காண்பதும் காட்சியும் – நங்கநல்லூர் J K SIVAN
அவர் பெயர் ஜித்து க்ரிஷ்ணமுர்த்தி. JK என்று தான் உலகம் அவரை அறியும். சிறந்த தத்வ ஞானி. அவரது ஆங்கில சொற்பொழிவுகள் உண்மையிலேயே அம்ருத பொழிவு தான். நிறைய கேட்டிருக்கிறேன். அவர் புத்தகங்கள் நிறைய படித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்று அவர் எண்ணங்களில் கொஞ்சம் தமிழில் என் வழியில் பரிமாறினால் என்ன என்று தோன்றியது. JK கிருஷ்ணன் ராமன் என்று சுவாமி பற்றி எல்லாம் அதிகம் பேசமாட்டார். புராணங்களை தொட மாட்டார்.
++
கண் பார்ப்பதெல்லாம் காட்சி அல்ல. கவனம், பாரபக்ஷமற்ற தெளிவு, அதை ஊக்குவிக்கும் அன்பு மனம், இருந்தால் காணும் காட்சி கோணலாகாது. பார்க்கும் கோணம் தான் காட்சியை கோணலாக்குகிறது. தானும் அனுபவித்து பிறரையும் அந்த காட்சியை துய்க்க வைக்க முடியும். உணர்ச்சி வசத்துக்கு இங்கே இடமில்லை.
நமது துயரத்தை, துன்பத்தை, கஷ்டத்தை மற்றவர் அனுபவிக்க முடியுமா? ஏனென்றால் அந்த கஷ்டம் துயரம் துக்கம் எல்லாம் நம்மிடமிருந்து உருவானது. நாம் தான் அதைப் போக்க முடியும். மற்றவர் அறிவுரை கூறலாம், அணைக்கலாம், ஊக்கமளிக்கலாம். எல்லோருக்கும் இது தான் விதி. எத்தனை ஒரே காட்சியை பார்த்தாலும் அது வேறு வேறான அனுபவம் தான் தருகிறது. பார்ப்பது தான் சேர்ந்தே தவிர அவரவர் அனுபவம் தனித் தனியானது.
ஒரு மரத்தை, காதலனை, காதலியை, மனைவியை, கணவனைப், பார்க்கும்போது, மனது என்ன அபிப்ராயம் சொல்கிறதோ அது தான் கண்ணிலும் பதிவாகிறது. உண்மைத்தன்மையை கண் பார்க்கவோ, மனம் எடை போட தவறுகிறது. பார்ப்பதற்கும் பார்த்த பொருளுக்கும் இடையே வட துருவம் தென் துருவம் அளவு வித்யாசம் இருக்கும். ரொம்ப ஜாக்கிரதையாக முடிவெடுக்க வேண்டும். அவனைப் பார்த்தாலே பிடிக்கலே, அவள் மோசமானவள், என்றெல்லாம் குதித்து முடிவெடுக்க கூடாது. எந்த கோணத்தில் பார்த்தோம் என்ற ஆராய்வு தேவை.
தவறான முடிவுகள் வாழ்வில் துன்பத்தைத் தரும், நிம்மதியை கெடுக்கும். பரமானந்த்தோடு இருப்பவனின் பார்வையில் எல்லாருமே பரமன் தான். ஸர்வம் க்ரிஷ்ணமயம் ஜகத் அது தான்.
துரியோதனனுக்கு அவன் பார்த்தவர்கள் அத்தனை பேரும் கொடியவர்கள், நம்பத்தகாதவர்களாகவே தோன்ற தர்ம புத்ரனுக்கு உலகில் எவருமே எதிரியாக தோன்றவில்லை. இதை தான் JK சொல்கிறார்.
நமக்கு எது தப்போ எது சரியோ, அது எல்லோருக்கும் அப்படியல்ல என்று புரிந்து கொண்டாலே வாழ்க்கை இனிமை தரும். காலத்திற் கேற்ப காட்சிகள் மாறும், அனுபவம் வேறுபடும். எதுவுமே நிரந்தரம் அல்ல. விஞ்ஞானத்தில் இந்த அனுபவம் வளர்ச்சி எனப்படுகிறது. மனமும் வளர்ச்சி பெறட்டுமே. மனிதன் மிருகமாக இருப்பதிலிருந்து தெய்வமாக வளர்ச்சி, உயர்ச்சி பெற வேண்டாமா?.அன்பு, சமநோக்கு சுயநலமின்மை, அஹிம்சை, சாத்வீகம், பொறாமை, பேராசை இன்மை இதற்கு மாடிப்படிகள். எந்த வித உளைச்சலும், உந்துதலும் இல்லாமல் குழந்தை போல் உலகைப் ப்பார்க்க குழந்தையாலும் கடவுளாலும் தான் முடியும்.
அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம்.