சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம்


சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம்.   நங்கநல்லூர்  JK  SIVAN 


வெகுநாட்களுக்குப் பிறகு  ஒரு  குட்டி யாத்திரை.16.1.2023 அன்று நண்பன் ராஜகோபாலனுடன் காஞ்சிபுர ஆலய தரிசனம் செய்ய  புறப்பட்டேன்.  வரதராஜ பெருமாள் தரிசனத்துக்குப் பிறகு  தெற்கு மாட வீதியில் கடைசி வரை நடந்தேன் .  இங்கே  சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம் எங்கிருக்கிறது என்று கேட்டதற்கு பதில் அநேகருக்கு தெரியவில்லை.  ”ரமணர் வீடு  திருவண்ணாமலையில் போய் பாருங்கள்”  என்று சிலர் சொன்னது ஆச்சர்யமில்லை.  தெற்குமாடவீதியில் நடக்க இடமில்லை.  வாகனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு  தெருவை அடைத்து விடுகிறது.  வீடுகள் அநேகம் வைஷ்ணவர்கள் இல்லமாக இருந்தும் ஒரு பெண்மணி ”அதோ அந்த கடைசி யில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் தெரியும் பாருங்கோ, அதற்கு எதிரே  போய் பாருங்கள் அங்கே  தான்  பார்த்ததாக ஞாபகம்” என்கிறார். கொஞ்சம் நம்பிக்கையோடு நடந்து  ஒரு சிறு வீட்டின் முன் நின்ற போது வாசலில்  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்ந்த இல்லம் என்ற விவரம் பலகையில் தெரிந்தது. உள்ளே ஒரு சிறு ஹால். அதில் சேஷாத்ரிஸ்வாமிகள் படம். தியானம் செய்ய நிறைய இடம் இருந்தும் ஒரே ஒருவர் மட்டும் அங்கே மடியாக  என்னிடமிருந்து  ”தள்ளி”  நின்றார். என்ன வேண்டும்? ஜாடை   காட்டினார்.  பதிலுக்கு நமஸ்காரம் செய்தேன் . ராஜகோபாலன் நூறு ரூபாய் தட்டில் போட்டதும்  ஒரு ரசீது புஸ்தகத்தில் அவன்  பெயரை பதிவிட்டு ரசீதை கீழே வைத்து ”எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்  ”மடி” மாமா.

 
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு,  ஆதி சங்கரர்  லோக க்ஷேமத்தை உத்தேசித்து காமாக்ஷி அம்மன்  கொலுவிருக்கும்  காஞ்சிபுரத்தில்   ஸ்ரீ வித்யா உபாஸனையை  தொடர்வதற்கு  சில வேத பிராம்மணர்கள் குடும்பங்களை  காஞ்சிபுரத்துக்கு அனுப்பி  அவை அங்கே  குடியேறின. காமகோடி வம்சம் என்று அவற்றுக்கு பெயர். அதிலொரு தலை முறை  காமகோடி சாஸ்திரிகள். காமாக்ஷி உபாசகர்.  ரிஷி போல் வாழ்ந்தவர்.தனது  சகோதரன்  மகள் மரகதத்தை தன் மகளாக  தத்தெடுத்து வளர்த்தார்.   தனது சிஷ்யன்  வரதராஜனுக்கே  அவளை மணமுடித்தார். வெகுநாள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  காமாக்ஷி கனவில் வந்து அருள் புரிந்து 22.1.1870  காமாக்ஷி அம்சமான சேஷாத்ரி பிறந்தான். 
 
பிறந்தது முதல் சேஷத்ரி ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை. ஸமஸ்க்ரிதம் தமிழ் ரெண்டிலும் பாண்டித்யம்.  தந்தையை இழந்து, தாயும்  மறையும் நேரம் 18 வயது சேஷாத்ரியை ஒருநாள்  அருகே   அழைத்து, ”நாளை நான் இருக்கமாட்டேன், வா,  பாடு என்னோடு என்று  ”அம்பா சிவே ” என்ற ஆதி சங்கரர்  ஸ்லோகத்தை   தாயும் மகனும் சேர்ந்து பாடினார்கள்.  தனது கரத்தை சேஷாத்ரி சிரத்தில் வைத்து  ”அருணாசல, அருணாசல , அருணாசல”  என்று மும்முறை சொன்ன தாய் பூவுலகத்தை விட்டு மறைந்தாள்.
 
அருணாசலம்  சேஷாத்ரியை  அவர் கடைசி மூச்சு வரை  40 வருஷ  காலம் ஆட்கொண்டது பிரசித்தம். எல்லோரும் அறிந்தது.
திருவண்ணாமலையில்  த்ரோபதி அம்மன் கோயில், ஈசான்ய மடம், துர்கை அம்மன் கோயில்,  சடைச்சி சத்திரம் திண்ணை, கம்பத்து இளையனார் சந்நிதி, பாதாள லிங்கம் சந்நிதி,என்று  மலையில் உச்சி தவிர  அதன் சரிவுகளில் காணப்பட்டார்.  ”இங்கே தான் அண்ணாமலை, உண்ணாமுலை ரெண்டுபேரும் எல்லோரையும் அழைச்சு  மோக்ஷம் தந்திண்டு இருக்கா”என்று அடிக்கடி சொல்வார்.
 
சிவந்த மேனி, சுருள் சடை கேசம் கழுத்து வரை, ஆழமான தீர்க்கமாக ஒளி வீசும்  கண்கள், தாடி மீசை, மிருதுவான குரல் அதிக உயரமோ குட்டையோ இல்லாத  தேகம். இது தான் ஸ்வாமிகள்.  பாடுவார், இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆடுவார். எச்சிலையில் நாய்களோடு சேர்ந்து  மிச்சத்தை உண்பார்.  எண்ணையை தலை கொட்டிக்கொண்டு  சொட்டச்சொட்ட  அலைவார்.  குளம் குட்டைகளில் எருமைகளோடு  கொஞ்சி விளையாடுவார். யாராவது க்ஷவரம் பண்ணி விட்டால், பாதியில் அரை க்ஷவரத்தோடு  எழுந்து  ஓடுவார்.  புரியாத  வாக்கியங்கள் பேசுவார். தமிழில் கேட்டால்  சமஸ்க்ரிதத்தில் பதில்.    அரைப் பைத்தியம் என்று பேர் சுலபமாக பெற்றவர்.
 
ஸ்வாமிகள் சின்ன  காஞ்சி புரத்தில்  இந்த அற்புத இல்லத்தை  மஹா பெரியவா பரணீதரன் மூலமாக கண்டு பிடிக்கச்செயது பிரபலமாகியது.  அந்த புண்ய ஸ்தலத்தில்  கண்ணை  மூடிக்கொண்டு   சேஷாத்ரி ஸ்வாமிகளைநினைத்து ஒரு சில நிமிஷங்கள் நின்றபோது  எத்தனையோ வருஷம் முன்பு வரதராஜன் தனது  மனைவி  மரகதத்தோடு குழந்தை  சேஷாத்ரியோடு அங்கே விளையாடுவது கண்முன் தெரிந்தது. ஆசைமகன் சேஷாத்ரிக்கு  பல ஸ்லோகங்கள் சொல்லிக்கொடுத்த இடம். தாயோடு சேஷாத்ரி கையை பிடித்துக் கொண்டு அந்த தெருவில் நடந்த காட்சி தோன்றியது.  
 
எங்களால் நடக்க முடியவில்லை.  அழைத்து வந்த  ட்ரைவரைத் தேடி வரவழைப்பதற்குள் ரொம்ப சிரமமாகி  அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அங்கிருந்து  திருவேளுக்கை சென்றதை பற்றி அப்புறம் எழுதுகிறேன்.
 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *