மஹாளய அமாவாசை . நங்கநல்லூர் J K SIVAN
நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும் ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம் 15நாள் மஹாளய அமாவாசையோடு அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது.
புரட்டாசியில் தான் வருஷா வருஷம் நவராத்திரி, மஹாளய அமாவாஸை முடிந்து அடுத்தநாள் பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை வீடுகளிலும், ஆலயங்களிலும், ஏன் வங்கிகளிலும், ஆபீஸ்களிலும் கூட கொலு பொம்மைகள் வண்ண வண்ணமாக கண்ணைப் பறிக்கும். தினமும் நைவேத்தியம், சுண்டல் உண்டு. பெண் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். அழகாக பளபளவென்று பாவாடைகள் அணிந்து எங்கும் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு ஓடும்.
மஹாளய அமாவாசை யை பொறுத்தவரை பதினைந்து நாட்களாக தொடர்ந்த மஹாளய பக்ஷம்
அமாவாசை யோடு நிறைவு பெறுகிறது. யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் வரவழைத்தால், அவர்களை மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறோம்.
அது போல் தான் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மைத் தேடி வரும், நாம் வரவேற்கும் முன்னோர்களுக்கு இந்த 15 நாட்களாக மஹாளய பக்ஷத்தில் நம்மைத் தேடி வந்து, நாம் கொடுக்கும் திதி, தர்ப்பணம் பெற்றுக்கொண்டு மனம் நிறைந்த ஆசிர்வாதம் அளிக்கிறார்கள். அவர்களை நாம் பார்க்க முடியாது. நாம் அழைக்கும் பிராமணர்கள் மூலம் அவர்கள் நம்மையும் நம் சந்ததியும் விருத்தியடைய வாழ்த்துகிறார்கள் என்பது காலம் காலமாக நமது நம்பிக்கை. நம் முன்னோர்கள் பரம்பரையாக செய்து நமக்கும் பழக்கப் படுத்திய வழக்கம். இதை விடாமல் பின்பற்றி அடுத்த தலைமுறைக்கும் பழக்கப்படுத்துவது நமது தலையாய பொறுப்பு. கடமை.
இறந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இந்தியர்கள் போல பித்ரு லோகத்திலிருந்து வந்தவர்கள் பித்ருக்கள். அவர்கள் சரீரமற்றவர்கள், உணவு உடை தேவைப்படாதவர்கள், பேசாதவர்கள், அவர்களுக்கு நாம் அளிப்பது எள்ளும் நீரும் தான். அவர்களின் நினைவால் மற்றவர்களுக்கு உணவோ வாழைக்காய், அரிசி பருப்பு தக்ஷிணை தாம்பூலம் அளிக்கிறோம். நாம் அவர்களை நன்றியோடு பாசத்தோடு நினைப்பதை நமது முன்னோர்கள் அறிகிறார்கள். அவர்கள் நம் மீது எப்போதும் கொண்ட பாசத்தோடு வாழ்த்தி ஆசி வழங்குகிறார்கள். இது அவசியமில்லையா? பித்ருக்கள் சாபம் என்று சொல்லாமல் ஏதோ ஒரு பித்ரு ‘தோஷத்தை’ எதற்கு நாம் பெறவேண்டும்?. சந்தோஷத்தையே பெறுவோமே .
நாம் உதவியர்கள், நம்மிடம் பலன் பெற்றவர்கள் நம்மால் உருவானவர்கள், வளர்ந்தவர்கள், நம்மை உதாசீனப்படுத்தினால், நம்மை அலக்ஷியப் படுத்தினால், நமக்கு எப்படி உள்ளம் திகு திகு வென்று எரிகிறது, கொதிக்கிறது. கோபம் மூக்குக்கு மேல் வரவில்லையா? இது நம் முன்னோர்க்கும் பெற்றோருக்கும் பொருந்துமல்லவா? அவர்கள் கோபத்துக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?
இந்த மஹாளய பக்ஷம் எப்போது வரும் என்று காத்திருந்து பித்ருலோக அதிகாரிகளிடம் அனுமதி, வருஷாந்திர, மாதாந்திர லீவ் பெற்றுக்கொண்டு நம்மைத் தேடி ஓடோடி வரும் முன்னோர்கள் வீடு தேடி வருவார்கள். ஆகவே நம்மைத் தேடி நமது முன்னோர்கள் ஆசை ஆசையாக ஓடி வருவார்கள். நம் வீட்டில் தானே அவர்களும் வளர்ந்து வாழ்ந்த குடும்பம். அதனால் தான் மஹாளய பக்ஷத்தில் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பார்கள் என நம்பிக்கை.நாம் வாழும் பரம்பரை வீடுகள் அவர்களுடையது தானே.
வந்தவர்களை நாம் மதிக்காவிட்டால், வா என்று அழைத்து நீரும் எள்ளும் கூட கொடுக்கா விட்டால் எவ்வளவு மனம் வருந்துவார்கள்?. உள்ளம் உடைந்து ”நீ உருப்படமாட்டே, நாசமாகத்தான் போவாய்” என்று நாம் சொல்வது போல் அவர்களையும் எதற்கு சொல்ல வைக்க வேண்டும்?
நாம் மற்றவரை அப்படிச் சொன்னால் அது சாபம் இடுவது தானே. நமது முன்னோர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே, அவர்கள் அவ்வாறு நினைப்பதில் சொல்வதில் என்ன தப்பு? அது தான் பித்ரு தோஷம். ரொம்ப சக்தி வாய்ந்தது. பல குடும்பங்கள் எவ்வளவு தான் உலகத்தில் செல்வம் வசதிகள் படைத்து இருந்தாலும் மனநிம்மதி இன்றி கஷ்டப்படுவதன் காரணம் இந்த பித்ரு சாபம் தான்.
பித்ருக்களின் ஆசி பெறவும், பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள, மஹாளய பக்ஷ காலத்தில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகிறது. வருஷத்தில் ஒருநாள் ஏன் பதினைந்துநாள் தினம் ஒரு மணிநேரம் செலவழிக்கக் கூடவா முடியாது?
மஹாளய பக்ஷ பித்ரு தர்ப்பணம் பண்ணினவனின் விருப்பங்கள் பெரியோர் ஆசியால் நிறைவேறும்.
கால சர்ப்ப தோஷங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். குடும்பம் சுபிக்ஷமாக இருக்கும்.
தர்ப்பைப் புல் புனிதமானது. மஹா விஷ்ணுவாக கருதப்படுவது. அதில் தான் வீட்டுக்கு வரும் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வணங்கி எள்ளும் நீரும் இறைக்கிறோம். ஸ்ராத்த நாளில் தர்ப்பை மேல் பிண்ட பிரதானம் செய்கிறோம்.
மஹாளய பக்ஷத்தில் இதர உறவினர்கள், வர்கத்தவர் அத்தனை பேர்களுடைய பேரையும் உறவையும் சொல்லி வணங்குகிறோம். ”திருப்தி அடை ,திருப்தி அடை ,திருப்தி அடை ” என்பதை ”த்ரிப்தியதா” என்று 3 தடவை சொல்கிறோம்.
வீட்டில் வளர்ந்த நாய் பூனை ஆடு மாடு கூட இறந்தபின் அடுத்த பிறவியில் அமைதியோடு திருப்தியாக நிம்மதியாக இருக்க, ஆசையாக, பாசமாக, மனதில் நினைத்து வேண்டிக் கொள்வதுமுண்டு. ஆத்மா ஒன்றே தான். அதற்கு உடல்கள் தான் வெவ்வேறு, பெயர்கள் அடையாளம் தான் வெவ்வேறு.
இன்னொரு விஷயம். பாற்கடலை தேவர்களும் ராக்ஷஸர்களை கடைந்தபோது ராக்ஷசர்களால் பல தேவர்கள் ரிஷிகள் மாண்டார்கள். அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது மஹாளயம் என்று சொல்வதுண்டு. அவர்களை முன்னோர்களாக தர்ப்பணம் செயகிறோம். தேவரிஷி கணங்கள் ரிஷிகளின் பத்னிகளுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். இதில் நவக்கிரஹங்கள் , அஷ்டதிக் பாலகர்கள், சகல தேவர்களும் சேர்த்தி. மஹாளய பக்ஷத்தில் தான் பாற்கடல் கடையப்பட்டது.