராணாயாமம் அதோடு சேர்ந்து நடைபெறுவதால் ஆயுள் நீள்கிறது. ‘ஓம்’ எனும் மந்த்ர அதிர்வு மற்ற தீய சக்திகளை அழிப்பதால் ஆனந்தம் தான் நமக்கு பூரணமாக கிடைக்கிறது. ப்ராண சக்தி தான் ஓம் என்பதால் அதற்கு ப்ரணவம் என்றே பெயர். 108 தடவையாவது குறைந்த பக்ஷம் சொல்லும்போது எண்ணற்ற நன்மைகள் பெறுகிறோம். ஞாபக சக்தி, எண்ணங்கள் சீராக செயல்படுவதால் இந்த ‘ஓம்’ மந்திரம் நமது மனம், வாக்கு, காயம், மூன்றுக்கும் பேருதவி செய்கிறது.
‘ஓம்’ மனிதனுக்குள் தெய்வீகத்தை புகட்டுவது. வாயினால் உச்சரிப்பதை விட மனதால் உதடு அசையாமல் சொல்வது உத்தமம். அவசரம் இல்லாமல் நிதானமாக மனம் உணர்ந்து சொல்வது தான் தியானம். ஆத்மாவின் நாதம் தான் ‘ஓம்’. அது எதை குறிப்பிடுகிறது என்றால்:
அ+உ+ம் என 3 பிரிவுகளாக. அதாவது பூமி + ஆகாயம் + தேவலோகம் . ப்ரம்மா + விஷ்ணு + சிவம், ரிக் + யஜீர் + சாம வேதங்களை . ‘ஓம்’ சப்தத்தின் அதிர்வு அலைகள் உடல், உள்ள நோய்கள் சகலமும் நீக்கும். அடிவயிற்றிலிருந்து ஓம் என்று உச்சரிக்கும்போது வயிறு, தண்டு வடம், தொண்டை, மூக்கு, மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. ஓம்கார சப்தத்தினால் உருவாகும் சக்தி மேலே சொன்ன அங்கங்களை புதுப்பிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள NASA நாஸா ஆராய்ச்சியாளர்கள் ‘ஓம்’ எனும் சப்தம் விண்ணில் சூரியனைச் சுற்றி ஒலித்துக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள். சுற்று சூழல் அதால் புனிதமாகிறது. பாஸிடிவ் எனும் ஆக்க பூர்வ அதிர்வு கள் பரவுகிறது. உள்ளத்திலும் உடலிலும் உள்ள அசுத்தம் நீங்கி தீர்க்கமாக புத்தி விரிவடையும். குரலில் பேச்சில் தெளிவு பிறக்கும். முதுகு தண்டு வடம் நிமிர்ந்து உறுதி யாகும்.
‘ஓம்’ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். கர்ப்பிணி பெண்கள் ‘ஓம்’ உச்சரிப்பதால் அழுத்தம் நீங்கி அமைதி, சீரான ரத்த ஓட்டம் பெருகி கருவில் சிசு நன்றாக வளரும். சுகப்பிரசவம் கைகூடும். உடல் உள்ள நோய்கள் அண்டாமல் காக்கும் சக்தி மருந்து ஓம்.
கடைசியாக ஒரே ஒரு வார்த்தை: கீதையில் கண்ணன் சொல்வது: 8.13 ஸ்லோகம்:
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ ८-१३॥
omityekākṣaraṃ brahma vyāharanmāmanusmaran yaḥ prayāti tyajandehaṃ sa yāti paramāṃ gatim
‘ டேய், என் பிரிய நண்பா அர்ஜுனா, இந்த ரகசியம் சொல்கிறேன் கேள்:
எவன் ”ஓம்” என்று தன்னுடைய கடைசி மூச்சை விடுகிறானோ அவன் நேராக என்னிடம் வருவான். மேலான கதி அவனுக்கு நிச்சயம் .”
ஆகவே இப்போதிலிருந்தே சொல்ல பழகினால் தான் கடைசி மூச்சை விடும்போது ஓம் ஞாபகத்துக்கு வரும்.