ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN வருஷா வருஷம் எத்தனை இடங்களில் பிரமாதமாக ராதா கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. அப்போது நன்றாக பல வருஷங்களாக பாரம்பரியமாக கற்றுக் கொண்ட அஷ்டபதி பஜனை பண்ணுகிறார்கள். விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வட்டமாக நின்று கொண்டு பாகவத கோஷ்டியின் பஜனைக்கு தக்க வாறு கழுத்தில் மாலை அணிந்து கொண்டு பஞ்ச கச்சத்தோடு பக்தர்கள் அஷ்டபதி பாடல்களுக்கு ஏற்றவாறு அடாடா. வயதான பெண்களும் கோலாட்டம் கும்மியோடு தனியாக ஒரு கோஷ்டி ஆடுகிறார்கள்.கண்கொள்ளா காட்சி. சமீபத்தில் சென்னையில் தேப்பெருமா நல்லூர் என்ற நிகழ்ச்சியில் நாள் முழுதும் இருந்து ரசித்து உங்களுக்கு எழுதினேன்.கீத கோவிந்தம் கிருஷ்ண சங்கீதத்தை அற்புத அஷ்டபதி பாடல்களாக எழுதியவர் ஜெயதேவர். எனக்கு அஷ்டபதி பாடல்களில் விருப்ப மேற்பட்டது ஜனரஞ்சகமாக பாடிய பாலமுரளி கிருஷ்ணாவின் இனிய குரலைக் கேட்டபிறகு தான். ஒருநாளைக்கு ஒரு தடவையாவது இன்றும் கேட்கிறேன்.பாடுகிறேன் .எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரிஸ்ஸாவில் (இப்போது ஒடிஷா) போஜ தேவர் ஓர் பிராமணர். அவர் மனைவி ரமாதேவி. அவர்களின் ஒரே மகன் ஜெயதேவர். அப்பாவிடம் அனைத்து சாஸ்திரங்களும் கற்றார். ஸ்ரீமத் பாகவதம் ரொம்ப பிடித்ததால் அன்றாட பாராயண மாயிற்று.பூரி ஜகந்நாதர் பக்தர் ஜெகதேவர் என்று ஒருவர் மகள் பத்மாவதி . கிருஷ்ண பக்தை. ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். மூன்று ”ஜெ” க்கள் ஒன்றாக இணைந்தன. பூரி ஜெகநாதன் ஜெகதேவன் கனவில் வந்து ”உன் மகள் பத்மாவதியை என் பக்தன் ஜெயதேவனுக்கு கொடு ” என்றான். ஜெகநாதன் உத்தரவை மீற முடியுமா?”என்னுடன் வா” என்று பெண் கையை பிடித்து அழைத்துக்கொண்டு ஊருக்கு கடைசியில் ஒரு குடிசை ஆஸ்ரமத்தில் இருந்த ஜெயதேவர் வீட்டுக்கு வருகிறார். வாசலில் திண்ணையில் பார்க்கிறார். அவரோ பேசாமல் எழுந்து நடந்து விட்டார்.’இனி இதோ இவரே உன் பதி. அவருக்கு சேவை செய்து அவரை அடைவது உன் பாக்யம். இது ஜெகந்நாதன் அருள் ” என்று ஜெகதேவர் சொல்லிவிட்டு அவளை அங்கே விட்டு விட்டார். பத்மாவதி ஜெயதேவர் இல்லாத நேரத்தில் அவர் ஆஸ்ரமத்தை சுத்தம் செயது அவரு டைய பூஜைக்கு, பாராயணத்துக்கு எல்லா ஸாமக்ரி யைகளும் எடுத்து வைத்து பூப்பறித்து, தொடுத்து, வாசல் பெருக்கி, நீர் தெளித்து, கோலமிட்டு, விளக்கேற்றி துப்புரவாக வைத்துக் கொண்டாள் . யாரோ பக்தர்கள் இதையெல்லாம் செய்வதாக நினைத்த ஜெயதேவர் ஒருநாள் பத்மாவதியை நேரில் பார்த்து அவள் தான் இதெல்லாம் செய்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்புகிறாள் தினமும் என்று அறிகிறார்.ஆச்சர்யத்தோடு இந்த பெண் யார்? எதற்கு ஒவ்வொருநாளும் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து எனக்கு உபகாரம் செயகிறாள், என்று வியக்கிறார். அவளை நிறுத்தி, பேசுகிறார்:‘‘நீ யாரம்மா? உனக்கு என்ன வேண்டும்? எதற்காக இதையெல்லாம் செய்கிறாய்?’’‘‘நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு பணி விடை செய்துகொண்டே இருக்க வேண்டும்; அதுவே என் பாக்கியம்”நீ யார், உன் பெயர், உன் பெற்றோர்கள் யார் என்று சொல்?”என் பெயர் பத்மாவதி, என் தந்தை ஜெகதேவர். இதே ஊர். பூரி ஜெகநாத பக்தர். எங்கள் குடும்பமே கிருஷ்ண பக்தி குடும்பம்.நீ எதற்காக இங்கே வருகிறாய்?”பூரி ஜெகந்நாதன் என்னை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை கனவில் கட்டளை இட்டதால் முதலில் உங்களுக்கு பணிவிடை செய்ய என் தந்தை யின் கட்டளை.”இதுவும் ஸ்ரீபகவானுடைய விருப்பம் போலும் என்று நினைத்து பத்மாவதியோடு அவள் வீட்டுக்கு செல் கிறார். இருவரையும் கண்ட ஜெகதேவருக்கு பரம சந்தோஷம். ”ஜெகன்னாதா, இதைத் தானே நீ ஆசிர் வதித்தாய்” என்று வணங்குகிறார். இதுவரை திரு மணத்தை வெறுத்த ஜெயதேவர் பத்மாவதியை மனைவியாக ஏற்கிறார்.இனி பூரி ஜெகநாதன் சும்மா இருப்பானா? ஜெயதேவருக்கு தன்னைப் பற்றி எழுத ஆர்வம் தருகிறான்.ரிஷியும் ரிஷிபத்னியுமாக இல்லறம், தினமும் கிருஷ்ணனுக்கு பூஜை கைங்கர்யங்கள் பாராயணம் செய்து, பத்மாவதி ஜெயதேவரிடம் உபதேசங்கள் பெறுகிறாள். ப்ரேமையும் பக்தியாக இருவரும் க்ரிஷ்ண பக்தி யோடு வாழ்கிறார்கள். கண்ணனும் ராதையுமாக அவர்களும் வாழ்கிறார்கள்.கீத கோவிந்த காவியம் உருவாகிறது.ஜெயதேவர் சகல சாஸ்திரங்களும் தெரிந்தவர். ஆதலால் இப்போது கண்ணன் ராதை இருவர் மீதும் ஒரு காவியத்தை இயற்றத் தொடங்கினார். அதுவே அஷ்ட பதி என்கிற கீதகோவிந்தம் ஆகும்.ஜெயதேவர் வசித்த ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு வியாபாரி வசித்து வந்தான். ஜெகநாத பக்தன். தான தர்மங்கள் சநதோஷமாக செய்பன். ஜெயதேவரைப் பற்றி அறிந்ததும் அவரையே குருவாக போற்றி பணிபவன். அவனும் அவனை சிஷ்யனாக ஏற்றார். ஒருநாள் அவரை தனது ஊருக்கு பல்லக்கில் சிச்ருஷை களும் செய்து ஒரு மாத காலம் அவர் அவனுக்கு உபதேசங்கள் செய்தார். ஊருக்கு திரும்பும்போது அவருக்கு தெரியாமல் அந்த வியாபாரி நிறைய வைர தங்க ஆபரணங்களை குரு பத்னி பத்மாவதிக்கு என்று குரு தக்ஷிணையாக ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு வண்டியில் அவரை மரியாதையோடு அனுப்பினான். அதை அவருக்கு தெரியாமல் வைத்தான். வண்டியை ஓட்டுபவனிடம் ”நீ குரு மாதாஜி யைப்பார்த்து நான் காணிக்கையாக இதெல்லாம் அனுப்பினேன் என்று அவரிடம் சொல்லி கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி வா” என்று சொன்னான். காட்டு வழியாக வண்டி சென்றது. வண்டிக்காரன் தனது வீட்டுக்கு அவசரமாக செல்லவேண்டி இருந்ததால் ஜெயதேவரிடம் தனக்கு அனுமதி தருமாறு கேட்டான். அவரும் ” நீ சென்று வா அப்பனே, நானே வண்டியை ஒட்டிக்கொண்டு ஊருக்கு செல்கிறேன் ” என்று அவனை அனுப்பி விட்டார். வண்டி காட்டுப்பாதையில் ஓடியபோது இரவு நேரத்தில் இரு திருடர்கள் ஜெயதேவர் தனியாக வண்டியில் செல்வதை கவனித்தார்கள். பணக்கார வியாபாரி அவரை வழியனுப்பியதை கவனித்த அவர்கள் ஏதோ பரிசுகளை அந்த பணக்கார வியாபாரி அவருக்கு தந்திருக்கிறான் அவற்றை அபகரிக்கவேண்டும் என திட்டமிட்டார்கள். திடீரென்று வண்டி முன் நின்று அவர்கள் வழி மறித்தனர். ஜெயதேவர் வண்டியை நிறுத்தினார். அவர்கள் திருடர்கள், வண்டியில் இருக்கும் பொருள் களை அபகரிக்க வந்திருப்பது தெரிந்ததும் ”நீங்கள் வழி மறித்தது என்னிடம் இருக்கும் பொருள்களை அபகரிக்கத்தானே, இதோ பாருங்கள் என்னிடம் ஒன்று மில்லை, இதோ இந்த வண்டியில் என்ன இருக்கிறதோ அதை யெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று வண்டியை விட்டு இறங்கி நடந்தார். திருடர்களின் ஒருவன் மற்றொருவரிடம் ”இந்த ஆளை தப்ப விட்டால் நாம் வழிமறித்து கொள்ளையடித்ததை ராஜாவிடம் சொல்லிவிடுவான். அப்புறம் நம் உயிருக்கு ஆபத்து” என்று அவரைக் கொல்ல முடிவெடுத் தார்கள். பரம சாதுவாக இருப்பதால் அவரைக் கொல்ல மனம் வரவில்லை. ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு ஆபரணங் களை, பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் கள்.பூரி ஜகநாத க்ஷேத்ரத்தை ஒட்டிய சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனின் ராஜ்ஜியம். அந்த ஊர் ராஜா ஒரு நாள் வீரர்களோடு வேட்டையாட காட்டுக்குச் சென் றான். தாகம். எங்காவது நீர் கிடைக்க தேடும்போது காட்டின் நடுவே ஒரு கிணறு தென்பட்டது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவன் எதிரே ஒரு பெரிய பாழும் கிணறு இருப்பதையும் அதில் இருந்து ஏதோ ஓசை கேட்பதையும் உணர்ந்தான். அதில் எட்டிப்பார்த்தான். ஒளிமிகுந்த தேஜஸோடு ஒரு யோகி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டான். ராஜா சிவபக்தன். யாரோ யோகி தபஸ்வி கிணற்றில் தவறி விழுந்து விட்டார் என்று பதறினான். அவனது ஆட்கள் உள்ளே இறங்கி அந்த யோகியை வெளியே .கொண்டு வந்தார்கள். ‘அடாடா இது என்ன கோரம்? அந்த யோகியின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு அல்லவோ இருந்தன. நான் இந்த நாட்டை நல்ல முறையில் ஆண்டு வருகிறேன். என் ஆட்சி யில் இப்படி ஒரு அக்ரமமா? இந்த யோகிக்கு யார் தீங்கிழைத்தது? என்று ராஜா விசனப்பட்டான். கண்களில் நீர் பெருகியது. கிணற்றில் கிடந்த ஜெய தேவரை வெளியே எடுத்தபோதும் அவர் சமாதி நிலையில் தான் இருந்தார்.சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஜெயதேவர் செவிகளில் மன்னரின் சொற்கள் விழவே, அவர் ராஜாவைப் பார்த்து ”அரசே, கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ்வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவன் பேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் அற்பமானது. கவலைப் படாதீர்கள், கோபப் படாதீர்கள், கண்ணீர் விடாதீர்கள் என்று உரைத்தார். ராஜாவுக்கு ஆச்சர்யம். யார் இவர் இவ்வளவு உத்தம ஞானி? கை கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வளவு சாந்தமா? பெரியார்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கின்றனர் என்று அவரைப் பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி ஜெயதேவ ரை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று தனது குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் ஜெயதேவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.”மன்னா, நீ உன் கடமையில் கவனம் செலுத்து. உன் பிரஜைகளின் நலன் தான் உன் நலன். முதலில் நீ உனது கடமையை செய். விஷ்ணு பக்தர்களை உபசரித்து அவர்களுக்கு வேண்டியக உதவிகளை செய். ஆத்ம விசாரணை அப்பறம் நேரம் இருந்தபோது நடத்து. ஜெயதேவர் ராஜாவுக்கு ராஜரீக முறைகளை, வழிகளை போதித்தார். அர்ஜுனன் கண்ணனின் உபதேசத்தால் கட்டுப்பட் டதைப்போல கிரவுஞ்ச ராஜாவும் ஜெயதேவர் சொல்லுக்கு பணிந்தான். சாதுக்கள், சந்யாசிகள் எல்லோருக்கும் பொன்னும் பொருளும் தானம் செய்தான்.க்ரௌஞ்ச மன்னன், சனியாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த ஜெயதேவரை வெட்டிய திருடர்கள் தாங்களும் விஷ்ணு பக்தர்களாக வேஷம் தரித்து நாமம், துளசி மாலை அணிந்து ராஜாவின் அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெய தேவரைக் கண்டதும் மனதில் எங்கே அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பயம் உண்டாயிற்று. ஜெயதேவர் அவர்களை அடையாளம் தெரிந்து கொண் டாலும் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, நன்கு கவனித்து, வேண்டிய பொருட்களை வண்டிநிறைய நிரப்பி ராஜாவிடமிருந்து பெற்றுக்கொண்டு செல்லு மாறு செய்தார். இரு காவலாளிகளை அவர்க ளுக்கு ராஜா துணையாக அனுப்பிவைத்தான்.பாதிவழியில் ராஜாவின் காவலாளிகளுக்கு அந்த திருடர்கள் மீது சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசி களை நோக்கி, “ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு விசேஷ கருணை காட்டுகிறார் என்று காரணம் கேட்க அந்த போலி சன்யாசிகள், “ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்த போது நல்லெண்ணம் இல்லாத ஜெயதேவர் அரசனுக்கு துரோகம் செய்வதை உணர்ந்த அந்த ராஜா ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரை காட்டிற்கு கூட்டிச் சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டார். ஆனால், நாங்கள் ஜெயதேவர் மேல் இரக்கம் கொண்டு அவரைக் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம. அந்த பொய்யன் தான் இப்போது நீங்கள் கண்ட ஜெயதேவர், நாங்கள் அவர் உயிரைக் காப்பாற்றி யதால் எங்களுக்கு நன்றிக் கடனாக உதவி செய்தார்” என்று கூசாமல் பொய் சொன்னபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பூமி பிளந்து போலி விஷ்ணுபக்தர்களாக வந்த அந்த திருடர்கள் இருவரும் அக்குழியில் விழுந்து மடிந்தனர். இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித் தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார்.துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர் களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம் தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக்கணமே ஜெய தேவர் தாம் இழந்த கைகளும் கால்களும் திரும்ப வரப் பெற்றார். கிரவுஞ்ச ராஜா, ஜெயதேவரின் மனைவி பத்மாவதியை அழைத்துவர பல்லக்கை அனுப்பினான்.