ஒரு சின்ன பிராணாயாமம் – நங்கநல்லூர் J K SIVAN
எந்த மஹானைப் பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும், ”உள்ளே மனதைச் செலுத்து…” என்கிறார்களே, அவர்களுக்கு சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். எனக்கு அதைத் தலையால் தண்ணீர் குடித்தாலும் செய்ய முடியவில்லையே” என்பது தான் பலர் அபிப்ராயம். அது ஒன்றும் கடினமான வித்தையல்ல. உனக்கு தோன்றும் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாக திரும்பிப் பார். கவனி. அவை முக்கால்வாசி உடனே காணாமல் போய்விடும். ரயிலில் டிக்கெட் இல்லாத பிரயாணி, கருப்பு கோட்டு TT கண்ணில் படுகிறாரா என்று பார்த்துக் கொண்டே இருப்பான், வேறு யாராவது கருப்புக்கோட்டுடன் பெட்டியில் ஏறினாலும் உடனே அதிலிருந்து கீழே இறங்கிவிடுவான். வேறு பெட்டிக்கு ஓடுவான். நம் எண்ணங்களை அப்படிதான் TT யை தேடுவது போல் தேடினால், அதை எதற்காக இந்த எண்ணம் என்று ஆராய முற்பட்டால், டிக்கட் இல்லாதவன் போல் அது ஓடிவிடும். மனது எண்ணங்களை ஆராய ஆரம்பித்தால் அவற்றின் நடமாட்டம் குறைந்துவிடும்.தேவையற்ற, தவறான வழியில் இந்திரியங்களை அலைய விடும் எண்ணங்கள் குறைந்தால், அந்த காலி யிடத்தில் நல்ல உபயோகமான, வாழ்க்கையை இன்பமுள்ளதாகும் எண்ணங்கள் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக அங்கே குடியேறும். சந்தேகமே இல்லாமல் மனம் ஒரு குரங்கு. அதைப் பிடித்து அசையாமல் கட்டிப் போடுவது கடினம். அதற்கு தியானம் அவசியமாகிறது.
எல்லாவித உணர்ச்சிகளும் ஊற்றெடுக்கும் ஸ்தலம் மனம். மனித உடம்பு கெட்டுப்போவதும், சுகமாவதும் அதால் தான். அழுவதும் சிரிப்பதும் அந்தந்த சரியான சந்தர்ப்பங்களில் உடலுக்கு நல்லது. மனதை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் ”பேசாமல், உன் உள்மூச்சு, வெளிமூச்சு, ரெண்டையும் எண்ணு. அதுலே மனம் நிக்கட்டும்” என்றார்.
உள்மூச்சு வாங்க ஆகும் நேரம் ஒண்ணிலிருந்து ஐந்து வரை சாதாரணமாக எண்ணும் நேரம், கிட்டத்தட்ட ஒரு நிமிஷம். மூச்சுக்கு காற்றை வெளியே மூக்கிலிருந்து சீராக வெளிவிட ஏழு வரை எண்ணலாம். ஐந்து தடவை இம்மாதிரி உள்ளே வெளியே சுவாசம் போய் வர, அதிக பக்ஷம் ரெண்டு நிமிஷம் ஆகலாம். அவ்வளவு தான். இதில் குறிப்பிடவேண்டியது, இந்த ரெண்டு நிமிஷ காலத்தில், கோபமோ, தாபமோ, வேறே எதிலோஎண்ணம் செல்லவில்லை என்பது தான் முக்கியம். ஒரு மணி நேரம் தினமும் இப்படி நம்பர் எண்ணுவதை விட்டு பகவான் நாமாவை உச்சரித்துக் கொண்டே ஸ்வாஸப் பயிற்சி பண்ணினால் நாம் எல்லோருமே ரிஷிகள்.