ஸர்வ கார்ய சித்தி. ஹோமங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
வீட்டில் பூஜைகள் தினமும் செய்பவர்களுக்கு ஒரு அனுபவம் தெரியும்.
வாழ்க்கை துன்பங்கள் மனதில் சுமையாக இருக்காது. ஆன்ம ஈடுபாடு, பக்தி அதை விலக்கி விடும்.
ஒரு தெய்வீக சூழல், சக்தி, நம்மை உள்ளும் வெளியேயும் ஆனந்தப் படுத்தும். பகவானைத் தியானம் பண்ணி துதிக்கும்போது எந்த கவலையும் மனதில் இடம் பெறுவதில்லை. எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நாம் சரணடையும் பொழுது நமக்கு என்று என்ன இருக்கிறது கவலைப்பட?
பகவானுக்கும் நமக்கும் உண்டான தொடர்பு தான் பூஜை ஹோமம், செய்வது எல்லாமே. பூஜைகளைத் தானே செய்யும் பக்தர்களும் லௌகீகர்களும் உண்டு. வாத்யாரை அழைத்து தக்ஷிணை கொடுத்து செய்பவர்களும் உண்டு.
கஷ்ட நிவர்த்திக்கு, சுப காரியங்கள் சரியாக பலன் தருவதற்கு, தரித்திரம் நீங்க, கல்யாணம் ஆக, வியாதி நிவாரணமாக, நீண்ட ஆயுள் பெற, குடும்பத்தில் சுபிக்ஷம் பொங்க, குழந்தைகள் நன்றாக படிக்க என்று எத்தனையோ காரியங்கள் சித்தியடைய ஹோமம் பண்ணுகிறோம்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள், குலதெய்வங்கள், அக்னி, உபதேவதைகள் இஷ்ட தெய்வங்கள்.
தானம் செய்வது ஹோமத்தில் ஒரு முக்கிய பாகம்.
வேத மந்த்ரங்கள் சொல்லாமல் ஹோமம் பண்ண முடியாது.
தெய்வங்களுக்கு , நவகிரஹ தேவதைகளுக்கு, திக் தேவதைகளுக்கு நாம் மனமார நமஸ்கரித்து, வேண்டிக்கொண்டு, ஆஹுதி, அவிர்பாகம், அர்ப்பணம் செய்து ப்ரீத்தி, திருப்தி பண்ணிவிட்டு நமக்கு வேண்டிய வைகளை,லோகத்தில் எல்லோரும் சௌக்யமாக வாழ, எல்லோரும் நீண்ட காலம் சுகமாக வாழ, ஆநிரை பெருக , மழை பெய்ய, வியாதிகள் நீங்கி, சுபிக்ஷமாக வாழ, இறைவனருள் பெற, கோரிக்கைகளாக வைத்து ஹோமம் பண்ணுகிறோம்.
புருஷ சூக்தம் வேதம் ஹோமத்திலிருந்து தோன்றியது என்று சொல்கிறது.
எது எப்படியோ, வேதமும் ஹோமங்களும் மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை, உண்மையானவை.தெய்வீக மானவை. வேதத்தில் சொல்லப்படும் கர்மாக்கள் நிறைவேற நல்ல பலனளிக்க ஹோமம் உதவுகிறது. சூரியன் அக்னி ரெண்டுமே மனிதவாழ்க்கையில் அத்தியாவசியமானவை.
ஹோமம் நம்பிக்கையை வளர்க்கிறது. ஹோமத்தை கிரஹஸ்தர்கள் தாமாக செய்ய முடிவதில்லை, வேதமறிந்த வாத்தியார்கள் வந்து நடத்தி கொடுப்பார்கள்.
ஹோமம் நடத்து முன் சங்கல்பம் செய்து கொண்டு துவங்குவது மரபு. நல்லதை நினைத்து நல்லதே நடக்க ஹோமங்கள் செய்வது மனதுக்கு திருப்தி அளிக்கும்.
மஹா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஸுக்த ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்.
மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம், மஹாகணபதி ஹோமம், ஆயுளை வழங்கும்.
கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாழ்க்கையில் இடையூறுகளை நீக்கும்.
ருத்ர ஜபம், ஹோமம், ருத்ர அபிஷேகம், நீண்ட ஆரோக்ய வாழ்வை அளிக்கும்.
ஸ்வயம்வர பார்வதி ஹோமம், உமா மஹேஸ்வரி பூஜை திருமணம் நடக்க உதவும்.
லட்சுமி குபேர பூஜை ஹோமம், சுதர்சன ஹோமம், செல்வம், உத்யோக பிராப்தி அளிக்கும்.
சரஸ்வதி ஹோமம், நல்ல கல்வியை அளிக்கும்.
வருணனுக்கு அளிக்கும் உதக சாந்தி மன நிம்மதி, அமைதியை, தரும்.
ஸ்ராத்த கால ஹோமங்கள் பித்ருக்களின் ஆசியைப் பெற்று தரும்.
வீடு கட்ட, முடிக்க, வாஸ்து விஷயங்களில் நலன் பெற, நல்ல பலன் கிடைக்க பூ வராஹ ஹோமம் பண்ணுவார்கள்.
சண்டி ஹோமம் அம்பாளின் வீர்ய சக்தி, நீண்ட ஆயுள், தைர்யம், எடுத்த காரியங்களில் வெற்றி தரும்.
மேலே சொன்னது அனைத்துமே அதில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு தான்.
சாதாரணமான விஷயங்களுக்கு, உதாரணமாக காலில் சுளுக்கு, முதுகு. காது வலிக்கு ஒரு மனித டாக்டரை நம்பி, அவர் அளிக்கும் மருந்தை காசு கொடுத்து வாங்கி குணமாகும் என்ற நம்பிக்கையோடு விழுங்குகிறோமே, நம்மால் இயலாத காரியங்களை நடத்திக் கொடுக்கும் தெய்வத்தை நம்பவேண்டாமா?. அது காசு கேட்கிறதா? வியாபாரம் பண்ணுகிறதா?அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க நேரம் ஒதுக்கவில்லையே. எப்போதும், எந்நேரமும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி நமக்கு உதவ தயாராக இருக்கிறதே.
இறைவனை நம்பாதவனுக்கு எதற்கு இறைவனை திருப்தி படுத்தவேண்டிய அவசியம்?.
அவனுக்கு ஏன், எதற்கு, ஹோமம் பூஜை எல்லாம்?
Namaskaram mama,
Very useful information about various Homams
Thanks