ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN

அதிசய தண்டனை

”யாரு, அந்த  அழுக்கு வேஷ்டி வெங்கட்ராமனா, அவன் ஒரு பழம் பஞ்சாங்கமாச்சே ” என்ற பெயரை சுலபத்தில் சம்பாதித்த ஜமதக்னி சாஸ்திரிகளின்  பிள்ளை   J. வெங்கடராமய்யர் உண்மையிலேயே ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. கவர்மெண்ட் பள்ளிக்கூட சமஸ்க்ரித வாத்யார். உதவி ஹெட்மாஸ்டர். மேலதிகாரிகளிடத்தில் எப்படி பொய்யாக நடித்து மரியாதை காட்டவேண்டும் என்று கூட  பிழைக்கத்  தெரியாதவர். பரம ஏழை. ஆறு பெண்கள் மூன்று பிள்ளைகள். போதுமா?. சுருக்கமாக  ஒரு வார்த்தையில்  சொன்னால் ஒரு நவீன குசேலர்.

ஒரு பழைய ஒட்டு வீட்டில் ரெண்டு ரூபாய்  மாத வாடகைக்கு குடியிருந்தவர் . ஆறு ஏழு மாதமாக வீட்டு வாடகை பாக்கி. வீட்டு  சொந்தக்காரன் நடேச முதலி, தோட்டம் துறவு வைத்துக்கொண்டு நிறைய வசதியோடு இருந்ததால் வாடகை பற்றி அதிகம் தொந்தரவு கொடுக்க  வில்லை. பாவம்   ஏழை ஐயர் நல்லவர்,  எப்படியும் அய்யர் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஒருநாள் திடீரென்று கவர்மெண்ட் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ஒருத்தர்  வெங்கட்ராமய்யருடைய பள்ளிக்கூடத்துக்கு வந்த
போது உதவி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமய்யர்  அப்போது அங்கே இல்லை.  ஏன் இன்னும்  அசிஸ்டன்ட் ஹெட்மாஸ்டர்  பள்ளிக்கூடம் வரவில்லை? என்று  இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் அய்யர்.

”ஏன்யா? இப்போது தான் பள்ளிக்கூடம் வருவதா? இது தான் நீ சொல்லிக்கொடுக்கிற லக்ஷணமா?”

”சார் நான் கொட்டும் மழையிலும் பள்ளிக்கூடம் வந்து பாடம் சொல்லிக் கொடுப்பவன் சார். என்னைப்பற்றி அவதூறாக பேசவேண்டாம்.”

”இன்னிக்கு ஏன் லேட்டு ?”

”இன்னிக்கு  என் தோப்பனார் ச்ராத்தம் . எங்கப்பா திதி. காலம்பரவே எல்லாம் ரெடி. ஆனால் வாத்தியார்கள் தாமதமாக வந்து ஹோமம் பண்ணி இப்பதான் முடிந்தது. அதனாலே தான் லேட். என் பெற்றோருக்கும் நான் கடமைப் பட்டவனில் லையா?” என்கிறார் ஐயர்.

மேலதிகாரி இந்த ஆள் மன்னிப்பு கேட்காமல் எதிர் கேள்வி கேட்கிறவன். உயரதிகாரிகளிடம் பழக தெரியாதவன். ஒழுக்கம் குறைவு என்று அவர் மேல் ரிப்போர்ட் எழுதிவிட்டார்  இன்ஸ்பெக்டர்.   உயர் அதிகாரி  ஒரு  வெள்ளைக்காரன். வெங்கட்ராமய்யரை  மூன்று மாதம் உத்யோக தற்காலிக நீக்கம் செய்து  சம்பளமில்லாமல் கஷடப்பட  வைத்து விட்டான். அவனுக்கும் மேலே உள்ளவன், வேலையிலே இருந்தே எடுத்துவிடலாம் இந்த ஆளை என்று சிபாரிசு செய்தான். வருமானமின்றி எப்போது உத்யோகம் போகுமோ என்று வெந்து சாம்பலானார் அய்யர்.

அந்த ஊர் பெரியமனிதர் அப்போது யதேச்சையாக வந்தார்.  முனிசிபல் கல்வி அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம்  வெங்கட்ராமய்யர்  பற்றிய  விஷயம் போனது. அவரும் அய்யரைப் பற்றி தனது   நல்ல அபிப்ராயத்தை சொன்னார்.
திருவண்ணாமலையில்  பூத நாராயணன் கோவில் ஒரு பழங்கால ஆலயம்.  அதன் அருகே  அடிக்கடி  சேஷாத்ரி ஸ்வாமிகள் தென்படுவார்.   ஒருநாள் சேஷாத்ரி  சுவாமிகள்  அங்கே  நின்று கொண்டிருந்ததை ,  அவர் பக்தரான  வெங்கட்ராமய்யர்  தூரத்திலேயே பார்த்துவிட்டார்.   அவர் அருகே ஓடிவந்து,  தூரத்தில் ஒரு ஓரமாக  செருப்பை கழற்றி  வைத்து  ஸ்வாமிகள் அருகே வந்து ஸாஷ்டாங்கமாக  தரையில் விழுந்து  நமஸ்காரம் பண்ணினார்.

ஸ்வாமிகள் கண்ணில்  வெங்கட்ராமய்யர்  செருப்பு பட்டது.  நேராக அதனருகில் சென்று  அந்த பழைய செருப்பை  கையில் எடுத்து அதால் அய்யர் தலையில் நாலு சாத்து சாத்தினார்.  பிறகு  செருப்பை கீழே போட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் ஸ்வாமிகள்.

வெலவெலத்து போனார் அய்யர். ஓஹோ இன்று நமக்கு உத்யோகம் போகப்போகிறதோ. அதனால் தான் ஸ்வாமிகள் இப்படி தண்டனை கொடுக்கிறாரோ என்று பயந்து கொண்டே பள்ளிக்கு சென்றார்.

”உங்களை தலைமை ஆசிரியர் உடனே பார்க்க வேண்டுமாம் ” என்று ஒரு சேவகன் சொன்ன போது பிராணன் ஊசலாடிக் கொண்டிருந்தது அய்யருக்கு. மெதுவாக சென்றார்.

”இந்தாங்கோ உங்களுக்கு ஒரு லெட்டர் ஆபிலிசுலேருந்து வந்திருக்கு.” வெடவெடவென்று கைகள் நடுங்க தலைமை ஆசிரியர் கொடுத்த கவரை கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்ட அய்யர் அரை உயிரோடு அதை பிரித்து நடுங்கிக்கொண்டே மூக்கு கண்ணாடி வழியே பார்த்தார். படித்தார்.

இன்னொரு புது ஸ்கூல் டேனிஷ் மிஷன் அந்த வளாகத்திலேயே ஆரம்பிப்பதாகவும் அதற்கு அய்யர் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டிருப்பதாகவும் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் உயர்வுடன் அன்றே பொறு ப்பேற்க உத்தரவு அது.

ஸ்வாமிகள் அளித்த செருப்படிக்கு இவ்வளவு மதிப்பா? ”தலைமை” ஆசிரியன் சிறப்புடா  உனக்கு”  என்று  ‘தலையில்  செருப்பால் ‘ அடித்து  உணர்த்தி இருக்கிறாரோ  என்று  ஐயருக்கு  தோன்றியதோ இல்லையோ இதை எழுதும்போது  எனக்கு நிச்சயம் தோன்றியது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *