ஒரு சின்ன அட்வைஸ்… நங்கநல்லூர் J K SIVAN
நம்மிடம் ஒரு பழக்கம். நாம் மட்டுமே பேசுவோம். பிறர் பேசுவதைக் கேட்கவோ, கவனிக்கவோ ஆர்வம், விருப்பம் காட்டுவதில்லை. இந்த கிணற்றுத்தவளை பண்பாடு மறைந்து முதலில் பிறர் சொல்வதை கேட்போம், சிந்திப்போம், அதில் எதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமோ அதை தவறாமல் மனதில் பதிய வைப்போம். கற்றலில் கேட்டலே நன்று என்று ஒளவைப் பாட்டி ஏற்கனவே சொன்னதைக்கூட நாம் கேட்பதில்லை.
முதல் பழக்கம் இனிமேலாவது, நாம் பேசுவதற்கு முன் முதலில் பிறர் சொல்வதை பொறுமையாக, குறுக்கிடாமல் கேட்பதாக ஆரம்பிக்கட்டும். அதை ஏற்றுக்கொள்வது எதிர்ப்பது நமது சுதந்திரம். வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.யாரையுமே அன்போடு தழுவுவது, தட்டிக்கொடுப்பது, தோளை , கையைப், பிடித்துக் கொண்டு பேசுவது உறவுக்கும் நட்பார்களுக்கும், பிடிக்கும்.
வாய் விட்டு சிரிப்பது ஒரு நல்ல பழக்கம். சிரிக்கவேண்டும், சிரிக்க வைக்கவேண்டும்.
பிறர் செய்தது சிறு உதவியானாலும் நன்றி சொல்வது நல்ல பழக்கம். நன்றி மனதின் ஆழத்தில் இருந்து வரவேண்டும். உதட்டளவில் இல்லை.
”ஆஹா உனக்கு இந்த சிகப்பு கலர் சட்டை ரொம்ப நன்றாக இருக்கிறது, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், நீ ரொம்ப நன்றாக பேசினாய், பாடினாய், ஓடினாய், உங்க வீட்டு சமையல் அபாரம்” போன்ற சொற்கள் நட்பை,உறவை பலப்படுத்தும்.உனக்கும் பிறருக்கும் தனிமை தேவைப்பட்டால் அதை அளிக்க தவறவே கூடாது. சில சந்தர்ப்பங்களில் தனிமை தான் மருந்து.
சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருக்க பழகவேண்டும். வயது இதில் சம்பந்தப்பட்டது இல்லை. இது நான் அனுபவித்த, இன்னும் அனுபவிக்கும் கைகண்ட ஒளஷதம்.