புத்துணர்ச்சி. – நங்கநல்லூர் J K SIVAN
நாம் புத்தரோ, யேசுவோ, கிருஷ்ணனோ, விவேகானந்தரோ வள்ளுவரோ இல்லை என்று தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அறிவுரை இலவசமாக மட்டுமில்லை, எவரும் கேட்காதபோதே வாரி வழங்குவதில் பாரி, காரி. ஓரி, மாதிரி வள்ளல்கள்.இதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது.
சிலர் கஷ்டம் வந்தாலோ, நொடித்துப் போயிருக்கும்போதோ, அதற்கு ஏதோ, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் தான் காரணம், ‘அந்த பேச்சு, அந்த செயல், அந்த மனிதன் ‘ தான் இதற்கு காரணம் என்று தனக்குள் வெம்பி வெதுங்குவார்கள். ‘ ”நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான், எனக்கு அதிர்ஷ்டம் இல்லை’ என்று புலம்புவார்கள். எப்போதோ, எவரிடமோ, எவராலோ நடந்த ஒரு சம்வாதம், செயல், சச்சரவு, சண்டை, கருத்து வேறுபாடு எப்படி நம் இன்றைய நிம்மதி இழந்த நிலைக்கு காரணமாகும்? என்றோ நிகழ்ந்த ஒன்று இன்றைய சந்தோஷத்தை ஏன், எப்படி, குலைத்து விடுகிறது? பழசுக்கு அவ்வளவு பலமா? நடந்ததை என்றும் யாராலும் மாற்ற மறைக்க முடியாது என்பதாலா?
ஒரு பேனா, பென்சில், எடுத்துக்கொண்டு இப்போது என்ன தொந்தரவு, கஷ்டம், ப்ராப்ளம் என்று லிஸ்ட் போடுவோம்.
என்னவெல்லாம் நம்மைத் துளைக்கிறது என்று ஒருவாறு கருப்பு வெளுப்பில் அப்போது நம் கண் முன் பார்க்கலாம். அப்புறம் அந்த ஐட்டங்களில் எதற்கெல்லாம் நம்மால் ஒரு விடை த்ருப்திகரமாக கண்டுபிடித்து ப்ராப்ளம் முடிவுறும், எதெல்லாம் நம்மால் முடியாது என்று ரெண்டு பிரிவாக பிரித்துக் கொள்வோம்
எதெல்லாம் நம்மால் முடியாது என்று பிரித்தோமோ அதெல்லாவற்றையும் மீண்டும் படித்து ஒவ்வொன்றாக யோசித்து அமைதியாக பார்க்கும்போது இன்னும் சிலவற்றுக்கும் நம்மால் திருப்திகரமாக சுமுகமாக தீர்வு காணமுடியும் என்று தோன்றும். அது லிஸ்டில் இருந்து விடுபடும். கடைசியில் இப்படி அமைதியாக யோசித்துப் பார்க்கும்போது, நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை,ஏதோ ஒரு தீர்வு நிச்சயம் காணமுடியும் என்று புரியும். காரணம்? தன்னபிக்கை இருப்பதால் தான். நமக்கு உறுதுணையாக வலு சேர்ப்பது நம்முடைய மனசாட்சி. அமைதியான சிந்தனை.
பிறருக்கு உதவி செய்யும்போது, நமது மனசாட்சி நம்மை முதுகில் தட்டி ”டேய் நல்ல பையா” என்று ஊக்குவிக்கிற தல்லவா? அதே போல் நமக்கும் நல்லது செய்விக்கும். ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தன்னம்பிக்கை, சோர்வைப் போக்கி ஊக்கம் அளிக்கும். உற்சாகமூட்டும். பிறருக்கும் இந்த உற்சாகம் ஊக்கம், ஆதரவு மிகவும் பயன்படும்.
நான் எழுதும்போது நானும் மகிழ்கிறேன்,உற்சாகமடைகிறேன், மற்றவர்கள் சிலர் அதெல்லாம் படிக்கும்போது இதனால் பயனுற்றால் அதுவும் எனக்கு நன்மை தானே, புண்யம் தானே, உட்கார்ந்த இடத்திலிருந்தே யாருக்கோ எங்கோ பயன் பட்டால் என் வாழ்க்கையின் சில மணித்துகள் நல்ல வழியில் பயன் பட்டது என்ற திருப்தி உண்டாகிறதல்லவா?
நான் புத்தரில்லை என்றாலும் புத்தரை, மஹா பெரியவாளை, ஆதி சங்கரரை, எங்கோ எப்போதோ படித்து அதை சுருக்கமாக நாலு பேருக்கு கொடுக்கும்போது இந்த சந்தோஷம் கிடைப்பதும் ஒரு பாக்யம் இல்லையா?
பணம், அதை சேர்ப்பதில், அதைப் பாதுகாப்பதில், ஒளித்து, கணக்கு காட்டாமல் மறைத்து வைப்பதில் தான் பல துன்பங்கள் நம்மை லட்டு மாதிரி பிடித்துக் கொள்கிறது. நிம்மதியை விழுங்கி விடுகிறது.
வாழ்க்கை என்பது 20 சதவிகிதம் தான் உண்மையில் எல்லோருக்கும் நிகழ்வது. மீதி 80 சதவிகிதம் அதை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. இன்பமும் துன்பமும் அதால் தான் ஸார் .
நம் எண்ணங்கள், நம் செயல்கள் , சொல், இதெல்லாம் தான் அந்த 80 %ல் அஸ்திவார தூண்கள். ஒரு சொம்பு ஜலத்தை ஐந்து நிமிஷம் கையில் வைத்துக் கொண்டிருந்தால் ப்ராப்ளம் இல்லை. ஒரு மணிநேரம் அதை தூக்கிக் கொண்டிருந் தால் கை தானாகவே வலிக்கும். இறக்கி வைத்தால் போதும் என்றாகிவிடும். அப்படித்தான் மனத்தில் சுமைகளை வெகு காலம் நேரம், தாங்கிக் கொள்ளாமல் கழற்றி விட்டுவிட வேண்டும். மன அமைதி, நிம்மதிக்கு மருந்து என்று புரிகிறதா?
ஐயா, நம் வார்த்தைகளுக்கு தான் நாம் எஜமானர்கள். அதை அடுத்தவர் எப்படி புரிந்து கொண்டார், எடுத்துக் கொண்டார் என்பதற்கு நாம் ஜவாப் தாரி அல்ல. ஆனால் வார்த்தை கத்தியை விட கூரான ரெட்டை பக்கம் கொண்டது. வார்த்தைகளை அளந்து பொறுப்பாக இன்னொருவருக்கு வலிக்காமல் பேசவேண்டும். கையாளவேண்டும்.
வரவுக்கு மீறிய செலவு நமக்கு துன்பத்தைத் தருகிறது. இருப்பதை விட்டு பறப்பதின் பின்னால் ஓடுவதும் தப்பு. போதும் என்ற மனம், இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி படுவது துன்பத்தை தவிர்க்கும். மற்றவரோடு நம்மை ஒப்பிடவே கூடாது.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. சொந்தம் பந்தம் நட்பு வட்டம் எல்லாம் அப்படித்தான் இருக்கும். நாம் நினைக்கிறபடி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களோடு சுமுகமாக பழகினால் பாதி துன்பம் விலகும்.
ஆபிசில் சம்பளம் கொடுப்பவன், எஜமானன் கசக்கி பிழியாமல் இருப்பானா? WORK FROM HOME ஆபிசில் போய் வேலை செய்வதை விட கடினமாக இருப்பது அதனால் தானே? பொறுமை, நிலைமையை உணர்தல் அவசியம்.
சந்தர்பத்துக்கேற்ப நாம் சமயோசிதமாக நடந்து கொள்ளவேண்டியது புத்திசாலித்தனம். சின்ன வயதிலேயே நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன நோய்கள் வளர இடம் கொடுக்காமல் அவ்வப்போது மனதுக்கும் உடலோடு சேர்த்து ஒய்வு கொடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை படிப்பது சிந்திப்பது அதற்கு நல்லது என்று தோன்றுகிறது. கடவுள் மேல் பக்தி தன்னம்பிக்கைக்கு அவசியமாகிறது. சங்கீதம் மயிலிறகால் தடவுவது போல் மனதுக்கு உற்சாகம் அளிக்கும் என்பது என் அனுபவம். நானும் அதனால் தான் தெரிந்தவரை, முடிந்தவரை பாடுவேன்.
Namaskaram mama,
Very TRUE.Thanks
Mahaperiyavaa sharanam