HEADLESS GANESH J K SIVAN

முகமற்ற  மூஷிகவாகனன்  —    நங்கநல்லூர்  J K  SIVAN 

உலகத்திலேயே  அதிக ஹிந்துக்களால்  வணங்கப்படும் தெய்வங்களில், அதிகமான  சிலைகள், விக் ரஹங்கள்   உள்ளவர் ஸ்ரீ விநாயக மூர்த்தி என்கிற  பிள்ளையார். எல்லோராலும்  விரும்பப்படுபவர். வினோத உருவம் கொண்ட கடவுள். அவரை எப்படி எப்படியெல்லாமோ உருவமாக  தயாரிக்கிறார்கள்.   கிரிக்கெட் வீரர், மோட்டார் சைக்கிள் ஒட்டி, கார்கில் ராணுவ வீரர்,  சங்கீத வித்துவான். மிருதங்க, வயலின், தபலா மாஸ்டர், இன்னும்  பல  உருவங்களில்.  எந்த உருவத்திலும் கண்ணையும் கருத்தையும் கவர்பவர் பிள்ளையார். விநாயகரை அழகிய பெண்ணாகக் கூட சிலைகளில் நான் பார்த்திருக்கிறேன். பாரத தேசத்தில் அப்படி விநாயகி ,கணேசனி யாக  கோவில் கொண்டிருப்பதை பற்றியும்  எழுதியிருக்கிறேன்.
எங்கள் வீட்டில்  200 வயது தாண்டிய விநாயகர் இருக்கிறார். விநாயகர் என்றால் யானைத்தலையோடு, கஜமுகனாக தான் நாம் அறிகிறோம்.  ஆதி விநாயகராக, மனித தலையோடு யானைத் தலை பெறுவதற்கு  முன்  அழகிய  சிலா ரூபத்தில் சில கோவில்களில் பார்க்கிறோம்.  இதைத் தவிர இன்னொரு விசேஷ கணேசரும்  இருக்கிறார். அவர் தலையில்லா  கணேசர். அப்படிகூட  ஒரு சில கோவில்களில் வடக்கே  வணங்கப்படுகிறார்.
ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தி அன்று எண்ணற்ற  களிமண் பிள்ளையார் விற்கப்  படுகிறார். இந்த வருஷம்  சின்ன  களிமண் பிள்ளையாரின் மதிப்பு   150  ரூபாய்.  காகித குடை  50 ரூபாய். எருக்கம்பூ மாலை  50 ரூபாய்.  ஒவ்வொரு வீட்டிலும்  அன்று  எருக்கம்பூ மாலையோடு, காகிதக் குடையோடு பூஜை பண்ணுகிறோம். களிமண் தானே என்று பார்க்காமல்  எவ்வளவு விலை கேட்டாலும் கொடுத்து குந்துமணிக் கண் கொண்ட  கணேசனை வீட்டுக்கு  கொண்டுவந்து சந்தோஷமாக பூஜை பண்ணுகிறோம். அன்றைய விசேஷ நைவேத்தியம் பிரசாதம்  கொழுக்கட்டை.
மதுரையில்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருக்கும்  ஒரு  பெரிய்ய்ய முக்குறுணி பிள்ளையாருக்கு  அன்று மிகப்பெரிய  ஒரு கொழுக்கட்டை தூக்கமுடியாமல் பெரிதாக தயாரித்து  நைவேத்தியம் பண்ணுவார்கள்.
இதை நான்  எழுத முக்கிய காரணம்.  மனித தலையோ,  யானைத்தலையோ கண்ட விநாயகரைப் பற்றியோ   சொல்ல  இல்லை.   தலையே  இல்லாத ஒரு கணேசனைப் பற்றி  தெரியப்  படுத்துவதற்காகத்  தான்.
வட  இந்தியாவில்  உத்தரகாண்ட்  பிரதேசத்தில் ஒரு ஆலயம். முன்காட்டியா  என்ற இடத்தில் ஒரு  ஆலயம் தலையே இல்லாத பிள்ளையாருக்காக இருக்கிறதே பார்த்ததுண்டா?  ருத்ரப்ரயாகை வரை செல்பவர்கள் அருகே உள்ள இந்த ஊருக்கும் செல்லவேண்டும்.    பார்வதி தேவி  மஞ்சளில் பிடித்து  உருவாக்கிய  சாதாரண  மனித தலையோடு இருந்த விநாயகன்  அவளுக்கு  குளிக்கும்போது  வெளியே   காவலாளி.  அன்னை பார்வதியின் அந்தரங்க வாசல்  காவலனாக, அவள் ஸ்னானம் செய்ய  உள்ளே  சென்ற போது   ”உள்ளே  யாரையும் அனுமதிக்காதே”என்று கட்டளை இட்டாள் .
அந்த நேரம் பார்த்து  சிவபெருமான் உமையைச்  சந்திக்க  வருகிறார். உள்ளே செல்ல விநாயகன்  அனுமதிக்க வில்லை. அவனுக்கு சிவனைத் தெரியாது.  கோபம் கொண்ட சிவன் விநாயகன் சிரத்தை துண்டிக்க பார்வதி விஷயம் தெரிந்து ஓடி வருகிறாள். சிவனைக்  கெஞ்சி  அவரருளால்  அருகே தெரிந்து  ஒரு  யானையின் சிரம்  வெட்டப்பட்டு கணேசன் தலையாகியது. இவ்வாறு கணேசன்  ஒரு யானை தலையோடு   உயிர் பிழைக்கிறான்,  அவன் யானைத் தலை பெறும்  முன்பு   தலையற்றவனாக  இருந்த நேரத்தின்  விக்ரஹம் தான் முன்காட்டியாவில்  உள்ள  இந்த ஆலய நாயகன் விநாயகன்.
யாத்ரிகர்கள்  சோன் பிரயாகை- கௌரிகாண்ட் சாலையில்  200 மீ.  நடந்து இந்த ஆலயம் சேரலாம்.   கேதார்நாத் போகும் கழுதை சவாரிகாரர்கள்  இங்கேயும்  போகும்   வழியில் செல்லலாம்.  ஒரு  அறிவிப்பு பலகையில்  ”சிவபுராணத்தில் சிவன்  தலையை கொய்த  இடம்”   என எழுதி தொங்க விட்டிருக்கிறார்கள்.
இது ஒரு யாருமே வராத கோவில் ஆகிவிட்டது.  எத்தனையோ புராண சம்பவ கோவில்கள் அனாதையாக  அறியப்படாததாக  இருப்பது நமது துரதிர்ஷ்டம் தான். ஆன்மீக வாதிகள் இதையெல்லாம் எடுத்து சொல்லலாமே.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *