KARMA – J K SIVAN

கர்மா – புரியாத விவகாரம்-  நங்கநல்லூர்-  J K  SIVAN

எவ்வளவு தான்  படித்தாலும்  கேட்டாலும்  மேலும் தெரியாத,  புரியாத,  சில  விஷயங்களில்  முக்யமானது  ”கர்மா”.

ஆமாம்  கர்மா கர்மா என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்று முதலில் தெரியவில்லை. சரி எதையாவது படித்து தெரிந்து கொள்ளலாம் என்று படித்தால்  சுத்தமாக புரியவில்லை. அதை புரிய வைக்க தான் கொஞ்சம் சிரமப் படுகிறேன்.

ரொம்ப சிம்பிள்.   செயல்,கார்யம், என்பது  தான்  கர்மா —   ஒரு  ஸம்ஸ்கிருத   வார்த்தை.   சயன்ஸ் மட்டும்  தெரிந்த  ஹிந்துக்களே, நீங்கள்  படித்த  நியூட்டனின்  விதியை  ஞாபகப்படுத்திக்  கொள்ளுங்கள்.   –  ஒவ்வொரு செயலுக்கும்  ஒரு  பதில் செயல் (விளைவு)  உண்டு”. நாம்  நினைப்பது, பேசுவது, செய்வது  எல்லாவற்றிற்கும்  ஒரு  பதில் விளைவு உண்டு.   என்ன  வித்தியாசம்  இதில்  என்றால்,  இந்த  பதில்  விளைவானது கொஞ்சம் மாறுதல் கொண்டதாக , வேறே  ரூபத்தில்

இருக்கலாம், எதிர் பாராததாக  அமையலாம், தொங்கலில்  விடுவதாக தோன்றலாம்,  படுத்தலாம், சந்தோஷ துக்கம்  சம்பந்தப் பட்டதாகவும்  நேரலாம்.  எல்லாம் நாம்  செய்யும் செயலை பொறுத்ததே.   ஒன்று மட்டும் நிச்சயம்.  எவருமே  இந்த பதில் விளைவைத்  தடுக்கவோ, அழிக்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ  வழியில்லை,   முடியாது. அது தான் கர்ம பலன்.
இதை  ஒரு தண்டனையாக  எதற்கு  பாவிக்க வேண்டும்?  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்  என்பது  நல்லதாகவும்  இருக்கலாம் அல்லவா?  நம்மைத்  திருத்துவதற்கு,   அல்லது  ஒரு நல்ல, உபயோகமான,   படிப்பினையாக  கூட  இருக்க லாமே.
தான் கஷ்டப்படுவதற்கு  ஏதுவான  செயல்களை  ஒருவன்  புரிந்திருந்தால்  பின் விளைவு கஷ்டமாக இல்லாமல் பின்  எப்படி இருக்கும்?   எனக்கு  மனசாக்ஷி,  நீதி,  நேர்மை  ஒன்றும்   தெரியவில்லை  என்று  சொல்வது,  எனக்கு   சட்டம் தெரியாதே  எதற்கு  நான்  செய்த  குற்றத்துக்கு  தண்டனை  என்பது  போல. கோர்ட், போலீஸ்  இதை ஏற்குமா?
தைர்யமாக  ”வருவதை  மேற்கொள்ளடா கர்ணா!”  பிறவிகள்  பல  எடுத்து  கர்மத்தை தொலைக்க வேண்டி இருக்கிறது.
எனவே  கர்ம பலன்  என்பது  பிரபஞ்ச  நீதி.  வினை  விதைத்தவன்   தினையா  அறுக்க  முடியும்?  சுவற்றில்  நீ  அடித்த  பந்து அதே  வேகத்தோடு உன் முகத்தில் தான் வந்து அடிக்கும்.
உங்களுக்கு  சந்தோஷம்,  மன அமைதி,  நட்பு,  அன்பு  இன்பம்,  இதெல்லாம்   வேண்டுமா.  ஐயா, ஸ்வாமி,  நீங்களும்  அதை  மற்றவருக்கு கொடுத்து   பாருங்கள் பலமடங்கு  கூடவே  உங்களிடம்  அவை  அணுகும்.   அது தான் உங்கள்  செயல் சொல் விளைவு.
வாழ்வு உலகில்  நமக்கு  தானாகவே  அமைவதில்லை.  நமது செயல்பாடு  இன்றி அது இல்லையே.   பிரபஞ்சத்தின்  ஒரு  அம்சம்  தான்  நாம்.   உள்ளும்  புறமும்.   நம்மைச் சுற்றி  நாம்  காண்பது  நமது உள்ளே தோன்றுபவற்றின் வெளிப்பாடே.   நீ  நீயாகவே  இரு.  உனக்கு  எது  தேவையோ  அது  மற்றவர்க்கும்  தேவையாச்சே  என்று  உணர்ந்து  உனக்கு  தேவையானதை  தேடும்போது மற்றவர்க்காகவும் சேர்த்து தேடு  என்று  தான் வேத சாஸ்திரங்கள்,  கீதை போன்ற  ஆன்மீக நூல்கள் சொல்கிறது.
எதை  நீ  தவிர்க்க  முயல்கிறாயோ  அது  உன்னை  விடாது  என்ற உண்மையை  நினைவில் கொள்வோம். எதிராளிகளை  துச்சம் என  நினைப்பது,  ஏளனம் செய்வது, இளக்காரம் புரிவது எல்லாம்  அதைவிட  நமக்கு  கொஞ்சம்  கூடவே அசலும் வட்டியுமாக  வர காத்திருப்பதை  உணர்வோம்..
இடமாற்றம்  நம்மை மாற்றிவிடாது.  அங்கும்  நாம்  நாமாகத்தான் செயல் புரிவோம்.   செய்யும்  செயல்களின் தன்மையை  கவனமாக சிந்தித்துப்  பார்த்த பின்  செயல்பட வேண்டும். மன அளவில் வளர  மாறுதல் செய்ய  வேண்டியது நம்மையே  தவிர   மற்றவர்களையோ மற்றதுகளையோ  அல்ல. 
 கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டியது  நம்மைத்  தான்.  நாம் உள்ளே  சீர் பட்டு விட்டோமானால்  வெளியே உள்ளது அனைத்தும்  தானே  சீர் பட்டதாகவே  மாறிவிடும்.
என் வாழ்க்கையில்  எங்கோ   கோளாறு என்றால்  அது  என்னுள்ளேயே  தான்  என்பது  வெட்ட வெளிச்சம்.  நம்மைச்  சுற்றி இருக்கும்  அனைத்தும்   கண்ணாடி.  நமது  பிம்பத்தைத்   தான்   அதில் காண்கிறோம்.   எனவே  நமக்கு  நேர்ந்தவை, நேர்பவை, நேரப்  போகின்றவை, அனைத்தும்  நமது செயலின்  விளைவு தான்.
ரெண்டு எண்ணங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க முடியாது.  நாம்  உயர்வைத் தேடி  உழைக்கும்போது  தாழ்ந்த  தீய  எண்ணங்களுக்கு  இடமிருக்காது.   தீய  எண்ணங்களிலேயே  உழல்பவன்  மேன்மை  பெறுவது குதிரைக்கொம்பு.

‘நடந்ததையே  நினைத்திருந்தால்  அமைதி  என்பதேது?’   பி பி  ஸ்ரீனிவாஸ் பாடுவதை அவ்வப்போது  கேட்பதோடு அர்த்தமும் புரியட்டும்.   நாமாகவே  நமக்கு  இந்த  க்ஷணம்  கிடைக்கும்  நிம்மதியை  இழக்கிறோம்.  பழங்கதை   நிகழ்வதை விழுங்கிவிடுகிறது.
உண்மையை  அறியும் வரை  சரித்திரம்  அதன் வழியே  தொடர்ந்து தான் செல்லும்.  சென்ற வழியை மாற்றினால் சரித்திரமும்  மாறுமே.    சரித்திரம் என்பதே  நடந்ததை ஞாபகப்படுத்துவது தானே.

 
உலகில்  எல்லாவற்றிற்கும் ஒரு  விலை ,  மதிப்பு,  உண்டு.  வியர்வை சிந்துபவன் பலன் அடைகிறான். 
பொறுமை,  விடா முயற்சியோடு   நம்பிக்கை —  இந்த  இரண்டும்  தான்  ஒவ்வொரு மனிதனுக்கும் உதவுபவை.
மாவுக்கேற்ற பணியாரம்  என்கிறோமே  அது  இதற்கும்  பொருந்தும். உழைப்புக் கேற்று  தான்  ஊதியம். 
எண்ணமும் செயலும்  நல்லதாக  பலனெதிர் நோக்காது  அமைந்தால்  நாம் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணன் தான்
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *