தெரியாத சில விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
தேஹத்திலிருந்து ஆவி பிரிந்தால் அது தான் மரணம். அதற்கப்புறம்? ஒரு புது பிரயாணம் ஆரம்பம். இது வரை பூமியில் வாழ்ந்ததை விட அது மேலானது. மரணம் வாழ்க்கையின் முடிவு இல்லை ஸார். வாழ்க்கை என்பது வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு வாழ்க்கையையும் பிரிக்கும் சுவர் தான் மரணம். ஆத்மாவை வட்டம் என்று வைத்துக் கொண்டால், அதன் மையம் தேகம். அதன் வெளிச்சுற்று எல்லையற்றது. ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு வட்டம். மரணம் என்பது ஒரு மையத்தை விட்டு இன்னொரு மையத்துக்கு போவது. ஆத்ம ஞானம் உள்ளவன் பஞ்ச இந்திரியங்களை கடந்தவன். மரணத்தை வென்றவன். ஆத்மா ஜீவன் இல்லாத உடல் காற்றுப் போன பலூன். அழிவடைவது. மரணத்துக்கு அப்புறம் நிகழ்வதை மனிதன் எவ்வளவோ குட்டிக்கரணம் போட்டு இன்னும் தேடிக் கொண்டி ருக்கிறான். அவன் பிடிக்கு அப்பால் அதை கிருஷ்ணன் ஒளித்து வைத்திருக்கிறான்.
விஞ்ஞானம் முழு ஞானம் இல்லை. மரணத்தை வாழ்க்கையின் முடிவு என்று எண்ண வேண்டாம். அது ஒவ்வொரு வாழ்க்கையின்(பிறப்பு) இடையே உள்ள தடுப்பு சுவர். ஒவ்வொரு மனிதனின் ஆசைகள், விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாம் ”வாசனைகள்” என்ற பெயரில் அடுத்த பிறப்பில் அவனோடு தொடர்கிறது. இதை தான் பூர்வ ஜென்ம வாசனை என்கிறோம். சிலர் அதீத சக்திகளை இதனால் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு தேகத்திலிருந்தும் பிராணன் எனும் உயிர்(ஜீவன்) பிரிந்தவுடன் வெளியே காற்றில் கண்ணுக்கு தெரியாமல் கலந்து சுற்றுகிறது. அடுத்த பிறவிக்கான உடலுக்கு காத்திருக்கிறது. நம்மைச் சுற்றி கோடானு கோடி ஜீவன்கள் இப்படி சுற்றிக்கொண்டே இருக்கிறது. உயிர் இல்லாத தேஹம் பிரேதம் எனப் பெயர் கொண்டது.
பஞ்ச பூதங்களாலான இந்த தேகம் கடைசியில் அவற்றுக்கே செல்கிறது. வந்த இடத்துக்கே போகிறது.செத்துப்போன உடம்புக்கு சொல்லும் கடைசி மந்த்ரங்கள் உள்ளே இருந்த ஜீவனுக்கு சொல்வது. அது உடனே உடலை விட்டு செல்லாது. அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். ”இந்த உடம்பை விட்டு பஞ்ச ப்ராணன்கள் வெளியேறட்டும்.காற்றோடு கலக்கட்டும். இந்த உடம்பு பஞ்ச பூதங்களோடு சேரட்டும் ” என்ற அர்த்தமுடையவை. அப்புறம் தான் இந்த உடம்பு தீயிடம் ஒப்படைக் கப்படுகிறது. பஞ்ச ப்ராணன்கள் வெளியேறுகிறது. கண் பார்வை சூரியனுக்கும், வார்த்தை அக்னிக்கும், மூக்கு, மூச்சு காற்றுக்கும், காது நாலு திசைக்கும், தேகம் மண்ணுக்கும், முடி, தாவரங்களுக்கும், ரத்தம் ஜலத்துக்கும் செல்கிறது.
வாயு என்று சொல்லப்படுவது காற்று, ப்ராணன். உடம்பில் இந்திரியங்களை இயக்குவது. எண்ணங்களை உருவாக்குவது. உணர்வுகளை தூண்டுவது. உடல் உறுப்புகளை அசையச் செய்வது. பலூனுக்குள் உள்ள காற்று பலூனை ஆட்டுவிப்பது போல. சகல காரியங்களுக்கும் வாயு எனும் ப்ராணன் அவசியம். அதை தான் ஹிரண்ய கர்பன் எனும் ப்ரம்மா என்கிறது வேதம். மொத்தமாக உடலில் உள்ளது காற்று மூச்சு. ஜீவன். ஸூக்ஷ்ம பிராணன் தான் ஆத்மா,நமது உடம்பு பற்றி இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது. தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது.